டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‛கைதி நம்பர் 150. அறுபது வயதிலும் இளமை துடிப்போடு காணப்படும் சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் இது என்பது கூடுதல் சிறப்பு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தை தெலுங்கில் இயக்குனர் விவி விநாயக் இயக்கியுள்ளார். கைதி நம்பர் 150 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்று பார்ப்போம்.
சொகுசு வாழ்க்கைக்காக திருட்டு வேலைகள் செய்து சிறையிலிருக்கும் நாயகன் கத்தி சீனு(சிரஞ்சீவி), சிறையிலிருந்து தப்பி வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். இடையில் விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவும் சீனு, தன்னைப் போல் உருவம் கொண்ட சங்கர் எனும் அந்த நபரை போலீஸில் மாட்டி விட்டு தான் தப்பித்துக் கொள்கிறார். மேலும் தற்செயலாக சங்கராக அடையாளம் காணப்படும் சீனு, சங்கராக மாறுவதால் அவரது பணம் தனக்கு கிடைக்கும் எனும் ஆசையில் சங்கராக நடிக்க துவங்குகின்றார்.
இதனால் சங்கரின் கிராமத்து வாழ்க்கையும் விவசாயிகளுக்கான அவரது போராட்டமும் கத்தி சீனுவிற்கு தெரிய வருகின்றது. அதன் பின்னர் தனது திருட்டு தனத்தை நிறுத்திக் கொண்டு, விசாயிகளுக்காக கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டத்தில் கத்தி சீனுவும் குதிக்கினறார். இப்போராட்டத்தில் கத்தி சீனு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் கைதி நம்பர் 150 படத்தின் மீதிப்பாதி.
ஒன்பது வருடங்கள் சிரஞ்சீவி திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கூறினால் நம்ப முடியாத அளவிற்கு இருக்கின்றது அவரது நடிப்பு திறமை. திரையில் தோன்றும் சிரஞ்சீவி நடிப்பிலும், காமெடி டைமிங்கிலும், வனச உச்சரிப்பு நேர்தியிலும், சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷ முகம் காட்டும் இடங்களிலும் திரையரங்குகளில் கரகோஷ அதிர்வலைகளை உண்டாக்குகின்றார். குறிப்பாக டோலிவுட்டின் நடன சூராவளிகளான அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் போன்ற இளம் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளது சிரஞ்சீவியின் ஸ்டையிலான நடனம்.
பாடல் காட்சிகளில் குத்தாட்டும் போடும் நாயகி காஜல் அகர்வாலுக்கு பெரிதாக வேலையில்லை. சிரஞ்சீவியின் நண்பராக வரும் அலி காமெடி காட்சிகளில் சிரஞ்சீவியுடன் இணைந்து சுமாராக நடித்துள்ளார்.
படத்தின் பெரும் பலம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை. ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகி தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தெலுங்கு ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கின்றார் மனிதர்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தனது சொந்த தயாரிப்பு என்றாலும் படத்தின் தரத்தில் எந்த குறையும் வைக்கவில்லை என்பது திரையில் மிளிர்கின்றது. மேலும் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தந்தையின் மேக்கப் மற்றும் காஷ்ட்யூம் வேலைகளை சரிவர செய்து சிரஞ்சீவியின் வயதை மேலும் குறைக்க உதவியுள்ளார்.
படத்தின் மிகப்பெரும் பலவீனம் வில்லன் கதாபாத்திரம். சிரஞ்சீவியின் உச்ச நட்சத்திர அந்தஸ்திற்கு தக்கபடி வில்லனை தேர்வு செய்ய விவி விநாயக் தவறிவிட்டார் அல்லது ஹிந்தி நடிகரான வில்லனிடம் வேலை வாங்க தெரியவில்லை என்றுதான் கூறத்தோன்றுகின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் வில்லன் மற்றும் கத்தி சீனு சந்திப்புகள் உச்சத்தை தொடவில்லை என்பது நிதர்சனம். சாய் மாதவின் மாஸான வசனங்கள் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரசிகர்களை குறி வைத்தே எழுந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
திறமையை முன்னிருத்த வயது தடையில்லை என நிரூபித்துள்ள சிரஞ்சீவி கைதி நம்பர் 150-ஐ ஒன் மேன் ஷோவாக மாற்றியுள்ளார். தற்போதைய காலகட்டத்திற்கு தேவையான சமூக சிந்தனை கொண்ட கைதி நம்பர் 150 தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும்.
மொத்தத்தில், தெலுங்கிலும் ஷார்பான வெற்றியை பதிவு செய்துள்ளது கத்தி என்கிற கைதி நம்பர் 150. கூடவே சிரஞ்சீவியின் ரீ-என்ட்ரியும் செம ஷார்ப்!