ஓமங் குமார் இயக்கத்தில், ரன்தீப் ஹூடா, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சரப்ஜித். பாகிஸ்தான் சிறையில் வாடிய இந்தியரான சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையையும், அவரை காப்பாற்ற அவரது தங்கை எடுத்த முயற்சிகளையும் மையமாக வைத்து வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, தல்பீர்கவுர் எனும் ஐஸ்வர்யாராய், தொலைந்து போன தனது சகோதரர் சரப்ஜித் சிங்கான ரன்தீப் ஹூடாவை தேடுகிறார். ஒருக்கட்டத்தில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருப்பது தெரியவ வருகிறது. போதைபொருள் வைத்திருந்தாக எல்லை தாண்டிய சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் தள்ளுகிறது. அதுமட்டுமல்ல அவர் ஒரு பயங்கரவாதி என்று சொல்லி மரண தண்டனையும் அளிக்கிறது. தன் சகோதரன் சரப்ஜித்தை மீட்க போராட்டத்தில் இறக்குகிறார் தல்பீர் எனும் ஐஸ்வர்யா. அவருக்கு துணையாக சரப்ஜித்தின் மனைவியாக நடித்துள்ள சுக்ப்ரீத் எனும் ரிச்சா சந்தாவும், அவரது வாரிசும் களமிறங்குகிறார்கள். இறுதியில் ஐஸ்வர்யா, தன் சகோதரனை மீட்டாரா என்பதை விவரிக்கிறது சரப்ஜித்தின் மீதிக்கதை.
ரன்தீப் ஹூடா, சரப்ஜித் சிங்காக நடிக்கவில்லை, சரப்ஜித்தாகவே வாழ்ந்திருக்கிறார். சிறையில் அவர் படும் இன்னல்கள், தனது சகோதரியிடம் தனது நிலையை எண்ணி கதறும் காட்சிகள் என மிரட்டியிருக்கிறார் ரன்தீப்.
ஐஸ்வர்யா ராய், தல்பீர் கவுர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்ச்சி பொங்க போராட்டக்களத்தில் ஆவசேமாய் பேசுவது, தன் கோபத்தை வெளிப்படுத்துவது என ஐஸ்வர்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இருந்தாலும் சில இடங்களில் அவரது நடிப்பு ஓவர் டோஸாக ஆகிவிடுகிறது.
ரிச்சா சாதாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை, இருந்தாலும் அவர் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அவரைப்போலவே தர்ஷன் குமாரின் நடிப்பும் ஓ.கே.,
மேரி கோம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் ஓமங்குமார். ஆனால், மேரி கோம் படத்தில் இருந்த விறுவிறுப்பு சரப்ஜித் படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு உணர்வுப்பூர்வமான படம், ஆனால் பல இடங்களில் அந்த உணர்வுப்பூர்வமான காட்சிகள் செயற்கையாக தெரிகிறது. சரப்ஜித் சிங் யார் என்று அடையாளம் காணவே முதல்பாகத்தில் ஏகப்பட்ட குழப்பம். இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்கிறது. திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு எல்லாம் சுமார் தான், படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது.
சரப்ஜித் படத்தில் சிறையில் அவர் வாடிய சி்த்தரவதை காட்சிகளை காட்டிலும், அவரை காப்பாற்ற ஐஸ்வர்யா போராடியது காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக படத்தை பார்க்கும்போதும் சரப்ஜித் படம் நன்றாக உள்ளது, ஒருமுறை பார்க்கலாம்.