Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

எனக்கு இன்னொரு பேர் இருக்கு

எனக்கு இன்னொரு பேர் இருக்கு,enakku innoru per irukku
டார்லிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜிவி.,யுடன் சாம் ஆண்டன் இணைந்துள்ள படம் இதுவாகும்.
18 ஜூன், 2016 - 15:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எனக்கு இன்னொரு பேர் இருக்கு

தினமலர் விமர்சனம்


ஜி.வி.பிரகாஷ் இசைத்து, நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படமே "எனக்கு இன்னொரு பேர் இருக்கு. லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், சாம் ஆன்டன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது.


இரத்தத்தைப் பார்த்தாலே வலிப்பு மாதிரி வந்து சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லும் ஹீரோவுக்கு, நார்த் மெட்ராஸ் பெரும் தாதா நைனாவின் மகளை பார்த்தவுடன் ஏற்படும் காதல், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஈஸியாக திருமணத்தில் முடிகிறது. அதன் பின்னும் இரத்தம் பார்த்தால் ஹீரோ சத்தம் போடுகிறாரா? அல்லது மொத்தமாக சண்டையில் குதித்து தாதாவின் மகளான ஹீரோயினிடம் முத்தம் பெறுகிறாரா..? என்பது தான் இப்படக்கரு.


கதைப்படி, சென்னை ராயபுரம் பகுதியில் நைனா என்ற பட்டப் பெயரோடு ஏரியாவையே தன் கைக்குள் வைத்திருக்கும் தாதாவாக இருக்கும் பருத்தி வீரன் சித்தப்பு சரவணனுக்கு ஆண் வாரிசு இல்லை, மகள் மட்டுமே. வயசாகி விட்டதால் இனி ரவுடித்தனம் செய்து ஏரியாவை கட்டுக்குள் வைக்க முடியாத நிலையில்,

தன் மகள் ஹேமா எனும் ஆனந்திக்கு ஒரு இளம் ரவுடியை திருமணம் செய்துவைத்து, மருமகனை ஏரியா நைனாவாக்கி தன் கவுரவத்தை காத்துக் கொள்ளத் திட்டமிடுகிறார் அவர்.


ஆனால் அவரது காமெடி அல்லக்கைகளான கருணாஸ், யோகி பாபு இருவரும் ரத்தம் பார்த்தாலே வலிப்புவந்து மயங்கி, சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்கிற பயந்தாங்கொள்ளி பையன் ஜானி எனும் ஜி.வி.பிரகாஷ் குமாரை ஒரு பெரிய ரவுடி என்று தவறாக கருதி கூட்டி வந்து நைனா சரவணன் முன் நிறுத்துகிறார்கள். நைனாவும் அதை அப்படியே நம்பி, அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்கிறார். (அதே சமயம் ஜி.வி.யும் சில நாட்களுக்கு முன் நைனாவின் பெண் வாரிசு ஹேமா எனும் ஆனந்தியை வேறு இடத்தில் பார்த்து காதல் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதால் அத்திருமணம் உடனடியாக இனிதே நடந்தேறுகிறதென்பது... குறிப்பிடத்தக்கது).


ஒரு கட்டத்தில் நைனா தாஸ் - சரவணனின் தொழில் எதிரிகள் நைனா - சரவணனின் குடும்பம், மற்றும் அவரது அடியாள் கூட்டம் எல்லாரையும் போட்டுத் தள்ள முடிவு செய்ய, ரத்தம் பார்த்தாலே புலம்பி, மயங்கி விழும் அந்தப் பையன் ஜானி எனும் ஜீ.வி.பிரகாஷ்., அதிலிருந்து தன்னையும் காத்துக் கொண்டு, தாஸ் - சரவணனையும் தங்கள் குடும்பத்தையும் காத்து வெற்றி பெறுகிறாரா? அல்லது வழக்கம் போல இரத்தம் பார்த்து பித்தம் ஆகிறாரா..? என்பது தான் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மொத்தக்கதையும்.


ஜானியாக ஜி.வி.பிரகாஷ் குமார், உற்சாகமாக ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், பேசுகிறார். ஆனால், நடிப்பு மட்டும் மனிதருக்கு வரவே மாட்டேன் என்கிறது பாவம். ஒரு இடத்தில் ஜி.வி.யின் கூடவே முன்பாதி படம் முழுக்க வரும் நண்பர், உன்னை காதலிச்சுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செய்துக்கப்போறாளே... எனக்கேட்க தன் சகாவிடம் ஜி.வி., அதான் மச்சான் பொண்ணுங்க... என்பதும், என்ன மச்சான் சிரிக்கிற அதான் மச்சான் பசங்க... என்பதும் தேவையே இல்லாமல், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பாதிப்பில் வலிய திணிக்கப்பட்ட காட்சியாகத் தெரிகிறது.

.

தாதா - நைனா சரவணனின் மகளாக, கதாநாயகி ஹேமாவாக ஆனந்தி எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி பார்ப்பது, ஒரே மாதிரி இளிப்பது... என எந்த புதுமாதிரியும் இல்லாமல் வந்து போகிறார். ரசிகன் நொந்து போகிறான். ஆனந்தி ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல், இத சாக்கா வச்சு பாயணும்னு நினைச்சே உன்ன வச்சி செஞ்சிடுவேன்.... என்பதும், அதற்கு கல்யாணம் ஆன வெர்ஜின் பசங்க சாபம் உங்களை சும்மா விடாதுடி... என்பதும், கஷ்டம்டா சாமி எனும் அளவிலேயே இருக்கிறது.


த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் என்னை அறியாமலேயே என்னை கவர்ச்சியாக காட்டி விட்டார்கள், அதற்கு ஜி.வி.பிரகாஷும் உடந்தை..." என குற்றம் சுமத்திய கயல் ஆனந்தியா இப்படி? மீண்டும் ஆனந்தமாக ஜி.வியுடன் ஆட்டம் போட்டிருக்கிறார் அய்யகோ!


இது மாதிரி ஜிவி பிரகாஷ் இன்னும் திரிஷா இல்லன்னா நயன்தாரா ஹேங் ஓவரில் இருந்து வெளியே வரவில்லை... என்பதற்கு இப்படம் முழுக்க ஏராளமான காட்சிகள் பரவி விரவி கிடப்பது... பரிதாபமாய் பல் இளிக்கிறது பாவம்.


படத்தின் ஹீரோ ஜி.வி பிரகாஷ் என்றாலும் இப்படக்கதையின் ஹீரோவாக நைனா தாஸாக வரும் சரவணன் சிறப்பாக நடித்து உள்ளார். அவர் மாதிரியே குறிப்பாக சரவணனின் நம்பிக்கைக்குரியவராக வரும் சார்லியும் தன் உருக்கமான நடிப்பால் அந்த சிறிய கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார். கூடவே சார்லியின் ஜோடியாக ஒரு சில சீன்களிலேயே வரும் அங்காடித்தெரு சிந்துவும் அற்புதம் செய்திருக்கிறார். தன் நடிப்பில் வில்லன் துரையாக வரும் ஆர்.லாரன்ஸும் கவனம் ஈர்க்கிறார்.


மற்றபடி, விடிவி கணேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், மன்சூரலிகான், பொன்னம்பலம், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா, லொல்லு சபா சுவாமிநாதன், மனோகர், விஜய் வரதராஜன், ஷர்மிளா என ஏகப்பட்ட பழைய, புதிய நட்சத்திரங்கள் தேவைக்கு அதிகமாகவே நடித்திருக்கின்றனர். அதில் சரவணன், சார்லி, சிந்து, வில்லன் லாரன்ஸுக்கு அப்புறம் யோகி பாபு மட்டுமே தன் கலாட்டா காமெடி நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.


மன்சூர் அலிகான், பொன்னம்பலம், நான் கடவுள் ராஜேந்திரன் இவர்களை எல்லாம், கவுரவத் தோற்றத்தில் போட்டு வீணடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு இருட்டிலும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஆண்டனிரூபனின் படத்தொகுப்பு இன்னும் பக்கா தொகுப்பாக இருந்திருக்கலாம்.


ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் என் குங்குமப்பூ வே... , டான்ஸ் வித் மீ மலரே...., நான்தான் டா அடுத்த நைநா.... உள்ளிட்ட பாடல்கள் வித்தியாசம்.


ஷாம் ஆண்டனின் எழுத்து, இயக்கத்தில் சக்திமானை நம்பி மாடியில இருந்து குதிச்சவனும், வெள்ள பிகரை நம்பி காதல்ல குதிச்சவனும்... பிழைச்சதா சரித்திரமே இல்ல... உள்ளிட்ட வசனங்கள் சிரிக்கும்படி இருக்கிறது என்றாலும் சம்பந்த சம்பந்தமில்லாமல் விஜய் டிவியின் நிகழ்ச்சியை கிண்டல் அடித்துக்

கிழிப்பதும், எம்ஜிஆரின் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற சிறந்த பாடலான ‛‛கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்” என்ற பாடலை சரக்கடித்து விட்டு ஆடும் பாடலாக ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி இருப்பதும், ஒரு காட்சியில் ஜி.வி பிரகாஷ் குமாரே தனது அம்மா தனது மாமனாரின் மாஜி ஆள்... என, ஜெயிலில் இருந்து வெளிவரும் தனது அப்பா விடிவி கணேசிடமே சொல்லி.,சிரிக்க வைப்பதாக நினைத்து கடுப்பேற்றுவதும், இது எல்லாம் போதாதென்று ஒரு காட்சியில் நாயகர் ஜி.வி யிடம் நாயகி ஆனந்தி, ”நான் அதை சொல்லல” என்று நேரடியாக உடலுறவைப் பற்றி பேசுவதும்.... உள்ளிட்ட இவையெல்லாம் காமடியும் அல்ல... காமநெடி யும் அல்ல.... நிச்சயம் அதையெல்லாம் தாண்டிய கர்மமடி..... எனும் ரீதியிலேயே இருக்கிறது.


என்ன தான் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும்., இதெல்லாம் பெரியவர்கள் துணையோடு சிறியவர்கள் பார்க்கும் விசயங்களா? எனும் கேள்வி எழாமல் இல்லை ... ஷாம் ஆன்டன் எழுத்து , இயக்கத்தில் கடைசி வரை... இப்படத்தில் கதை என்ற ஒன்றும் உருப்படியாக இல்லை என்பதும் வேதனை!


மொத்தத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு - ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நல்ல இளம் இசையமைப்பாளருன்னு... இன்னொரு பேர் இருக்கு... அதை ஒழுங்கா பார்க்கட்டுமென ஞாபகப்படுத்தும்படி என்னமோ, ஏதோ, இருக்கு... பாவம்!".



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in