ஹரிதாஸ் எனும் சிறப்பான, சமூகத்திற்கு தேவையான படம் இயக்கிய ஜி.என்.ஆர் குமரவேல் இயக்கத்தில், விக்ரம் பிரபு - புதுமுகம் ரன்யா ராவ் இணைந்து நடிக்க, வாகா எனும் பெயரில் இந்திய இராணுவத்தையும், இராணுவ வீரர்களையும் கொச்சைபடுத்தும்படி வெளிவந்திருக்கும் படமே "வாகா".
தடை இல்லாமல், மிலிட்டரி சரக்கு கிடைக்குமென இந்திய இராணுவத்தில் சேர முயற்சிக்கின்றனர் வாசு எனும் ஹீரோ விக்ரம் பிரபுவும், அவரது ஒன்று விட்ட சகோதரர் சத்யனும். அதில் சத்யனுக்கு தோல்வியும், விக்ரம் பிரபுவிற்கு வெற்றியும் கிடைக்கிறது. அது முதல் ரசிகனுக்கு சோதனை தான். பாவம்.
38 வாரங்கள் பெங்களூரில் மிலிட்டரி டிரையினிங் முடித்து, காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் விக்ரம் பிரபு, போன இடத்தில் சும்மா இல்லாமல் இந்தியாவின் காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாகிஸ்தானிய பெண்ணுடன் காதலில் விழுகிறார். அதனால் ஒரு இக்கட்டான கட்டத்தில் எல்லைத் தாண்ட வேண்டிய சூழலுக்கு ஆளாகும் விக்ரம் பிரபு, பாகிஸ்தான் படை வீரர்களிடம் வகையாக சிக்குகிறார். ஆட்டுக்குட்டி எல்லை முள்வேலியைத் தாண்டினாலே சுட்டுப் பொசுக்கும் பாகிஸ்தான் வீரர்கள், சும்மா விடுவார்களா? விக்ரம் பிரபுவை சுற்றி வளைத்து ரகசிய சிறைக்கு கொண்டு சென்று சித்ரவதை செய்கின்றனர். அவருடன் சேர்த்து இருபதுக்கும் மேற்பட்டோர் அந்த சிறை கூடத்தில் நரக வேதனை அனுபவிக்கின்றனர். அத்தனை பேரையும், தன் காதலையும் எப்படி விக்ரம் பிரபு, பாகிஸ்தான் வீரர்களிடமிருந்தும், அவர்களது துப்பாக்கி தோட்டாக்களிடமிருந்தும் காத்து கரை சேர்கிறார்? என்பது தான் வாகா படத்தின் துளியும் நம்ப முடியாத வகை, கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.
வாசுவாக விக்ரம் பிரபு, வழக்கம் போலவே பெரிய மூக்கும் முழியுமாக குவாட்டருக்காக, மிலிட்டரியில் சேருவதும்., காதலிக்காக பார்டர் தாண்டுவதுமாக பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார் பாவம். காதலியால் பாகிஸ்தானில் மாட்டி கொள்ளும் காட்சியில் விக்ரம் பிரபு, தான் ஹீரோ என்பதையும் தாண்டி அதிகம் உடம்பை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார். அதே மாதிரி, ஆக்ஷன் அடிதடி செய்து காதலியோடு இந்தியா வரும் காட்சிகளில் ஹீரோவாக நம்ப முடியாத அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்.
புதுமுகம் ரன்யா ராவ் தான் வாகா படத்தின் பெரும்பலம். ஹன்சிகா சாயலில் இருக்கும் இந்த கொள்ளை அழகு தேவதையை எங்கிருந்து பிடித்தார்களோ? தெரியவில்லை. அம்மணி விக்ரம் பிரபுக்கும் சேர்த்து நடித்து, அசத்தியிருக்கிறார். வாவ்.
கருணாஸ், சத்யன், துளசி, ராஜ்கபூர், ஜேக்கப், வித்யூலேகா ராமன் என ஏகப்பட்டோர் படம் முழுக்க இருக்கின்றனர். இருந்தும் என்ன பயன்..? அதிலும், சின்ன வயதில் 500 ரூபாய்க்கு இன்ஷியலை வித்தவராகவும், பார்டரில் பதட்டம் போக்க சரக்கை போட்டுவிட்டு பணி புரியும் இரணுவ வீரராகவும் வரும் நாகப்பன் சித்தப்பாவாக கருணாஸ் கடுப்பேற்றுவது ரொம்பவும் அபத்தம்
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் காஷ்மீர் கொள்ளை அழகில் ஜொலிப்பது ஆறுதல்!
‛‛ஆணியே புடுங்க வேண்டாம் டா... , ஏதோ மாயம் செய்கிறாய்..., சொல்லத்தான் நினைக்கிறேன்.., ஜெய ஜெய வந்தே மாதரம் ஜெயகே..... ஆகிய பாடல்கள் டி.இமான் இசையில் பரவாயில்லை ரகம். அதிலும், ஜெய, ஜெய வந்தே மாதரம்.. ஜெயகே ... பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை பீட் பண்ண முயன்று தோற்றிருக்கிறார் இமான் என்பது காமெடி!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அட்டாரி - வாகா எல்லை. இந்தியா, பாகிஸ்தான் எல்லையான இங்கு 1959-ம் ஆண்டு முதல் இரு நாட்டுக் கொடிகளையும் ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி தினமும் காலையும், மாலையும் நடைபெறுவது வழக்கம்.
நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், இரு நாட்டு எல்லைகளையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் வீரதீரத்துடன் மேற்கொள்ளும் அணிவகுப்பு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த கம்பீர அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்க்க இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வர். குடியரசு தினத்தன்று இங்கு எல்லை அணிவகுப்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.
அப்பேர்பட்ட "வாகா" எனும் பெயரை இப்படத்திற்கு வைத்ததற்கு மருந்துக்குக் கூட, வாகா எல்லையின் பின்னணி பற்றியோ பிரச்சனைகள் பற்றியோ எதுவும் இல்லை இப்படத்தில்... என்பது வேதனை!
ஜிஎன்ஆர் குமரவேலின் இயக்கத்தில், இது மாதிரி எண்ணற்ற குறைகளுடனும், லாஜிக் இல்லா கதையுடனும், இந்திய இராணுவத்தை மட்டுமின்றி இரு நாட்டு இராணுவ வீரர்களையும், அதிகப்படியாய் அசிங்கப்படுத்தியிருக்கும் "வாகா - ‛வாகை சூடவுமில்லை... ரசிகனை வசீகரிக்கவும் இல்லை... பாவம்!
---------------------------------------
குமுதம் விமர்சனம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது 'வாகா' படம். ஆனால் கதை சப்.
அப்பாவின் மளிகைக் கடை வேலையிலிருந்து தப்பிப்பதற்காக, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் விக்ரம்பிரபு சேர்வதும், எல்லையில் நடந்த கலவரத்தில் காதலியைக் காப்பாற்றி பாகிஸ்தானுக்கே கொண்டு போய் விடுவதும், திரும்பி வரும்போது பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்குவதும், அதிலிருந்து விடுபடுவதுமாக கதை நகர்கிறது.
எல்லைப் பாதுகாப்புப்படை வீரருக்கு விக்ரம்பிரபு பொருந்துகிறார். அந்தத் தனிமை, வெறுமை இயற்கையானது. அந்தக் காதலுக்கும், பாகிஸ்தான் வீரர்களுடன் மோதுவதற்கும் முகபாவனை ஒரே மாதிரி ஏன்?
அறிமுகம் ரன்யாராவ் அசல் பாகிஸ்தானிப் பெண்ணாக தன் காதல் கடமையை சரியாகச் செய்திருக்கிறார்.
கருணாஸ், சத்யன், அஜய்ரத்னம், துளசி, வித்யூலேகா என்று பலர் வந்து போகிறார்கள்.
படத்தின் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. எல்லைக் காட்சிகள், மலைகள், காடுகள், எல்லை வேலிகள், என்று அத்தனையும் தத்ரூபம். பின்னணி இசை கொஞ்சம் கைகொடுக்கிறது.
'நான் பாகிஸ்தானிப் பெண்ணை காதலிக்கவில்லை. நான் காதலிக்கும் பெண் பாகிஸ்தான்' போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.
தீவிரவாதம் எல்லை பிரச்னை. காஷ்மீர் என்று கவன ஈர்ப்புக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும், விக்ரம் பிரபுவும் சரி, இயக்குநரும் சரி அந்த தீவிரத்தன்மையை உணராமல் இருப்பது அபத்தம், கிளைமாக்ஸில் வில்லனைக் கொல்லாமல் மனம் திருந்தச் சொல்லி வசனம் பேசுவது கொடுமையிலும் கொடுமை.
வாகா : பலவீனம்
குமுதம் ரேட்டிங்: சுமார்