ஹீரோபன்டி படத்திற்கு பிறகு மீண்டும் டைகர் ஷெரப், சபீர்கான் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ரொமான்ட்டிக், ஆக்ஷ்ன், த்ரில்லர் படம் தான் இந்த பாகி. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி ரோனி எனும் டைகர் ஷெரப், ஒரு ரயில் பயணத்தின் போது ஹீரோயின் சியா எனும் ஸ்ரத்தா கபூரை பார்க்கிறார். பார்த்த மாத்திரத்தில் இருவருக்கும் காதல் வருகிறது. தற்காப்பு கலையில் வல்லவரான ரோனி, தன் அப்பாவின் நண்பர் நடத்தும் பள்ளியில் மாணவர்களுக்கு தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசிரியராக பணிபுரிகிறார். இதுஒருபுறம் இருக்க, ரோனியின் தற்காப்பு கலை குருவின் மகன் ராகவ் எனும் சுதீர்பாபுவும் சியா ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் சியா, ரோனியை காதலிப்பது ராகவ்விற்கு தெரியவந்ததும் சியாவை பாங்காக்கிற்கு கடத்தி சென்று தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார். அதன்பின்னர் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியாத ஹீரோ, ரோனி எப்படி தன் காதலியை மீட்டார் என்பது தான் 'பாகி' படத்தின் அதிரடியான மீதிக்கதை.
ஹீரோ டைகர் ஷெரப் ஓகே., என்ற அளவில் தான் நடித்திருக்கிறார். ஆனால் ஆக்ஷ்ன் காட்சியில் மனுஷன் மிரட்டியிருக்கிறார் மிரட்டி...
ஸ்ரத்தா கபூர் வழக்கம்போல் அழகாக வந்துபோகிறார். ஆனால் முந்தைய படங்களின் சாயல் அவரது நடிப்பில் இன்னும் தெரிவது பலவீனம். சுதீர்பாபு, சுனில் குரோவர், சஞ்சய் மிஷ்ரா ஆகியோரது நடிப்பு ஈர்க்கவில்லை.
ஹீரோபன்டி படத்திற்கு பிறகு இயக்குநர் சபீர்கானும், ஹீரோ டைகர் ஷெரப்பும் மீண்டும் இணைந்துள்ளார்கள். தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த வர்ஷம் படத்தின் தழுவல் தான் இந்த பாகி. படத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. ஜம் ஜம் உள்ளிட்ட பாடல்கள் இசையும், பின்னணி இசையும் ஓகே. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆனால், ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சியமைப்புகளும், படத்தின் கதை பலவீனமாக இருப்பதும், அதிகப்படியான ஆக்ஷ்ன் காட்சிகளும் ரசிகனை சலிப்படைய செய்கிறது.
மொத்தத்தில் 'பாகி' படம் பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனாலும் ஒருமுறை வேண்டுமானால் பார்க்கலாம்.