கிரியேடிவ் டைம்ஸ் ஈ.ஆர்.ஆனந்தன் வழங்க, சின்னத்திரை காம்பயர் பாலா கதாநாயகர் அவதாரம் எடுக்க, அறிமுக நாயகி அஸ்வினி மோகனுடன் வினோத், ராதா, காயத்ரி, சிந்து, மயில்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, புதியவர் வெங்கட்.சி.சாமியின் எழுத்து இயக்கத்தில் வந்திருக்கும் முழு நீள.... காதல் படம் தான் "கண்டேன் காதல் கொண்டேன்".
பணம், பைக், பங்களா என வசதிகள் நிரம்பிய "சுமார் மூஞ்சிகுமார்" நண்பனுக்கு காதலி தேடிப் போய், போன இடத்தில் சந்தர்ப்பவசத்தால் தான், காதலில் விழுகிறார் கல்லூரி மாணவரான "மிடில்கிளாஸ் மாதவன்" டைப் ஹீரோ. பணக்கார வர்க்கத்தைச் சார்ந்த கல்லூரி மாணவியான ஹீரோயினின் அண்ணன் மற்றும் அப்பா, காலம் காலமான தமிழ் சினிமா வழக்கப்படி., இவர்களது காதலை கண்டுணர்ந்து கட்டையைப் போட, அந்த இளம் காதல் ஜோடியினர், ஒரு அசுபயோக, அசுபதினத்தில்.... அமரர் ஊர்தி ஒட்டுனர் மயில்சாமியிடம் அடைக்களமாகி, ஒரு பாடியுடன் ஜோடியாக பம்மி, பதுங்கி, பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானல் பயணமாகின்றனர்.
போன இடத்தில், உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடியா சூழலில் லாட்ஜ், காட்டேஜ் எல்லாம் சேப்டியாக தெரியாத சூழலில் சில நாட்கள் ஒரு பாழடைந்த வீட்டில் ஒண்டி., குடித்தனம் நடத்துகின்றுனர். கும்மிருட்டு, குளிர் பிரதேசம்... எனும் ஹீரோவுக்கு சாதகமான ஹீரோயினுக்கு பாதகமான நிலையில் ஹீரோ கொஞ்சம் அத்துமீறி அப்படி, இப்படி நடந்து கொள்ளப் பார்க்க ஹீரோயின், "தாட் பூட் தஞ்சாவூர்..." என்கிறார். அது முதல் இருவருக்குமிடையில் ஊடல், உரசல்... உருவாகிறது.
காசு, பண கையிருப்பும் கரைந்த நிலையில், இருவரும் கிட்டத்தட்ட கொளுத்து வேலை உள்ளிட்ட கிடைத்த வேலைகளைப் பார்த்தும் வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாமல், எந்த வேலையையும் நிலையாய் செய்ய முடியாமல் இருவருக்குமிடையிலே திருமண பந்த கூடலுக்கு முன்பே ஊடல் கொழுந்து விட்டு எரிகிறது. அதில், வெக்ஸாகும் இருவரும் தனித்தனியாய் காதல் துறந்து சொந்த ஊர் திரும்ப கிளம்புகின்றனர். ஆனால், விதிவசத்தால் இருவரும் பாண்டியில் இருந்து கொடைக்காணல் வந்த மயிலின் அமரர் ஊர்தியிலேயே (மயிலுக்கு அத்தனை நாள் அங்கென்ன வேலை என்பது ரசிகனின் மில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்று!) ஒருத்தருக்கு ஒருத்தர் அறிந்து, தெரிந்து கொள்ளாது ஒரு வழியாக ஊர் திரும்புகின்றனர்.
என்ன ஆச்சர்யம்.?! அங்கு எலியும் பூனையுமாக இவர்களது காதலால் எதிர், எதிர் துருவங்களில் இருந்த இவர்களது குடும்பம், ஒன்றுக்கு ஒன்று ஒத்தாசையாக கிட்டத்தட்ட ஒரே குடும்பமாக நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது. அது எப்படி? என்பதுடன், கொடைக் கானலில் ஏற்பட்ட ஈகோ மறந்து, காதலர்கள் கல்யாண வைபோகத்தில் இணைந்தனரா? இல்லையா..? என்பதும் தான் "கண்டேன் காதல் கொண்டேன்" திரைப்படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
இதை இயக்குனர் வெங்கட் சி.சாமி, "சீரியஸான சினிமாவாக சொல்ல முயற்சிக்காமல்., இப்பட நாயகர் பாலா, டி.வி.காம்பயர் என்பதாலோ என்னவோ, சின்னத்திரை டிராமா டைப்பில் காட்சிப்படுத்தியிருப்பது, சற்றே, ரசிகனை படுத்துகிறது. பாவம்!
கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் பாலா., ஜீவா பாத்திரத்தில் , ஆரம்ப காட்சிகளில் அம்மாஞ்சியாக உம் என்று தெரிந்தாலும், இருந்தாலும் போக, போக பிழைத்து கொள்ளுவார் போலையே... என சொல்லும்படி நடிக்க முயன்றிருப்பது ஆறுதல்.
இப்படத்தின் முதல் பாதியை., கதாநாயகரை வலிய காதலில் தள்ளும் நண்பர் ராஜகுருவாக, கரிச்சானாக வந்து கலகலவென்று வைத்துக் கொண்டிருக்கும்
"சுமார் மூஞ்சிகுமாரு" போன்ற காமெடி நடிகர் செமயாய் காப்பாற்றுகிறார்.
ஆனால், இரண்டாம் பாதியை காப்பாற்ற வேண்டிய அறிமுக நாயகி அஸ்வினி மோகன், ஏனோ தானோ என்று ஏதோ வந்து போவதும் சிறுமி போன்ற தோற்றத்தில் இருப்பதால் கிளாமருக்கும் உதவாமல் இருப்பதும் உறுத்தல்.
வினோத், ராதா, காயத்ரி, சிந்து, மயில்சாமி உள்ளிட்டவர்களில் மயிலு, வழக்கம் போலவே, காதலுக்கு வலிய உதவுகிறார். என யோசிக்கும் போதே கொட்டாவி வருகிறது. ஆவ்... வ்...வ்!
சிவா யாதவின் கலை இயக்கத்தில் சொல்லிக் கொள்ளும் படி எதுவுமில்லை, சுரேஷ் அரஸின், படத்தொகுப்பு படத்தில் இருக்கிறதா? எனும் கேள்வியே எழுகிறது. சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் கொள்ளை அழகு. மற்றவை..?
நாகாவின் இசையில் "கரிச்சானுக்கு காதலிக்க பொண்ணு ஒன்று வேணுமப்பா..", "முதல் முறை நெஞ்சில் காதல்...", "என் மீது சாய்கிறதே...", "ஏன் உன்னை கண்டேன் என்று...." உள்ளிட்ட பாடல்கள் எங்கோ கேட்ட குரல், ப்ளஸ் பாடல்கள் என்றாலும் ஆறுதல்!
புதியவர் வெங்கட்.சி.சாமியின் எழுத்து இயக்கத்தில் வந்திருக்கும் முழு நீள, நீள.. நீள.... காதல் படமான இதில், "யோசிக்கிறதைப் பத்தி இனிமே யோசிக்க முடியாது பாஸ்...", "பொண்ணுங்களை எட்ட இருந்து பார்க்கிறதுல எந்த பிராபளமும் இல்ல.. கிட்ட போறப்போ தான் பயமே..." உள்ளிட்ட வசன "பன்ச்"கள் ரசனை. ஆனால், அவை நாடக பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம், ரன வேதனை.
மொத்தத்தில், "கண்டேன் காதல் கொண்டேன் திரைப்படத்தை காணலாம் காதல் கொள்ளலாமா..? என்பது ரசிகனின் சாய்ஸ்!"