தினமலர் விமர்சனம்
கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில் குட்டிப்புலி , கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில், விஷால் - ஸ்ரீதிவ்யா ஜோடி முதன்முதலாக இணைந்திட வெளிவந்திருக்கும் லவ், ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் நிறைந்த ஜனரஞ்சக திரைப்படம் தான் மருது .
தனக்கு பதவியும், பணமும், பேரும், புகழும் கிடைக்க காரணமான பயில்வான் ராதாரவிக்காக, நான்கைந்து கொலைகள் செய்து, அவருக்கு ஆகாதவன் என்பதால் தன் சொந்த அக்கா புருஷனையே வெட்டி போட, படைபலத்துடனும், பண பலத்துடனும் துணியும் பொல்லாதவில்லன் ரோலக்ஸ் பாண்டியன் எனும் ஆர்.கே.சுரேஷுக்கும், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன் பாசமிகு அப்பத்தா - மாரியம்மா, தனக்கு காதலியாக அடையாளம் காட்டிய ஸ்ரீதிவ்யாவுக்காக, யாரை வேண்டுமானாலும் அடித்து துவைக்கும் மார்கெட், லோடுமேன் மருது-விஷாலுக்குமிடையில் ஊருக்காகவும், உறவுக்காகவும், தீமைக்காகவும், நன்மைக்காகவும் நடக்கும் முட்டலும், மோதலும் தான் மருது படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!
இதனூடே கொஞ்சம் லவ், கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் காமெடி... எல்லாம் கலந்து கட்டி மருது படத்தை மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படைத்திருக்கின்றனர் இப்படக்குழுவினர்!
விஷால் முந்தையப் படங்களைக் காட்டிலும், லவ், ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் எல்லாவற்றிலும் கலந்து கட்டி தூள் பரத்தியிருக்கிறார். ஒன்னு பேசறதுக்கு முன்னாடி அடிப்பது, இரண்டு, பேச விடாம அடிக்கிறது, மூணு பேச விட்டு அடிப்பது... இதுல நான் முதல் ரகம்... என்றும்.,
பெண்களை கும்பிட கத்துக் கொடுத்திருக்கிற... என் அப்பத்தா கூப்பிடகத்துக் கொடுக்கலை... என்றும்,
பொம்ப்பளைக்கு ஒன்னுன்னாலே புகுந்து அடிப்பேன்... அதுவே புடிச்சவளுக்கு ஒன்னுன்னா.. புலியாட்டம் அடிப்பேன்... புலியவே அடிப்பேன் ... என்றும் பன்ச் டயலாக் பேசியபடி ., படம் முழுக்க வரும் பாட்டி.யின் பாசமிகு பேரனாக விஷால் கச்சிதம். பைட்சீன்களில் எதிராளிகளை பறந்து பறந்து அடிப்பதிலாகட்டும் , டூயட்டிலும், காதல்காட்சிகளிலும் விழுந்து, விழுந்து ஸ்ரீ திவ்யாவை காதலிப்பதிலாகட்டும் சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார் விஷால். தன் அம்மாவின் அம்மாவை விஷால் அப்பாத்தா என அழைப்பதற்கு கூறும் காரணம். வாவ்! அவங்க தான் என் அப்பா, அம்மா எல்லாம் எனும் போது தியேட்டர் கண்ணீரில் நனைகிறது. அதே மாதிரி அப்பாத்தா சொன்ன காரணத்திற்காக, அந்த பொண்ணு நான் ஆசைப்பட்ட பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை... என் அப்பத்தா எனக்கு மனைவியாக்க ஆசை பட்ட பொண்ணு என ஸ்ரீயை துரத்தி, துரத்தி காதலிப்பது எல்லாம் செம!
நாயகி ஸ்ரீதிவ்யா., கோயிலுக்குள் எச்சில் துப்பிய வில்லனின் ஆளை அறைந்து, அவன் வேட்டியை உருவி துடைக்க சொல்லி, வீரம் காட்டுவதில் முறத்தால் புலியை அடித்து விரட்டிய புராதான தமிழச்சியை பார்க்க முடிவது மகிழ்ச்சி! அதே மாதிரி., முதல்ல எந்தப் பொண்ணையும் தன்னப் போல பிடிக்க வை ... அப்புறம் தன்னால பிடிக்கும் என தன்னை காதலிப்பதாக சொல்லும் விஷாலுக்கு மறுத்து சொல்லாது கருத்து சொல்லும் ஸ்ரீதிவ்யா, பேஷ், பேஷ் ய்யா!
விஷாலின் அப்பாத்தாவைப் பார்த்து.,இப்ப , ரிட்டையர்டு ஆனப்புறமும் இந்தப் போடு போடுறீயே ... சர்வீஸ்ல இருந்தப்போ என்னென்ன செய்திருப்ப ? எனும் காமெடி கலாய்ப்புகள் ... அய்யய்யோ சங்கம்னா விடமாட்டேன்னே இவன் ...
நமக்கெல்லாம் நம்மலட்சுமி மேனன் மாதிரி பொண்ணுதானே பொருத்தமா இருக்கும் ..?, என சூரி விஷாலைப் பார்த்துஅடிக்கும், அதுவும் , விஷமத்தனமாக அடிக்கும்கமெண்ட்களும் சரி ., காத்து மரம் காதல் ஒப்பீடு ... உள்ளிட்ட சூரியின் கிராமத்து கருத்தாழமிக்க காமெடி ஒப்பீடுகள் ...கொக்கரக்கோ எனும் அவரது பெயர்., அவர் சம்பந்தப்பட்ட சென்டிமெண்ட் சீன்கள் உள்ளிட்ட சூரியின் சீன்கள் எல்லாமே தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது.
தன் பாலிடிக்ஸ் பாஸ் பயில்வான் ராதாரவியை ஆர்.கே.சுரேஷ் எச்சரிக்கும் காட்சி, இவனை ஓங்கி விட்ட அறை தான்னே, உங்க படுக்கை அறை வரைக்கும் கேட்டுச்சு.... என பம்பரத்தானை அறைந்து விட்டு ராதாரவியையும் ஒர் அறை விடும் சுரேஷ் ., வில்லத்தனத்தில் வாவ் சொல்ல வைக்கிறார்.
வில்லன் ரோலக்ஸ் பாண்டி எனும் ஆர்.கே சுரேஷ், பயில்வானுக்காக நாலு பேரைக் கொன்னவன், எனக்காக அவனையே கொல்ல மாட்டேனா என்ன...? என லந்து பண்ணும் இடங்களிலும் சரி, அப்பத்தாவை ஆயில் பாத் எடுக்க விட்டு, ஐஸ் வாட்டரில் மூழ்க விட்டு, இளநீரில் மருந்து கலந்து இரவில் ஜன்னி வர வைத்து பதற விடும் கொடூரத்திலும் சரி, தனது நடிப்பில் முந்தைய தாரை தப்பட்ட யைக் காட்டிலும் கிழிய விட்டிருக்கிறார் மனிதர். அசால்ட்டாய், அதிரடி காட்சிகளில் அருவாலும் கையுமாக மோதுவதிலும், அதிலும் விஷாலுடன் க்ளைமாக்ஸில் மோதும் காட்சியில் சுரேஷின் அதிரடிஅதகளம்!
யார்? இந்தபொம்பளை திலகன்..? எனக் கேட்கும் அளவுக்குபொளந்து கட்டி யிருக்கிறார் விஷாலின் அப்பத்தாள் மாரியம்மாள்ளாக வரும் கேரள - கோலப் புலி லீலா. டேய் , ரோலக்ஸ்.. நீயெல்லாம் ஒத்த ஆள அடிக்க பத்துஆள கூட்டிக்கிட்டு போவ ஆனா, என் பேரன் பத்து பேர... அடிக்க ஒத்த ஆளா போவான் ... என வீரமாக வில்லனிடம் சவடால் விடும் இடம் ஒன்று போதும்... பாட்டியின் நடிப்புத் திறமையை பறைசாற்ற... அடி ஆத்தி .. யாருப்பா இந்த பாட்டி ? என மீண்டும், மீண்டும் கேட்க வைத்து விடுகிறார் மனுஷி!
உன் நிழல்ல பேய் நின்னாலே... தாயா மாறும்... என பேரன் மருது புகழ் பாடுவதில் தொடங்கி., என் பேரனுக்கு ... பதவி நீ வாங்கித் தர்றியா ... இங்கப் பாருடா கொக்கரக்கோ..., என ராதாரவியின் ஆள் பம்பரத்தானிடம் எளக்காரம் செய்வது வரை சகலத்திலும் அந்த அப்பத்தாள் மாரியம்மாள் பாட்டியாக வரும் கேரள - கோலப் புலி லீலா நிச்சயமாக பலவிருதுகள் வாங்கும் அளவு நடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல!
சொசைட்டி தலைவராக, பெரிய மனித பயில்வானாக ராதாரவி, சுரேஷின் அக்கா புருஷனாக அருள்தாஸ், ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வக்கீல் சங்கரபாண்டியனாக மாரிமுத்து, சிலம்பம் மாரியம்மாவாக ஸ்ரீதிவ்யாவின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டி லட்சுமி... ஆகிய எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
பிரவின் கே.எல்.லின் படத்தொகுப்பு, கே.வீர சமரின் கிராமிய மணம் மாறா கலை இயக்கம், அனல் அரசுவின் சண்டை பயிற்சி, பாபா சங்கரின் நடன அமைப்பு, வேல்ராஜின் ஒளிப்பதிவில் பச்சை பசேல் கிராம பகுதிகளும் அதில் படமாக்கப்பட்டிருக்கும் டூயட் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் அம்சமாய் இருக்கின்றன .
டி.இமானின் இசையில் நிமிர்ந்து நின்னா கதிரு நேர்மையின்னா மருது..., ஒத்த சடை ரோசா நெஞ்சைக் கிழிக்கிறா..., அக்கா பெத்த ஜக்கா வண்டி... கருவ காட்டு கருவாயா.... உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்தைமேலும் ஜோராக்குகின்றன!
ஆக மொத்தத்தில் முத்தையா எழுத்து, இயக்கத்தில், பேப்பரில் ஸ்ரீதிவ்யாவை காணவில்லை... என விளம்பரம் கொடுத்து ஸ்ரீயை தன், வீட்டிற்கு வரவழைக்கும் அப்பத்தாளின் சாமர்த்தியம், விஷாலுக்கும் இப்படத்திற்கும் மருது எனும் பெயர் காரணமாக, கட்டபொம்மன் , ஊமத்துரை, மருது, என அப்பாத்தான் வரலாறு சொல்லும் இடம் ... உள்ளிட்ட உணர்ச்சிகரமான காட்சிகளுக்காவும், உனக்கு வேண்டிய பதவிய அவரு பார்த்து வாங்கித் தருவாரு ... அவருக்கு வேண்டிய சல்லித்தனம் எல்லாம் நீ செஞ்சு தருவ... அஞ்சு வருஷம் அதிகாரத்துல இருக்கிற நமக்கே இவ்வளவு கொழுப்பு இருக்குன்னா ஐம்பது வருஷம் அதிகாரத்துல இருக்கிறவனுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் ...? என்பது உள்ளிட்ட நச் - டச் வசனங்களுக்காகவும், கிராமிய மனம் கமழும் யதார்த்த காட்சிகளுக்காகவும் விஷாலின் மருது படத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் தரலாம் வெற்றி விருது!
மற்றபடி, குட்டிப்புலி, கொம்பன் என ஒரே மாதிரி கிராமியக் கதைகளை எடுக்கிறார் முத்தைய்யா எனும் சிட்டி ரசிகர்களின் அங்கா லயிப்புகளையும், பெற்றதாய் வெட்டுபட்டு இறந்தபின்பும் ஸ்ரீதிவ்யாவுக்கு எப்படி? ஆம்பளைகளை சபையில் அடிக்கும் அளவு இத்தனை வீரம்..? எனும் லாஜிக் கேள்விகளையும் ஓரம் வைத்துவிட்டு, மருது படம் பார்த்தால் ரசிகனுக்கு நிச்சயம் விருந்து இப்படக் குழுவினருக்கு அதுவே விருது!
------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
பாட்டியையும் (வருங்கால) மாமியாரையும் கொலை செய்த வில்லன் கும்பலை தனி ஒருவனாக விஷால் போட்டுத் தள்ளும் தெக்கத்தி கிராம அதிரடிதான் மருது. இயக்கம் முத்தையா.
மூட்டை தூக்கும் இளைஞன் வேடம் விஷாலுக்கு உடம்பை முறுக்கேற்றி வைத்திருப்பது ரொம்ப பொருந்துகிறது. ஆக் ஷன் காட்சிகளில் உக்கிரம்.
படம் முழுக்க லேசான முறைப்போடு ஸ்ரீதிவ்யா பலே அட, நடிப்பு வருது கண்ணு!
ரொம்ப நாள் கழித்து சூரி கலகலக்க வைக்கிறார். ஸ்ரீதிவ்யாவைப் பிடிக்காதது போல் விஷால் இருக்க, ஏன்டா உனக்கு லட்சுமி மேனன் மாதிரிதான் பொண்ணு வேணுமா? என்று போட்டு வாங்குவதும், நடிகர் சங்கத் தேர்தலை நினைவு படுத்தும் வசனங்களும் அள்ளுது.
படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுபவர் அந்தப் பாட்டி லீலா. மனோரமாவின் ஆவி அவர் உடலில் இறங்கியிருக்க வேண்டும். பேரன் மேல் இருக்கும் பாசமும், சூரியையும் அப்படியே பாவிக்கும் நேசமும், அந்தப் பாட்டியை பார்க்கப் பார்க்க பிடித்துப் போகிறது. அவரது மரணத்தை இத்தனை கொடூரமாகக் காண்பித்தது அக்கிரமம். சரி, தனக்கு ஏற்பட்ட கொடுமையை பாட்டி ஏன் பேரனிடம் சொல்லவில்லை?
அக்கா பெத்த பாடலில் இமான் பக்கா.
காதல் மோதல் என்று ஜாலியாகப் பேய்க் கொண்டிருக்கையில் இடைவேளைக்குப் பிறகுதான் இழுக்கிறது.
மருது - ஜாதி மல்லி
குமுதம் ரேட்டிங் - ஓகே