நான்கு பான்ஜோ இசை கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் தான் ‛பான்ஜோ' படத்தின் ஒன்-லைன் கதை, மராட்டிய இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ள இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார், ரசிகர்களை பான்ஜோ மகிழ்வித்ததா...? என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, நான்கு குப்பத்து பான்ஜோ இசை கலைஞர்கள் தாராத்(ரித்தேஷ் தேஷ்முக்), பேப்பர்(ஆதித்யா குமார்), வாஜா(ராம் மேனன்) மற்றும் கிரிஷ்(தர்மேஷ் எலண்டே). ஒருநாள் மிக்கி எனும் லுக் கென்னி இந்த நால்வரின் பான்ஜோ இசையை பதிவு செய்து அதை அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் கிரிஷ் எனும் நர்கிஸ் பக்ரிக்கு அனுப்பி வைக்கிறார். இவர்களின் இசையில் பிரமித்து போன கிரிஸ், அவர்களை கொண்டு இரண்டு பெரிய ஆல்பம் உருவாக்கிட திட்டமிட்டு மும்பை வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு டூரிஸ்ட் கைடாக தாரத்தே வருகிறார். தான் தேடும் பான்ஜோ கலைஞர் தாராத் என்பது தெரியாமலே அவருடன் மும்பையை சுற்றி பார்ப்பதுடன் அந்த நான்கு பான்ஜோ கலைஞர்களையும் தேடுகிறார் கிரிஷ். அதேசமயம் கிரிஸ்க்கு தாராத் கெட்டவராக தெரிகிறார். அதற்கு காரணமும் இருக்கிறது. தாராத், தன் பகுதி அரசியல்வாதியுடன் சேர்ந்து கொண்டு பெரிய பில்டர்ஸர்களிடம் மிரட்டி பணம் பறிக்கு வேலையையும் செய்கிறார். கிரிஸ், தாராத்தை கண்டுபிடித்து ஆல்பம் உருவாக்கினாரா...? ஸ்லம் பான்ஜோ கலைஞர்களான தாராத்தின் வாழ்க்கைதரம் உயர்ந்ததா...? என்பது படத்தின் மீதி கதை.
ரித்தேஷ், தாராத் எனும் ரோலில் பான்ஜோ இசை கலைஞராகவும், ரவுடி கேரக்டரிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் தான் நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை. மற்றபடி ஓகே.,
நர்கிஸ் பக்ரி தன் ரோலை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். நாளுக்கு நாள் அவரது நடிப்பு மெருகேறி வருவது தெரிகிறது.
ரித்தேஷ், நர்கிஸ் போன்றே பிற நடிகர்களான ஆதித்யா குமார், ராம் மேனன், தர்மேஷ் ஆகியோரும் தங்கள் ரோலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
நட்ராங், பாலாக் பலாக் போன்ற மராட்டிய படங்களை இயக்கிய ரவி ஜாதவ், முதன்முறையாக பான்ஜோ படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் புதிய கதைக்களத்தை கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டலாம். படத்தின் முதல்பாதி ரசிக்க வைக்கிறது, ஆனால் இரண்டாம் பாதியில் குறிப்பாக கடைசி அரைமணிநேர காட்சி ஜவ்வாய் இழுத்திருப்பது ரசிகனை சலிப்படைய செய்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக படத்தை பார்க்கும் போதும் அது பெரிதாக தெரியவில்லை. விஷால் சேகரின் இசை, இதமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது. மனோஜ் லோபாவின் ஒளிப்பதிவு ரம்மியம், படத்தொகுப்பும் ஓ.கே.,
நான்கு ஸ்லம் இசை கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை வித்தியாசமான முறையில் காண்பித்ததற்காக படத்தையும், இயக்குநரையும் ஒருமுறை பாராட்டலாம், பார்க்கலாம்.