ஜி.வி.பிரகாஷ் குமார், கிருத்தி கார்பந்தா , பாலசரவணன் , முனிஸ்காந்த் ,ஆனந்த ராஜ் , மன்சூரலிகான் , நான் கடவுள் ராஜேந்திரன் , ஆகியோர் நடிக்க ., கெனன்யா பிலிம்ஸ் & லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பேனரில் செல்வகுமார்.ஜெ, ரவிசந்திரன்.பி இருவரும் இணைந்து தயாரிக்க, பிரசாந்த் பாண்டிராஜ் எனும் புதியவரின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் "புரூஸ் லீ ".
ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது காதலி கிருத்தி கார்பந்தாவும் , காமெடி வில்லன் முனிஸ் காந்த் காசுக்காக செய்யும் சில கொலைகளை தங்களது காமிராவில் யதேச்சையாக பதிவு செய்து விட்டு அதை போலீஸிடம் போட்டுத் தர பரபரக்கின்றனர். இதை தெரிந்து கொள்ளும் முனிஷ் - ராமதாஸ், அந்த காமிராவுக்காக ஜி.வியின் காதலியை கடத்துகிறார். கூடவே ஜி.வியின் நண்பர் பாலசரவணனின் காதலியையும் தூக்கிப்போய் கட்டிப் போட்டு, அந்தக்காமிராவைக் கேட்டு ஜி.வி.க்கு மிரட்டல் விடுக்க , தங்கள் காதலிகளை கடத்தி வைத்திருக்கும் காமெடி வில்லன் முனிஸ் காந்திடமிருந்து தங்கள் காதலியரை மீட்பதற்காக ஜி.வி.பிரகாஷும், பாலசரவணனும், முனிஷின் முன்னாள் & இந்நாள் கூட்டாளிகள் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து ஸ்கெட்ச் போட்டு களம் இறங்குகின்றனர். இறுதியில் வெற்றி யாருக்கு ..? என்பது தான் புரூஸ் லீ படத்தின் கதையும் களமும்.
இந்தக் கதையையும், களத்தையும் காமெடியாக சொல்கிறோம்.... பேர்வழி... என எத்தனைக்கு எத்தனை காம நெடியாகவும் , முகம் சுளிக்கும் அளவிற்கு விரசமாகவும் சொல்ல முடியுமோ அத்தனை அயோக்கியத்தனமாக தந்திருக்கின்றனர்.புருஸ்லீ படக்குழுவினர் மொத்த பேரும்.... என்பது கொடூரம்.
புரூஸ் லீ எனும் காரண பெயருடன் நாயகர் ஜி.வி.பிரகாஷ், பிஞ்சு மூஞ்சில் நஞ்சு ... என்பது போல அடர் தாடி மீசை கெட்-அப்புடன் வழக்கம் போலவே குதிக்கிறார், பறக்கிறார் தாவுகிறார், உச்சஸ்ததியில் கத்துகிறார், ஹீரோயின் பின் சுத்துகிறார். விரசமான டயலாக்குகளைக் கூட வேக வேகமாக பேசுகிறார் ... ஆனால் , கடைசி வரை நடிக்க மட்டும் மறுக்கிறார்.
கதாநாயகி கிருத்தி கார்பந்தா, பாந்தமாய் இருக்கிறார். ஆனால், விடுவாரா ஜி.வி ? அவரையும் விரச வசனகாட்சிகளைப் பேச வைத்து திருப்திபட்டுக் கொள்கிறார். பாவம்.
காமெடி நண்பர் பாலசரவணனின் , காமெடியில் இந்தப் படத்தில் காம நெடி ஜாஸ்தி என்பது குடும்பத்தோடு, இப்படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்களுக்கு பெரும் தும்மலையும் துன்பத்தையும் வரவழைக்கும் .
ஹாலிவுட்டின் பெரும்பாலான வில்லன் கேரக்டர்களையும் தன் கெட்-அப் ஆகப் போட்டுத் திரியும் ராமதாஸ் -முனிஸ்காந்தின் வில்லத்தனம் ., இப்படத்தில் , காமெடியாகவும் இல்லாது ,சீரியஸாகவும் இல்லாது ரசிகனுக்கு எரிச்சலையே தருகிறது .
ஆனந்த ராஜ் , மன்சூரலிகான் , நான் கடவுள் ராஜேந்திரன் , ஷாதிகா , விஜய முத்து , சண்முகம் உள்ளிட்ட பிற நட்சத்திரங்களின் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளும்படி படத்தில் இல்லாதது பலவீனம்.
பிரதீப் இ. ராகவ் & மனோஜ் கியான் என இருவர் படத்தொகுப்பு செய்திருந்தும் இன்னும் படத்தில் கத்திரி போட வேண்டிய காட்சிகள் நிறைய இருப்பது கொடுமை. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் ஒரு குறையும் பெரிதாக இல்லை .
ஜி.வி .பிரகாஷ் குமாரின் இசையில் "நான் தான் ஒங்கப்பன்டா" , "சுகர் மின்ட்...", "சுமார் மூஞ்சிகுமாரு ... " உள்ளிட்ட பாடல்கள் புரிந்தும், புரியாமலும் இருப்பதுதான் பலமும் , பலவீனமும் எனலாம். படம் முழுக்க வலம் வரும் இரைச்சலில் பின்னணி இசை இருப்பதே தெரியவில்லை.
இப்படத்திற்கு கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் பிரசாந்த் பாண்டிராஜ், இயக்குனர் பசங்க பாண்டிராஜின் அசிஸ்டன்ட்டாம்... தயவு செய்து இனி அப்படி வெளியில் சொல்லாதீர்... என அவர் (டைரக்டர் பாண்டிராஜ்) கையெடுத்து கும்பிடாதிருந்தால் சரி... அந்தளவிற்கு விரசமாகவும் , நாராசமாகவும் இருக்கின்ற புருஸ்லீ யில் தேவை இல்லாத காட்சிகளும், தேவைக்கு அதிகமான காட்சிகளும் திணிக்கப்பட்டிருப்பது பெரும் பலவீனம்.
ஆக மொத்தத்தில் "புருஸ்லீ - நடிப்பு போதும் ஜி.வி.பி., என ரசிகனை கதற விடுகிறது... பாவம்!"