நடிகர்கள் : நிவின்பாலி, ரெபா மோனிகா ஜான், ரெஞ்சி பணிக்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், வினீத் சீனிவாசன், அஜூ வர்கீஸ்
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான்
டைரக்சன் : வினீத் சீனிவாசன்
வினீத் சீனிவாசன்-நிவின்பாலி என்கிற இளமை கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகி இருக்கும் படம். அதனாலேயே எதிர்பார்ப்பும் நூறு சதவீதத்திற்கும் மேல் இருந்தது. அதை இந்தப்படம் நிறைவேற்றியுள்ளதா..?
துபாய் தான் கதைக்களம். ரெஞ்சி பணிக்கர் (இவர்தான் ஜேக்கப்) துபாயில் இரும்பு வியாபாரம் செய்யும் தொழிலதிபர். மனைவி லட்சுமி ராமகிருஷ்ணன், மூத்தமகன் நிவின்பாலி, இன்னும் இரண்டு மகன்கள், ஒரு மகள் கொண்ட அழகான குடும்பம். மகனுடன் எப்போதும் நண்பனை போல பழகுபவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக பலரிடம் பணத்தை வாங்கி உள்ளே இறக்குகிறார் ரெஞ்சி பணிக்கர்..
நல்லவன் என நினைத்த சப்ளையர் திடீரென ஒருநாள் ரெஞ்சி பணிக்கரின் 13 கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விடுகிறான். அதிக பணம் கொடுத்த அடாவடி நபர் ஒருவர் பணத்தை உடனே செட்டில் செய்யும்படி டார்ச்சர் தரவே, நண்பர் மூலமாக பணம் புரட்ட அருகில் உள்ள மற்றொரு நாட்டுக்கு செல்கிறார் ரெஞ்சி பணிக்கர். சில நாட்களில் இங்கே பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க, வீடு, கார் போன்றவற்றை விற்று கொஞ்சம் கடனை அடைக்கின்றனர் நிவின்பாலியும், லட்சுமி ராமகிருஷ்ணனும்.
இனி களத்தில் இறங்கினால் தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்கிற நிலையில் நிவின்பாலி தனக்கு தெரிந்த இரும்பு தொழிலில் இறங்கி, இளம் தொழிலதிபரான வினீத் சீனிவாசனின் உதவியுடன் இந்தப்பக்கம் வாங்கி இன்னொரு பக்கம் கைமாற்றிவிடும் வேலையை ஆரம்பிக்கிறார்.. சில்லறை பிரச்சனைகளை சமாளித்தாலும் அடாவடி கடன்காரன் அசிங்கமாக பேசி அவமானப்படுத்துகிறான். பணத்தை திருப்பி கொடுக்க குறைந்த நாட்கள் மட்டுமே கெடு வைக்கிறான். இல்லாவிட்டால் வெளிநாட்டில் உள்ள அவரது தந்தையை அங்கேயே சிறையில் தள்ளுவதாக பயமுறுத்துகிறான்..
இக்கட்டான சூழலில் சிக்கிய நிவின்பாலியால், வழக்கம்போல ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆக முடிந்ததா..? நெருக்கடி கொடுத்த கடன்காரனை சமாளிக்க முடிந்ததா..? வெளிநாட்டில் சிக்கிய தன் தந்தையை மீட்டுக்கொண்டுவர முடிந்ததா..? இது அத்தனையும் நடக்க திடீர் அதிர்ஷ்டம் கைகொடுத்ததா..? என பல கேள்விகளுக்கு கடைசி இருபது நிமிட படம் விடை சொல்கிறது.
தந்தைக்கும் மகனுக்குமான அன்பின் பரிமாற்றம், அனுபவம் கற்பித்தல் ஆகியவற்றை அழகாக சொல்லியிருக்கிறார்கள். தந்தை-மகனாக ரெஞ்சி பணிக்கர்-நிவின்பாலி இருவரும் தத்தம் உணர்வுகளை இயல்பான நடிப்பால் கடத்தும் விதம் நமது தந்தை இப்படி இருக்கக்கூடாதா என்பதயும், நாம் எப்படிப்பட்ட மகனாக இருக்கவேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது...
அம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணன்.. இங்கே தமிழில் பார்த்தவர் மலையாளத்தில் டோட்டலாக வேறுமுகம் காட்டியிருக்கிறார்.. கணவன் கடனில் விழுந்ததும் குடும்ப பொறுப்பை மகனுடன் சேர்ந்து தானும் சுமக்க முன் வரும் காட்சிகளில் மிளிர்கிறார்.. கடன் கேட்டு வீட்டிற்கு வந்தவனை மிரட்டி அமர வைப்பதும், தங்களுக்கு பிசினஸ் தரும் கோடீஸ்வர நபர் சிகெரெட் பிடிப்பதை அப்போதே கண்டிப்பதுமாக செம ஸ்கோர் பண்ணுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. நிவின்பாலியின் தம்பிகள், தங்கை, நட்பு வட்டாரமாக வரும் சாய்குமார் உட்பட பலரும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள்..
கதாநாயகி ரெபா மோனிகா ஜான்.. பெயரில் இருக்கும் நீளம் கூட அவருக்கான காட்சிகளில் இல்லை.. படத்தில் மொத்தமே மூன்று நிமிடங்கள் மட்டுமே வருகிறார்.. அதனால் அவரைப்பற்றி சொல்லவும் ஒன்றுமில்லை. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வினீத் சீனிவாசனும் நிவின்பாலியும் ஆளுக்கு ஐந்து நிமிடங்கள் வரும்படியான சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். சூப்பர்ப்..
வினீத் சீனிவாசனின் படங்களில் காட்சிக்கு காட்சி இழையோடும் உயிர்ப்பும், அழகான திரைக்கதையால் நம்மை கட்டிப்போடும் லாவகமும் தான் பிளஸ் பாயின்ட்.. இந்தப்படத்திலும் அதற்கு குறைவேதுமில்லை. ரசிகர்களில் பலர் எதிர்பார்ப்பதுபோல, வாந்தி வில்லாக வளைப்பது, எதிரிக்கு பதிலடி கொடுப்பது, இழந்ததை ஒரே நாளில் மீட்பது என வழக்கமான கிளிஷேக்கள் ஏதும் இல்லாமல் யதாரத்ததை கண்முன் நிறுத்தியதற்காகவே வினீத் சீனிவாசனை பாராட்ட வேண்டும்.