நடிகர்கள் : மனோஜ் பாஜ்பாய், மயூர் பதோல், ஸ்ருதி மராத்தே
இயக்கம் : சவுமேந்திர பதி
தயாரிப்பு : வைக்கம் 18 மோசன் பிக்சர்ஸ், கோடு ரெட் பிலிம்ஸ்
இதுவும் ஒரு விளையாட்டும் சம்பந்தப்பட்ட கதை தான். மாரத்தானை மையமாக வைத்து இந்திய சிறுவன் புத்தியா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் சவுமேந்திர பதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் இது. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, பிரஞ்சி தாஸ் எனும் மனோஜ் பாஜ்பாய், ஒரு ஜூடோ பயிற்சியாளர், தனியாக ஜூடோ பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது மனைவி கீதா எனும் ஸ்ருதி மராத்தே. இருவரும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஒருநாள் புத்தியா சிங் எனும் 5வயது சிறுவன் நன்றாக ஓடும் திறன் உடையவன் என்பதை கண்டறியும் பிராஞ்சி, அவனுக்கு உரிய பயிற்சி கொடுத்து பெரிய மாரத்தான் வீரனாக்கி ஒலிம்பிக்கில் பங்கேற்க வைத்து பதக்கம் வாங்கும் கனவில் இருக்கிறார். அதன்படி, புவனேஸ்வரிலிருந்து பூரிக்கு இடையேயான 65 கிமீ தூரத்தை 7 மணிநேரம் 2 நிமிடத்தில் கடக்கும் புத்தியா, சாதனை படைக்கிறார். ஆனால் புத்தியாவின் இந்த செயலுக்கு குழந்தைகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, புத்தியா எந்த மாரத்தான் போட்டியிலும் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கிறது. இதை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஜூடோ மாஸ்டராக பிரஞ்சி தாஸாக வரும் மனோஜ் பாஜ்பாய், நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது சினிமா கேரியரில் இந்தப்படம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்பது மட்டும் உண்மை.
சிறுவனாக வரும் மயூர், நடிப்பில் தானும் சளைத்தவன் அல்ல என பிச்சு உதறியிருக்கிறார். இவர்கள் இருவரை போலவே மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக வரும் ஸ்ருதியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் சவுமேந்திர பதியின் இயக்கத்தில் குறையேதும் இல்லை என்ற அளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பக்காவாக அமைந்துள்ளது. அதேசமயம், இசை கொஞ்சம் சுமார் தான்.
மொத்தத்தில், புத்தியா சிங் பார்ன் டூ ரன் - அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம்!