கொஞ்ச நாட்களுக்கு முன் நாளை முதல் குடிக்க மாட்டேன் எனும் நல்ல மெஸேஜ் உள்ள படத்தில் நடித்து கொஞ்சம் தமிழ் சினிமா ரசிகர்களை தன்னை உற்று நோக்க வைத்த புதுமுககதாநாயகர் ராஜ் நடித்து அடுத்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் சாலையோரம் .
நாளைய பொழுது படத்தை இயக்கிய கே.மூர்த்திகண்ணன் இயக்கத்தில் அடுத்து வந்திருக்கும் சாலையோரம் படம் ரோட்டோரம் நடமாடும் ரசிகர்களையாவது தியேட்டர் பக்கம் கொண்டு வருமா ? பார்ப்போம் ....
கதைப்படி, சென்னை மாநகராட்சியில் கழிவு நீர் அடைப்பு நீக்குதல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட வேலை செய்யும் ஹீரோ ராஜ்க்கும், குப்பையில் ரிசர்ச் செய்து அதிலிருந்து எரிபொருள் மற்றும் இத்யாதி, இத்யாதிகளை தயாரிக்கலாம்... எனும் ஆராய்ச்சியில் வெற்றி பெறும் மேல் மட்ட நாயகி ஷெரினாவிற்குமிடையில் காதல். அந்த காதல் தடை பல கடந்து பூத்து, காய்த்து, கசிந்துருகியதா ? அல்லது எதிர்ப்பாளர்களால் நசிந்து போனதா ..? என்னும் வித்தியாசமும், விறுவிறுப்பு மான கதைக்களம் தான் "சாலையோரம் மொத்தப் படமும்!
இப்படிப்பட்ட நல்ல கதையம்சமுள்ள இப்படத்தை எத்தனைக்கு எத்தனை மெத்தனமாக படமாக்க முடியுமோ ? அத்தனைக்கு அத்தனை மெத்தனமாகவும் ரசனன கம்மியாகவும் படமாக்கியிருப்பதில்சில, பல இடங்களில் ரசிகனின் கவனம் ஈர்க்க மறுக்கிறார் இயக்குனர்.
மற்றபடி ,கதாநாயகர் ராஜ் , தன் முந்தைய ( ரிலீஸான வரிசைப்படி ...) படமான நாளை முதல் குடிக்க மாட்டேன் ஒரு பங்கு கம்மியாக நடித்திருப்பதுக்கூட பெரிதாக தெரியவில்லை... ஆனால் , காட்சிக்கு காட்சி (கதாநாயகியை பார்த்து என்றால் கூட பரவாயில்லை ... ) படம் பார்க்கும் ரசிகனைப் பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டிருப்பது மட்டும் சகிக்கலை ... அதே நேரம், பல , புகழ் நடிகர்கள் மாதிரி இல்லாமல் , அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்காக (சரி, சரி .. ஸ்கிரீனில் வந்து போவதற்காக ...) அவருக்கு ஒரு ஹேட்ஸ் - ஆப் சொல்லியே ஆகவேண்டும். ஆல் த பெஸ்ட் ராஜ்.
கதாநாயகர் தேவையே இல்லாமல் சிரித்தபடியே வளைய வருகிறார் என்றால் ., கதை நாயகி ஷெரினா , ஓவராக முறைத் தபடியே குப்பை ரிசர்ச் செய்வதும் அவ்வளவாக ஒட்டலை. நமக்கு ஓட்டுவது ., நம் ஓட்டு எல்லாம் குப்பத்தில் நாயகர் ராஜ் மீது உருகி , உருகி ஓட்டும் நாட்டுகட்டை தீக்ஷனாவுக்கு தான். வாவ் , அம்மணி , என்னமாய் குப்பத்து பெண்மணியாய் வாழ்ந்திருக்கிறார். சூப்பர்.
நாயகர் , நாயகியர் தவிர்த்து ., நாயகரின் குப்பை லாரி நண்பர்கள் சிங்கம் புலி ,சுருள் முடி கனக் , புதுமுகங்கள் நசீர் , நாயகரின் பக்கவாத அப்பாமுத்துக்காளை, நாயகியின் டாக்டர் டாடி, பாய்ஸ்ராஜன் ,மிப்பு சாமி எல்லோரையும் காட்டிலும் மெய்யாலுமே மாஜி சைதாப்பேட்டை வாசியான பாண்டியராஜனும் அவரது வில்லத்தனமும் பக்கா .
செல்வராஜாவின் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் தேவையில்லாத காட்சிகளை படத்தில் அடிக்கடி வந்து குப்பை அள்ளிபோகும் குப்பை லாரியில் கத்தரித்து கொட்டியிருக்கலாம். தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவில் சென்னை குப்பை மேடுகள் கோபுரங்களாய் ஒளிர்கின்றன ... என்பது பலம் என்றால் அவற்றின் ஒளிர்வில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மங்கலாக மருகுவது , மறைவது ... பலவீனம்.
மரியா மனோகரின் பின்னணி இசையும் , எஸ்.சேதுராமின் பாடல்கள் இசையும் கொஞ்சம் ரசனை.
ஸ்மைல்லீ பிக்சர்ஸ் முருகன் சுப்புராயன் & செல்வதியாகராஜன் இருவரது தயாரிப்பில் , ட்ரீம்ஸ் கலர்ஸ் மீடியா (பி) லிட் மோகன் மகுடேஸ்வரன் நம்பிக்கையுடன் வெளியிட்டுள்ளார். அவரது நம்பிக்கை வீண் போகாதிருக்கட்டும்!
சில , பல குறைகள் இருந்தாலும் கே.மூர்த்தி கண்ணனின் எழுத்து , இயக்கத்தில் நல்ல கதையும் , சில நல்காட்சியமைப்புகளும் சமூகத்திற்காக சித்தரிக்கப்பட்டிருப்பது பலம் . ஆனால் அந்த பலம் மட்டுமே போதுமா ? என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்!
சாலையோரம் -இன்னும் சவாலாக , சரியாக படைக்கப்பட்டிருந்தால் சமூகத்திற்கும் அரசுக்கும் சரியான உரமாகியிருக்கும்!"