நடிகர்கள் : சஷாங் உதபூர்கர், சரத் சக்சேனா, கோவிந்த் நமதேவ்
இயக்கம் : சஷாங் உதபூர்கர்
பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாகி வரும் வேளையில் சமூக சேகவர், அன்னா ஹசாரேயின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் ‛அன்னா'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு ஈர்த்தது என்று இனி பார்ப்போம்...
சுதந்திர போராட்டத்திற்க முந்தைய காலக்கட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது. மகாராஷ்டிராவில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கிஷான் பாபுராவ் ஹசாரே. சின்ன வயதிலிருந்தே எதற்கும் பயப்படாத கிஷான், தன் மனதில் எழும் கேள்விகளை உரக்க எழுப்புபவர். நாட்டுக்காக போராட வேண்டும் என்ற அவரது எண்ணம், அவரை ராணுவத்தில் சேர வழிவகுக்கிறது, ஆனால் அங்கும் திருப்தி காணாத கிஷான், சுவாமி விவேகானந்தா, மகாத்மா காந்தி ஆகியோரால் ஈர்க்கப்பட்டு அந்த வழியையே இனி தன் வாழ்க்கை பயணமாக கொண்டு பயணிக்கிறார். அப்போது துவங்கிய அவரது பயணம் ஊழலுக்கு எதிராக போராடும் வரை கொண்டு செல்கிறது. ராணுவ வீரர், விவசாயி, ஊழல் எதிர்ப்பாளர், சமூகசேவகர் என கிஷானாக இருந்தவர், அன்னா ஹசாரேவானது எப்படி என்பது தான் படத்தின் மொத்த கதையும். ஆனால் அதை முழுமையாக சொல்லாததது தான் ஏமாற்றம்.
அன்னாவாக இயக்குநர் சஷாங் உதபூர்கரே நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதை விட அந்த கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
சஷாங் போலவே அவரது அம்மாவாக நடித்த அஸ்வினி கிரி மற்றும் உடன் நடித்த சரத் சக்சேனா, கோவிந்த் ஆகியோரும் ரசிகர்களை ஈர்க்கிறார்கள். இவர்களை போலவே பத்திரிகையாளராக வரும் தனிஷா முகர்ஜியும் தன் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்.
நடிகராக ஜொலித்திருந்த சஷாங், இயக்குநராக ஜொலிக்க தவறிவிட்டார். அன்னாவின் மொத்த வாழ்க்கையையும் படத்தில் காட்ட தவறியதோடு, அதை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்லவும் தவறிவிட்டார். படத்தில் பாடல்கள் இல்லை, ஆனால் பின்னணி இசையில் ஸ்வரம் இல்லை. ஒளிப்பதிவும் ஓகே., என்ற அளவிலேயே இருக்கிறது.
‛அன்னா' எனும் சாதாரண மனிதனின் அசாத்திய பயணத்தை இன்னும் அழகாகவும், சிறப்பாகவும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.