தினமலர் விமர்சனம்
கோலி சோடா நடிகர் ஸ்ரீ ராம்., புதுமுக நடிகை ஆரா ஜோடியாக நடிக்க, விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜித் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் திரைப்படம் இந்த ‛பைசா'.
பாட்டியின் ஆதரவில் ஆதரவற்ற குப்பத்து நண்பர்களுடன் சென்னையில் குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் ஸ்ரீராம். ஒரு கட்டத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த பாட்டி அமரர் ஆகிவிட., இவர் மட்டும் குப்பத்து குடிசையில் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார் நாயகி ஆரா.
ஒரு நாள் ஆரா தான் வேலை செய்யும் விற்பனை நிலையத்தின்., ஈ.பி.பில்லை கட்ட பணத்தையும், கார்டையும் எடுத்து செல்கிறார். அப்போது விளையாட்டுத்தனமாக பணத்தையும், ஈ.பி. கார்டையும் தொலைத்து விடுகிறார். அந்த பணமும் ஈ.பி. கார்டும் குப்பை பொறுக்கும் இளைஞன் ஸ்ரீராம் கையில் கிடைக்கிறது. ஆரா அதை தேடுவது கண்டு ஸ்ரீராம் பணத்தைக் கொடுக்கிறார். அதனால், அவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. இருவரும் ஓருயிர் ஈ.ருடலாக காதலித்து வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், பெரும் தொழில் அதிபர் மதுசூதனன், தன்நம்பிக்கைக்குரிய ஆட்கள் மூலம் பதுக்கிய நூறு கோடி கருப்பு பணம், குப்பை பொறுக்கும் போது ஸ்ரீராமுக்கு கிடைக்கிறது. பணத்தை பாதுகாக்கவும் முடியாமல் ஜாலியாக செலவு செய்யவும் முடியாமல் தடுமாறி வருகிறார் ஸ்ரீராம். காணாமல் போன பணத்தை, மதுசூதனின் கையாள் ராஜசிம்மன் வலை வீசி தேடி அலைகிறார். இறுதியில், கோடீஸ்வர தொழில் அதிபர் மதுசூதனிடமும், அவரது அடியாள் ரவுடி ராஜசிம்மனிடமும் ஸ்ரீராம் கிடைத்தாரா? பணத்தை வைத்திருந்த ஸ்ரீராமுக்கு என்ன நடந்தது..? ஆராவும், ஸ்ரீராமும் ஒன்று சேர்ந்தார்களா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு, இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராத, பைசா பெறாத காட்சியமைப்புகளின் மூலம் பழைய பாணியில் விடை சொல்லியிருக்கிறது "பைசா" படத்தின் மீதிக்கதை.
'பசங்க', 'கோலிசோடா' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீராம், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். குப்பை பொறுக்கும் குப்பத்து பையனாகவும், ஜாக்பாட் டாக நூறு கோடிபணம் கிடைத்ததும் ஆடம்பரமாக செலவு செய்யவும் முடியாது , பக்காவாக பாதுகாக்கவும் முடியாத பத்தாம் பசலி பையனாகவும் பலே சொல்லுமளவிற்கு பொருந்தி நடித்திருக்கிறார்... ஸ்ரீராம். முந்தைய படங்களைக் காட்டிலும் இவருடைய நடிப்பில் ஒவர் ஆக்டிங் இல்லாதது ஆறுதல்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுகம் ஆரா, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான, ஆழகான நடிப்பையும் கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் நச்சென்று ரசிகனின் நெஞ்சம் நிறைக்கிறார்.
பெரும் செல்வந்தராக , கருப்பு பண பதுக்கல் மன்னனாக மதுசூதனன்., பெயரிலும் , நடை , உடை , பாவனைகளிலும் சமீபத்தில் இந்திய அரசால் தேடப்படும் தொழில் அதிபரை பிரதிபலிக்கும் படி நடித்திருக்கிறார்.
படம் முழுக்க தன்னுடைய வில்லத்தனத்தால் சற்று ஓவராகவே மிரட்டி இருக்கிறார் மதுசூதனின் கையாளாக , ரவுடியாக வரும் ராஜசிம்மன். இழந்த பணத்தை தேடும் இவரது நடிப்பு, சில இடங்களில் வாவ் .சில இடங்களில் உவ்வே!
மயில்சாமி, நாசர், சென்ட்ராயன் உள்ளிட்டோர், தங்கள் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜே.வி. இசையில் பாடல்கள் சுபராகம். பின்னணி இசையையும் சிறப்பான ரசனை. வேல் முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கா பலம்.
குப்பை சேகரிக்கும் ஒருவனுக்கு கோடி, கோடியாய்பணம் கிடைத்தால் வாழ்க்கை எப்படி திசை மாறும்? என்பதை கருவாக வைத்து அப்துல் மஜித், இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், இந்த காலத்திற்கேற்ற ஹாஸ்யம் ,சுவாரஸ்யம் அவரது திரைக்கதை, இயக்கத்தில் இல்லாததால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பைசாதேறவில்லை! பாவம்!
மொத்தத்தில், "பைசா - செல்லாக்காசு!"