Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

ப. பாண்டி

ப. பாண்டி,pa pandi
  • ப. பாண்டி
  • நடிகர்: ராஜ்கிரண்
  • தனுஷ்
  • நடிகை:ரேவதி
  • சாயா சிங்
  • இயக்குனர்: தனுஷ்
14 ஏப், 2017 - 09:54 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ப. பாண்டி

தந்தை - மகன் உறவை உன்னதமாக காட்டும் நோக்கில், நடிகர் தனுஷின் எழுத்து, இயக்கத்தில், முதன்முதலாக வந்திருக்கும் முத்தான, சத்தான படம்தான் "ப.பாண்டி".

வீட்டுக்கு வெளியே, காலடி எடுத்து வைத்தாலே நாலு பேருக்கு நல்லது சொல்ல, செய்யப் போய் ஏதாவது வெட்டி வம்பிழுத்து வரும் ரிட்டயர்டு சினிமா பைட் மாஸ்டர் அப்பா பவர் பாண்டி - ராஜ்கிரணால், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பில் மரியாதையான பணியில் இருக்கும் ராகவன் - பிரசன்னாவிற்கு சமுகத்தில் அடிக்கடி தலை குனிவு! இதனால், அவ்வப்போது கடிந்து கொள்ளும் பிரசன்னாவிடம், நீ அப்பனா? நான் அப்பனா..? என கேட்டு மல்லுக்கு நின்று விட்டு, ஒரு நாள், தன் உயிரான பேரப்பிள்ளைகள், மகன், மருமகள் எல்லோரையும் பிரிந்து, லெட்டர் எழுதி வைத்துவிட்டு தன் சேமிப்பு 25 லட்சம் பணத்துடன் பட படா பைக்கில் தன் இஷ்டம் போல் பவர் பாண்டி ராஜ்கிரண் தூர தேசம் பயணமாகிறார்.

அப்படி பயணம் கிளம்பியவருக்கு, இலக்கில்லா பயணம் என்பதை விட, கைகூடாமல் போன தன் முதல் காதலியை தேடி பயணிக்கும் இலட்சிய பயணம் என்பது இனிக்கிறது. தன் இளமை காலத்தையும், காதலியையும் பாண்டி - தனுஷ், பூந்தென்றல்-மடோனா செபாஸ்டியன் ரூபத்தில் அசை போட்டபடியே செல்லும் ராஜ்கிரண், இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக, தன் மாஜி காதலியை தேடிக் கண்டு பிடித்தாரா? காணாமல் போன அப்பாவைத் தேடி அலையும் மகன் பிரசன்னா குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா..? என்பது தான் பவர் பாண்டி எனும் ப.பாண்டி படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

மகனுடன் அடிக்கடி தலைமுறை இடைவெளி ஈகோ வாக்குவாதம் பண்ணும் மனைவியை இழந்த ரிட்டயர்டு சினிமா பைட் மாஸ்டர் பவர் பாண்டியாக ராஜ்கிரண், முதுமை முறுக்கை பக்காவாக காட்டியிருக்கிறார். பேரப்பிள்ளைகள் மீது அவர் காட்டும் பாசமாகட்டும், கஞ்சா பொட்டலம் விற்பவர்களுக்கு எதிராக சமூகத்தின் மீது அவர் காட்டும் அக்கறையிலாகட்டும், மருமகள் சாயாசிங்கை மகளாக பாவிக்கும் விதத்திலாகட்டும், பக்கத்து வீட்டு இளைஞன் வருணுடன் வாயாடுவதிலாகட்டும், பத்து பேரை ஒற்றை ஆளாய் சமாளிப்பதிலாகட்டும், எல்லாவற்றுக்கும் மேல் தான் பார்த்த தொழிலை, உயிருக்கும் மேலாக நேசிப் பதிலாகட்டும் சகலத்திலும், ராஜ்கிரண் நடிக்கவில்லை பவர் பாண்டியாக வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

பாண்டியாக, ப்ளாஷ்பேக்கில் வரும் கிராமத்து தனுஷ் செமகச்சிதம். ஆனால் இளம் வயது ராஜ்கிரணாக அவரை இமாஜின் செய்வது தான் ரசிகனுக்கு சற்றே சிரமமாக இருக்கிறது ஆரம்ப காட்சிகளில் என்பது பலவீனம். ஆனால், கதையோடு ஒன்றிய பின் அந்த சிரமம் காணாமல் போய் விடுவது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

ராஜ்கிரணின் வயதான முதல் காதலியாக ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் ரேவதி, இளமை காதலி, பூந்தென்றலாக மடோனா செபாஸ்டியன், ராஜ்கிரணின் மகனாக ஐ.டி நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பில் மரியாதையான பணியில் இருக்கும் ராகவனாக பிரசன்னா, அவரது ஆசை மனைவி பிரேமாவாக சாயாசிங், ரேவதியின் மகளாக டிடி, பூங்கொடி - வித்யுலேகா ராமன், வருண் - ரின்சன், மணி- தீனா, பூந்தென்றலின் தந்தையாக ஆடுகளம் நரேன், பாஸ்கராக பாஸ்கர், கஞ்சா வியாபாரி - சென்ராயன், துருவ் - மாஸ்டர் ராகவ், சாக்ஷா - பேபி சவ்வி.... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். அதிலும் அந்த பக்கத்து வீட்டு இளைஞன் வருணும், பேரன் துருவ்வும் செம்ம!

சில்வா மாஸ்டரின் சண்டை பயிற்சி, பவர் பாண்டிமாஸ்டருக்கு பக்காவாக ஒத்துழைத்திருக்கிறது.

பிரசன்னா ஜி.கே வின் படத்தொகுப்பு பக்காதொகுப்பு, வழக்கமாக தனுஷுக்காக கூடுதலாக ஒளிரும் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, இது தனுஷின் இயக்கம் என்பதால் இன்னும் கூடுதலாக ஒளிர்ந்திருக்கிறது. பேஷ், பேஷ்.

சான் ரோல்டனின் இசையில், செல்வராகவன், தனுஷ், ராஜூ முருகன் மூவரின் கைவண்ணத்தில் "புதியவானம் பறந்து பார்க்க ஏங்கும்...", "ஒரு சூரக் காத்து ஊரப் பார்த்து போகுது...", "வெண்பனிமலரே....", "பார்த்தேன்..." , "வீசும் காத்தோடு தான்..." உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ராகம். பின்னணி இசையும், காதை பதம் பார்க்காத இதம் .

நடிகர் தனுஷின் எழுத்து, இயக்கத்தில், இப்படி ஒரு சென்டிமென்ட் ஒரியன் டட் சினிமாவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்பா - மகன் தலைமுறை இடைவெளி மோதல்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பெரிதாக குறைகள் இன்றி, அசத்தலாக சொல்லியிருப்பதற்காகவே அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்!

மேலும், "மாஸ்டர் நீ உன் பையன் வாழ்க்கையையும் பேரப்பிள்ளை வாழ்க்கையையும் வாழுறியே தவிர உன் வாழக்கையை வாழுற மாதிரி தெரியலை....", "அதான் மாஸ்டர் வேலை வரலாம்... போலாம்... ஆனாவெட்டியா இருப்பது தென் நிரந்தரம்...", "பொம்பளைங்களை தெய்வமாகும்பிடுறது நம்ம நாடு அவங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கணும்.." என்பது உள்ளிட்ட "நச் - டச்" வசனங்களும் தனுஷின் எழுத்தில், சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

மொத்தத்தில் "ப.பாண்டி - பவர்புல் பாண்டி மட்டுமல்ல... மீனிங் புல் பாண்டியும் கூட என்பது மகிழ்ச்சி!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in