புதுமுகங்கள் ஹரிஷிகேஷ், அர்ஜூன், ரசிகன் பார்த்து, பழகிய முகங்கள் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத், வெங்கட்.. ஆகியோர் நடிக்க, டி.விஜய ராகவேந்திராவின் தயாரிப்பில், எம்.சாய் பரத் இயக்கத்தில், அனிருத்தின் அதிரடி இசை பலம் சேர்க்க ரசிகனை பயமுறுத்த வந்திருக்கும் பேய்படமே "ரம்".
வேலூர் ஜெயிலுக்குள் தள்ளும் அளவிற்கு ரகசிய க்ரைம் ரிப்போர்ட்டுகளுடைய வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேனின் சட்டத்திற்கு புறம்பான கொலை மற்றும் கொள்ளை செயல்களால்., பாதிக்கப்பட்டு பலியான ஒரு நாயகி மியா ஜார்ஜ், ஒரு சிறுவன் உள்ளிட்ட மூவர் அடங்கிய முன்னாள் போலீஸ் அதிகாரியின் ஒட்டு மொத்த குடும்பத்தினரின் ஆன்மாக்களும்., அந்த இன்ஸ்பெக்டர் நரேன், தங்களை கொலை செய்த பங்களாவில் காத்திருந்து அவரை பலி கொடுத்து பழி தீர்க்க காத்திருக்கின்றனர்.
பாழடைந்து, பூட்டிக்கிடக்கும் அந்த பங்களாவிற்கு அஜால், குஜால் அயோக்கிய ‛இன்ஸ் நரேன் மீண்டும் வந்தாரா? மியா ஜார்ஜ்... உள்ளிட்டோரின் ஆவிகள், ஆன்மாக்கள்... நரேனை அந்த பங்களாவிற்கு திட்டம் போட்டு வரவழைத்து பழி வாங்கினவா..? இதில், புதுமுகங்கள் சிவா - ஹரிஷிகேஷ், குரல் - அர்ஜூன், பழகிய முகங்கள் ரியா - சஞ்சிதா ஷெட்டி, ராஜ் - விவேக், நேபாளி அலைஸ் சுரேஷ் - அம்ஜத், மந்திர தந்திரம் தெரிந்த வெங்கட்... ஆகியோரின் பங்கும், பணியும் என்ன? என்பது தான் "ரம்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்!
கதாநாயகர் சிவாவாக புதுமுகம் ஹரிஷிகேஷ், வாங்கு தோங்காக வளர்ந்து, ஆஜானுபாகு என்போமே... அந்தளவிற்கு காட்சியளிக்கிறார். அதில் பாதி அளவிற்காவது நடித்திருக்கிறாரா? என்றால் படத்தில் வரும் அவரது (சிவாவின்) பர்பாமென்ட்ஸ் பற்றி காமெடி நடிகர் விவேக் கமென்ட் அடிப்பாரே அந்த அளவிற்கே காட்சியளித்திருக்கிறார். பாவம் ரசிகன்.
கதாநாயகியராக சிவாவின் காதலி ரியாவாக சஞ்சிதா ஷெட்டி, நரேனால் கொலையுண்ட ஆவியாக, ஆன்மா துளசியாக வரும் மியா ஜார்ஜ், இருவரில் மியா மிரட்டியிருக்கிறார்... என்றால் சஞ்சிதா, சற்றே கிளாமரில் சாதித்திருக்கிறார்.
கொள்ளைக் கூட்டத்தின் அட்வைஸர் ராஜ்ஜாக காமெடி, காமநெடி கருத்து. "பன்ச்" பேசியபடி காமெடி செய்திருக்கும் விவேக், பல இடங்களில் வழக்கம் போல கடித்தாலும் சில இடங்களில் படத்தை தன் காமெடியால் தூக்கியும் நிறுத்தியிருக்கிறார்.
பொல்லாத போலீஸ் தாமஸாக இயக்குனர் மிஸ்கினின் ஆஸ்தான நாயகர் நரேன், வில்லனாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். மேலும், நேபாளி சுரேஷாக வளரும் நடிகர் அம்ஜத், குரல்வளம் இல்லாத குரலாக அர்ஜூன், மாந்தரீகம் தெரிந்த அறிந்த வெங்கட், உள்ளிட்டோர் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயன்றிருக்கின்றனர்!
சத்யராஜின் படத்தொகுப்பில், முன்பாதி திக்கற்றும், பின்பாதி, திக்திக்கென்றும் இருக்கிறது.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில், கதைப்படி, பகலிலேயே இரவாகத் தெரியும்படி படம் பிடிக்கப்பட்டுள்ள பங்களா மற்றும் கண்டெயினரில் போலீஸ் பாதுகாப்புடன் வரும் விலை மதிக்க முடியாத மதிப்புடைய ஆன்மாக்களை கட்டுப்படுத்தும் பவர்வுடைய மெர்குரி ஸ்டோன்களை ஹீரோ சிவா, ஹீரோயின் சஞ்சிதா தலைமையில் கொள்ளையடிக்கும் காட்சிகள் உள்ளிட்டவை ரசனை.
"பொல்லாத அழகியே..." உள்ளிட்ட பாடல்களும், அதிரடி பின்னணி இசையும் அனிருத்தை அடையாளப்படுத்துகின்றன !
எம்.சாய் பரத்தின் இயக்கத்தில், "என்னடா அஜித் - விஜய் பேன் மாதிரி அடிச்சிக்கிறீங்க... இது என்ன ரோடா? உங்க பேஸ்புக்கா...?", "விதியை நாம மாத்தி எழுதுற போது... அதற்கான விபரீத விளைவுகளையும் சந்தித்து தான் ஆக வேண்டும்", "இந்த துரோகிங்கக் கூடத்தான் தொழில் செய்யறோம். ஆனால், துரோகம் நடக்காம பார்த்துக்கணும்..." என்பது உள்ளிட்ட தத்துவ, வித்துவ "பன்ச்" டயலாக்குகள் ரசிகனை படத்தோடு லயிக்க வைத்தாலும், பல பேய் படங்களில் பார்த்து, சலித்த வழக்கமான ஆவி, ஆன்மாக்கள்... சம்பந்தப்பட்ட காட்சிகள், எண்ணற்ற லாஜிக் மிஸ்டேக்குகள், சிஜி உதவியுடன் கூடிய மேஜிக் டேக்குகள்... உள்ளிட்ட குறைகளும், முன் பாதி இழுவை காட்சிகளும் ரசிகனின் பொறுமையை சோதிப்பது "ரம்" படத்திற்கு பெரும் பலவீனம்!
ஆக மொத்தத்தில், "ரம் - முன்பாதி ரம்பம் - பின்பாதி, பயத்துடன் கூடிய ரம்மியம்!"