கௌதம் கார்த்திக், நெப்போலியன், ப்ரியா ஆனந்த், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, விஜி சந்திரசேகர்... உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, இளையராஜா இசையில், ராஜதுரை.சி இயக்கத்தில் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் வீர தீர பெருமையை பேசும்படி வந்திருக்கும் படம் தான் "முத்துராமலிங்கம்".
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒருகிராமத்தில் ஊர் பெரிய மனிதரும் அவரது இளம் வாரிசும் சிலம்ப விளையாட்டில் கைதேர்ந்தவர்கள். அப்பாவின் பேச்சை மீறிய இளைய மகனது சிலம்ப விளையாட்டு ஆர்வத்தால், குடும்பமே கொலை பழிக்கு ஆளாகி போலீஸு, கோர்ட்டு, கேஸு என்று அலைகிறது. பெரிய மனிதரான அப்பாவையும் சிறையில் அடைக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் இருந்து அப்பாவையும், குடும்பத்தையும் எப்படி இளைய மகன் மீட்டெடுத்து, தன் காதலிலும் ஜெயிக்கிறார்? என்பது தான் "முத்துராமலிங்கம்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
இப்படத்தில் முத்துராமலிங்கம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சான்றோரின் பெயருடன் வலம் வரும் கௌதம் கார்த்திக், குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக பாத்திரத்தின் கனம் தாங்காது ரசிகனை பதற விடுகிறார் பாவம். இருப்பினும், சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார்.
நெப்போலியனின் தோற்றமும், அவருடைய வீரமான நடிப்பும்தான்., இப்படத்திற்கு பெரிய பலம் நிறைவாக செய்திருக்கிறார் நெப்ஸ்.
நாயகி பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக, வழக்கம் போலவே ஒவர் ஆக்டிங்கில், ஒவர் முதிர்ச்சியாய் தெரிகிறார்.
விஜி சந்திரசேகர், வீரதீரபெண்ணாக வந்து மிரட்டியிருக்கிறார்.
சிங்கம்புலி முதல்பாதி கலகலப்பாக செல்ல கலக்கல் காமெடி செய்திருக்கிறார். பிற்பகுதி காமெடியில் விவேக் அவ்வளவாக சோபிக்கவில்லை. போலீஸ் அதிகாரியாக வரும்
வம்சி கிருஷ்ணா, பக்கத்து ஊர்தலைவராக வரும் பெப்சி விஜயன் ஆகியோரும் தங்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஒரு குறையுமில்லை.
இசைஞானி இளையராஜா பின்னணி இசை மற்றும் பாடல்கள் எண்பதைந்து தொன்னூறுகளின் கிராமத்து மணம் கமழ்வது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ராஜதுரை.சி தனது எழுத்து மற்றும் இயக்கத்தில் ஒரு சாதி, சமூகம் சார்ந்தவர்களின் வீரத்தை மைய கருவாக்கி இப்படத்தை எடுத்திருப்பதும், படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வீரதீரத்துடன் முஷ்டி மடக்குவதும் சற்று கூடுதலாகவே ரசிகனின் பொருமையை சோதிக்கிறது. அதே மாதிரி வீரம் செறியும் வசனங்கள், இந்தக் கதைக்கும், இப்படத்திற்கும் என்ன தான் பலம் என்றாலும் அதை சில கதாபாத்திரங்கள் பேசும் விதம் பதமாக இல்லாதது பாவமாக இருக்கிறது!
மொத்தத்தில், "முத்துராமலிங்கம்' - டைட்டிலைத் தவிர பிற விஷயங்களில் முத்தமிடும் வகையில் இல்லை... என்பது சற்று பெரிய வருத்தமே!"