அமுதவாணன், ஜார்ஜ் விஜய், சதீஷ் ஆர்.வி, யோகானந்த், ஆல்யாமனாஸா, யோதிஷ் ஷிவம், பில்லி முரளி, மகாநதி ஷங்கர், மாறன்.... ஆகிய அறிந்த, அறியாத முகங்கள் இணைந்து நடிக்க., இவர்களோடு ஒரு அதிர்ஷ்ட நாயும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, சதீஷ் ஆர்.வி.யின் எழுத்து இயக்கத்தில், காமிரா பாக்ஸ் பிக்சர்ஸ்", "காவ்யா சினிமாஸ்", "ரிச்மீடியா சொலூயூஷன்ஸ்" ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து வழங்கியிருக்கும் படம் தான் "ஜூலியும் 4 - பேரும்".
கதைப்படி, இண்டர்நேஷனல் அளவில் அதிர்ஷ்டநாய் கடத்தல் பிஸினஸில் கோடி கோடி சம்பாதிக்கும் டிக்கல்லோவும், ரெயின்போவும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரும் ஒரு கோடி விலையுள்ள காது மடலில் மூன்று ஸ்டார் உள்ள அதிர்ஷ்ட நாயான ஜுலியை, பெரும் கோடீஸ்வரரின் வாரிசு மணிஷாவிடம் விற்று விட்டு, அந்த நாயை அவரிடமிருந்து கடத்திச் சென்று வேறு இடத்தில் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்க தங்களது படை பரிவாரங்களுடன் காத்திருக்கின்றனர்.
இது ஒருபக்கமென்றால், மற்றொரு பக்கம், விரும்பிய வேலை வாங்கித் தருவதாக உறுதி கொடுத்த, உண்மைச் செல்வன் எனும் ஒரு உலக மகா அயோக்கியனிடம் கிராமத்தில் இருந்து வந்து, பல லட்சங்களை இழக்கின்றனர் முத்து, டேவிட், பாண்டி ஆகிய மூவரும். அவர்களுக்கு அடைக்கலம் தந்து உதவுகிறார் ஆட்டோ டிரைவர் மாணிக்கம். இந்நிலையில் அந்த அதிர்ஷ்ட நாய் ஜுலி, இந்த நால்வர் வசமும் வந்து சேர, நால்வரும் துப்பாக்கியும் கையுமாக திரியும் வில்லன்களிடம் சிக்கினரா? கதாநாயகிக்கு உதவினரா...? அந்த நால்வரில் யார்? நாயகியுடன் காதலில் விழுந்தது..? இவை எல்லாவற்றுக்கும் மேல் அதிர்ஷ்ட நாய் அவரவர் வசம் இருக்கும் போது யார், யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடித்தது..? என்பது தான் "ஜூலியும் 4 பேரும்" படத்தின் கதையும் காட்சிப்படுத்தலும். கூடவே, அதை ரொம்பவே வித்தியாசப்படுத்தி காட்டுகிறேன்.... பேர்வழி, என காட்சிக்கு காட்சி ரசிகனை படுத்தலும், இப்படக் குழுவினரால் நடந்தேறியிருப்பதும் தான் கொடூரம்!
கதையின் நாயகர்கள் முத்துவாக அமுத வாணன், மாணிக்கமாக ஜார்ஜ் விஜய், டேவிட் - சதீஷ் ஆர்.வி, பாண்டி - யோகானந்த் நால்வரும், இயல்பாக நடிப்பதாக நினைத்து ஒவர் ஆக்டிங்கை ஒரேயடியாக வழங்கி சலிப்பு தட்டுகின்றனர்.
அழகிய நாயகியாக மணிஷாவாக ஆல்யா மனாஸா, அம்சம். ஆனால், நாயை கொஞ்சுவது தவிர அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படாதது வருத்தம்.
வில்லன்கள் டிக்கல்லோ - யோதிஷ் ஷிவம், ரெயின்போ - பில்லி முரளி இருவரும் அவர்கள் வரும் இருட்டு பின்னணி பேக் - ரவுண்ட் லைட்டிங்கில் மிரட்டி அதன் பின் ஆமாம் போங்கப்பா... என புலம்ப விட்டிருக்கின்றனர். கடுமையான, காமெடி இன்ஸ் இனியவனாக வரும் - மகாநதி ஷங்கர் டாக் குமார் - மாறன். உள்ளிட்டோர் இதற்கு முன் பலர் பல படங்களில் செய்ததையே செய்து சலிப்பைத் தருகின்றனர்.
சரி, இவர்களுடன் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கும் அந்த அதிர்ஷ்ட நாயாவது நடித்திருக்கிறதா ? என்றால் அதுவும் இல்லை... என்பது பெரும் பலவீனம்.
சரண் சண்முகத்தின் படத்தொகுப்பில், அவரது கத்திரிக்கோல் படத்தில் வரும் நாய் ஜுலி மாதிரியே அடிக்கடி காணாமல் போயிருக்கும் போல...
ரோவின் பாஸ்கரின் ஒளிப்பதிவில் ஒப்பனிங் சீன் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பிரமாண்டம், பிரமாதம். அதன்பின் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக கடுப்பேற்றுகின்றது ரகு சரவண், குமார் ஆகிய மூன்று பேரா அல்லது ஒருவருக்கே மூன்று பேரா தெரியவில்லை.. ஒரு பேர் சொல்லும் படிக்கூட இப்பட இசை, குறிப்பாக பின்னணி இசை இல்லாதது கொடுமை! ஆனாலும், "ஐகான் நீயே... என் ஐகான் நீயே....", "நாலு காலு உசுருங்கோ நாலு பேரு தொலைச்சங்கோ..." உள்ளிட்ட பாடல்கள் ரசனை என்பது ஆறுதல்!
சதீஷ் ஆர்.வி.யின் எழுத்து, இயக்கத்தில் "மனுசங்க பொறந்தப்பவே கூடவே பிறந்த இன்னொரு உயிரினம் நாய், எந்த வகை நாய் என்றாலும் இடது காது உள்பக்க மடல்ல மூன்று ஸ்டார்கள் இருந்தால் அது லக்கி டாக்..." என அசத்தலான அறிமுக உரை காட்சிகளுடன் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிப்படுத்தலுடன் ஆரம்பமாகும் ஒப்பனிங் காட்சி மட்டுமே இறுதிவரை மனதில் நிற்கிறது. அதன்பின் வரும் சீன்கள் மிகவும் சீப்பாய் ஏனோ தானோ எனும் ரீதியில் படமாக்கப்பட்டுள்ளதும் பெருங்கொடுமை. அதிலும், மகாநதி சங்கரின் காவல் நிலைய விசாரணையில் சுற்றி சுற்றி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த காவல்நிலைய வாயுத் தொல்லை காட்சியைப் பார்த்து துளியும் சிரிப்பு வரவில்லை ரசிகனுக்கு, பெரும் கடுப்பும், வயிற்று குமட்டலும் தான் வருகிறது! இயக்குனரின் ரசனை என்னே ரசனை எனும் எரிச்சலும் கூடுகிறது என்பதே நிதர்சனம் .
ஆக மொத்தத்தில், "ஜூலியும் 4 பேரும் - தியேட்டரும் 4 - ரசிகரும்... எனும் அளவிலேயே இப்படம் ஒடும் திரையரங்கில் கூட்டம் நிரம்பியிருக்கும் என்பது பாவம்!"