இளையராஜா இசையில், சாய் தன்ஷிகா நாயகியாக நடிக்க, எஸ்.பாணியின் எழுத்து, இயக்கத்தில், தாயின் தன்னிகரில்லா உன்னதம் சொல்லி, முற்றிலும் புதிய கோணத்தில் வந்திருக்கும் படம் தான் "எங்கம்மா ராணி".
இப்படத்தை, எம்.கே.பிலிம்ஸ் பேனரில் சி.முத்து கிருஷ்ணன் தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் தியேட்டர்ஸ் எஸ்.மதன் திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கிறார்.
ஊரும், உறவும், காதல் கணவனும் இருந்தும், இல்லாத சூழலில் தன் இரட்டை பெண் குழந்தைகளுடன் மலேசியாவில் அல்லல்படும் துளசி எனும் நாயகி சாய் தன்ஷிகா, கணவன் இல்லாத சூழலில் வேலைக்கு போனால் தான், தனக்கும், தன் குழந்தைகளுக்கும் மலேசிய விசா நீட்டிப்பு கிடைக்கும் எனும் போராட்ட சூழலில் வேலை ஒன்றையும் தேடிக் கொள்கிறார். இந்நிலையில், அபூர்வ நோய்க்கு தன் ஒரு பெண் குழந்தையை பலி கொடுக்கும் துளசி - சாய் தன்ஷிகா, மற்றொரு குழந்தையை அந்த அபூர்வ வியாதியில் இருந்து காப்பாற்ற என்ன செய்கிறார்? எவ்வளவு தூரம் போரடுகிறார்..?என்பது தான் "எங்கம்மா ராணி" படத்தின் கதையும், களமும், அதனுடன் கொஞ்சம் ஆவி, கொஞ்சம் பழிவாங்கல்... ஆகியவற்றை கலந்து கட்டி, அம்மா சென்டிமென்ட் படத்தை அமானுஷ்ய சக்திகள் அடங்கிய திகில் படமாக்க முயற்சித்திருக்கின்றனர்.
மலேசியாவில் தவிக்கும் இளம் இந்தியத் தாயாக, துளசியாக., சாய் தன்ஷிகா பதற்றமான காட்சிகளில் கூட, மிகவும் இயல்பாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, பக்காவாக நடித்திருக்கிறார். தனது, இன்னொரு குழந்தையையாவது, எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் எனும் பரிதவிப்பு காட்சிகளில், "உன்னோட ஆசைய தீர்த்துக் கோ... ஆனா, போலீஸ்ல எந்த பிரச்சினையும் இல்லாம பார்த்துக்கோ..." என மகளிடம் மனம் விட்டு பேசும் டயலாக்குகளும் அது மாதிரி காட்சிகளில் தன்ஷிகாவின் முகபாவங்களும் தேர்ந்த நடிகையரையே, மிஞ்சி, விஞ்சி இருக்கின்றன என்பது சிறப்பு!
தன்ஷிகாவின் இரட்டை பெண் குழந்தைகள் மீரா - தாராவாக வரும் வர்ணிகா - வர்ஷா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் பெரிதாய் மனம் கவர்கின்றனர்.
தன்ஷிகாவின் குழந்தைகளுக்கு திடீர் தாய் மாமா ஆகும் சொக்கலிங்கம் - நமோ நாராயணா, பாத்திரம் கூடுதல் ஹாசம். ப்ளஸ், வித்தியாசம்.
முரளியாக சங்கர் ஸ்ரீஹரி, ராஜனாக அணி முரளி, துளசியின் மாமனாராக இயக்குனர் மனோஜ்குமார், துளசியின் மாமியாராக ரிந்து ரவி, சென்னை சீப் டாக்டர் கம் புரபஸராக இப்பட மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே.அகமது உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கு சற்றே புதுசான, பூர்ணிமா ராமசுவாமியின், மலேசிய பாணி ஆடை வடிவமைப்பு கலர்புல் கலக்கல்.
ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு, பலே தொகுப்பும் அல்ல... பாடாவதி தொகுப்பும் அல்ல.
விஜயகுமாரின் கலை இயக்கத்திலும், கலரிஸ்ட் ஜெ.சிராஜின் வண்ணக்கலவை சேர்ப்பிலும் ஒளிப்பதிவாளர்கள் ஏ.குமார், எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் இருவரின் காமிரா, வளமான மலேசிய அழகை, மலைக்க வைக்கும் விதத்தில் மேலும் ஜோராக ஜொலிக்க வைத்திருக்கிறது. வாவ்!
இளையராஜாவின் இசையில் "அம்மாவென்று உலகத்தில் இல்லாட்டா....", "வா வா மகளே இன்னொரு பயணம்..." ஆகிய பாடல்கள், தென்றலாய் தாலாட்டும் அமுத கானங்கள்... என்றால், வழக்கம் போல் ஞானியின் பின்னணி இசை, இப்படத்தின் கதைக்கும், களத்திற்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது எனலாம்.
எஸ்.பாணியின் எழுத்து, இயக்கத்தில், தன்னை தன்ஷிகாவின் குழந்தைகளுக்கு திடீர் தாய் மாமனாக காட்டிக் கொள்ளும் நமோ நாராயணா, அதன்பின், அவரது சுக துக்கங்களில் பங்கெடுக்காததும் குறிப்பாக, தன்ஷியின் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்ததும் அந்த இறப்பு காட்சியில் பங்கு பெறாதது குறையாக தெரிகிறது. அதேபோன்று, டாக்டர் மற்றொரு குழந்தையை நோயில் இருந்து காப்பாற்ற மலேசியாவின் குளிர் பிரதேசத்திற்கு, அந்தக் குழந்தையை கூட்டிச் செல்ல சொன்னதும் சூடாக எதுவும் குடிக்கக் கூட, கூடாது... என்று எச்சரிக்கை செய்திருந்தும், தன்ஷிகா, தன் மகளை, கார் இன்ஜின் அருகே முன் சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு காரை ஓட்டி செல்வதும் லாஜிக்காக இடிக்கிறது...
அதே மாதிரி, இப்பட சப்ஜெக்ட்டுக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத "எங்கம்மா ராணி" எனும் டைட்டிலும் சற்றே பலவீனம். இது மாதிரியான லாஜிக் மிஸ்டேக்குகள், ஒரு சில காட்சிப் பிழைகளை கண்டு கொள்ளாது விட்டால், க்ளைமாக்ஸில் என்னதான் மூட நம்பிக்கை என்றாலும், தன் மகளுக்காக உயிரையும் விடத்துணியும் "எங்கம்மா ராணி ரசிகனுக்கு தியாக சொரூபினி" யாகத் தெரியலாம்!
ஆக மொத்தத்தில், எங்கம்மா ராணி - தியாக சொரூபினி - வசூல் ராணியா? பார்க்கலாம்!"