குக்கூ எனும் தரமான காதல் படம் தந்த இயக்குனர் ராஜுமுருகனின் சமூகத்தின் மீதான சரியானகாதல் திரைப்படம் தான் ஜோக்கர் இனி படம் பற்றிப் பார்ப்போம்.....
சுய நல ஊழல்அரசியல், அதிகார வர்க்கத்தினரால் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு குரூரசம்பவத்தால் நாயகர் குரு சோமசுந்தரம் , தனக்குத்தானே ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக விதவிதமாக போராட்டங்கள் செய்கிறார் .உரக்க குரலும் கொடுக்கிறார். இவருக்கு உற்றதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், பெரியவர் மு.ராமசாமியும் இருக்கின்றனர்.
இவர் ஊரின்நன்மைக்காக ஒங்கி குரல் கொடுத்தாலும் போராட்டங்கள் நடத்தினாலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து .... நல்ல ஊழற்ற சமூகத்திற் காக தன் வாழ்க்கையை அர்பணித்து சுற்றித் திரிந்தாலும், ஊரார் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான் பார்க்கின்றனர். ஒரு கட்டத்திற்குப் பின் சுய நல ஊழல் அரசியல் மற்றும் அதிகார,அயோக்கியர்களால் சொந்தவாழ்க்கையில் நடந்த ஒரு குரூர சம்பவத்தால் நாயகர் குரு சோமசுந்தரம் இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் என்பது ப்ளாஷ்பேக்கில் விரிகிறது. தெரிகிறது. அப்படி அவர் வாழ்க்கையில் என்னதான் நடந்தது..? என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டு இடைவேளைக்கு அப்புறம் காட்சிப்படுத்தப்படும் போது ரசிகனின் நெஞ்சம் கனக்கிறது. அவர் தன் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டது போல் பிறர் யாரும் பாதிப்படையக் கூடாது... எனச்செய்யும் போராட்டங்களால்., அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளுக்கும் , அவரால் பிறருக்கும் நியாயங்கள்
கிடைத்ததா? அநியாயங்களே அரங்கேறியதா ... ? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் வேதனையான சிரிப்பினூடே வெகு சோகமாய் விடையளிக்கிறது...
ஜோக்கர் படத்தின் மீதிக்கதை. ஜனாதிபதி -மன்னர் மன்னனாக வரும் குரு சோமசுந்தரத்தின் யதார்த்தமான நடிப்புதான்.இப் படத்திற்கு பெரும்பலம் .மனைவி படுத்த படுக்கை ஆவதற்கு முன்வரைஅப்பாவியாகவும் அதன் பின் , அதிகார வர்க்கத்திற்கு அடப்பாவியாக அவர்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் போராளியாக அதுவும் சற்றே மனநிலை பாதிக்கப்பட்ட போராளியாக செமயாக மிரட்டியிருக்கிறார் மனிதர் . அதிலும் , கிடைக்கலைன்னா எடுத்துக்கணும் என தன் உடன் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ரைட்டர் பாவா செல்லதுரை சொன்னதை தன் சூழ்நிலைக்கேற்ப பழைய கோட்டை மாட்டிக் கொண்டு , தனக்குத்தானேஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டு அவர் காட்டும் மிடுக்கும் , நடை , உடை , பாவனைகளும் அப்பப்பா! வாவ்.கீப் இட் அப் குரு.சோ!
மல்லிகா வாக மணம் வீசி ,மனம் கவரும் ரம்யா பாண்டியன் கிராமத்து அழகியாக வந்துகொஞ்ச நேரத்திலேயே படத்தில் படுத்தப்படுக்கை யானாலும் படம் முடிந்து நெடுநேரமாகியும், ரசிகனின் நெஞ்சில் நிற்கிறார். ஜனாதிபதி குருவின் காரியதரிசியாக வரும் காயத்ரி கிருஷ்ணாவும் மல்லிகா மாதிரியே மணக்கிறார் .மனம் கவருகிறார்.
குருசோமசுந்தரத்துடன், அவரது அட்வைஸராக பொன் ஊஞ்சலாக வரும் மு.ராமசாமியும் செம கச்சிதம். அரசை எதிர்த்து அநியாயங்களுக்கு எதிராக எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது, மேலும் காயத்ரி கிருஷ்ணா அனைத்தையும் பேஸ்புக்கில்போட்டு விடுவது .... என படத்தின் முதல் பாதி யை மிகவும் கலகலப்பாக, கரண்ட் மேட்டராக நகர்த்தியிருக்கின்றனர் இருவரும்... என்பது பாராட்டுக்குரியது.
மிலிட்டரியாக வரும் ரைட்டர் பாவா செல்லதுரை ப க்கா செல்லதுரையாக , காரண குடியராக சமூக அவலத்திற்கு எதிராக கலக்கியிருக்கிறார். ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்தில் எதுவும் இல்ல... என அவர் அவ்வப்போது பேசும் வசனங்கள் போதும் அவர் பாத்திரத்தின் சிறப்பு பற்றி பறைசாற்றுவதற்கு ...வாரே வா .
இப்படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி ... எங்க சாமி , உங்கசாமி , அவங்க சாமி , டெல்லி சாமி ... எனயாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விளாசி தள்ளியிருக்கிறார்கள் .இந்த மாதிரி வசனங்கள் வைப்பதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும்.
செழியனின் ஒளிப்பதிவில் தருமபுரி கிராமங்களின் யதார்த்தம் பக்காவாக பிரதிபலித்திருப்பது இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறதென்றால் மிகையல்ல. அவை மிக லாவகமாக காட்சிப்படுத்தியிருப்பதும் .. .படத்திற்கு சேர்க்கிறதுசிறப்பு. ஷான்ரோல்டனின் இசையில்., என்னங்க சார் உங்க சட்டம் , லவ் யூ லவ் யூ ஜாஸ்மின்னு..., ஒல ஒல குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி ..., உள்ளிட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்., ராகம். அதிலும் , என்னங்க சார் உங்க சட்டம் ..... என்ற பாடல், சமூகத்திற்கான சாட்டையடி பாடல் என்றால் மிகையல்ல .. பின்னணிஇசையும் , கதையுடன் பின்னி பிணைந்து பிரமாதமாய் இருப்பது மேலும், மேலும் சிறப்பு.
ஏழைமக்களின் வறுமையை இல்லாமையை, இயலாமையை... எப்படி , எப்படியெல்லாம் அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டு செல்வம் கொழிக்கின்றனர் என்பதையும் , நம்நாட்டில் நடக்கும்அனைத்துவிதமான அநியாயங்களையும், அடக்கு முறைகளையும்.. மிகவும் தைரியமாக
இப்படத்தில் சுட்டிக் காட்டி, குத்தி கிழித்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன். அதற்காக அவரை கைகுலுக்கி பாராட்டலாம். ஜனாதிபதியின் தூய்மை இந்தியா திட்டத்தில்., ஏழைகளுக்கு கழிப்பிடம் கட்டித் தருவதில்கூட எத்தனை பெரிய ஊழல்கள் செய்ய கின்றது .,நம் அதிகார வர்க்கமும் அரசியல் மூர்க்கமும் ....? என்பதை மிக யதார்த்தமாக போட்டு பொளந்து கட்டியிருப்பதற்காகவும், காட்டியிருப்பதற்காகவுமேராஜுமுருகனை , ரசிகர்கள் எல்லோரும் கட்டிப்பிடித்து முத்த மழை பொழியலாம்.
ஆகமொத்தத்தில் சமூக அக்கறையுடன் தரமான தமிழ் படமாக வந்திருக்கும், ‛‛ஜோக்கர் - டாப்டக்கர்!"
------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
உத்தரவாதமாக வரிவிலக்கு கிடைக்காது என்றுதானோ என்னவோ ஆல்கிலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள். பின்னே, 'ஹெலிகாப்டரைக் கும்பிடாதேன்னு சொன்னா அமைச்சருங்க கோவிச்சுக்குவாங்க' போன்ற வசனமெல்லாம் இருக்கே?
ஏறக்குறைய மூன்று கதைகளின் கலவை என்று சொல்லலாம். சமூக அவலங்களுக்கு எதிராகப் பொங்குவது ஒன்று; கவிதை போன்ற காதல் கதை இன்னொன்று; கருணைக் கொலை பற்றியது மற்றொன்று.
வட்டியும் முதலுமாக வாசகர்களைத் தனது வசீகர எழுத்தால் கட்டிப்போட்ட ராஜூ முருகனின் திரைப்பட மகுடத்தில் இந்தப் படம் இன்னொரு வைரம். 'குக்கூ'வில் காதலை அழுத்தமாய், ஆரவாரமாய் சொன்னவர், இந்தப் படத்தில் சாட்டையைச் சுழற்றியடித்திருக்கிறார். யார்மீது? சாட்சாத் திரையரங்கில் படம் பார்க்கும் நம்மீதுதான். அசாத்திய துணிச்சல் மிஸ்டர் ராஜூ முருகன்!
பாடல்கள் பெரும்பாலும் பின்னணியில் காட்சியோடு ஒன்றி அமைந்திருக்கின்றன. அதிலும், ரமேஷ் வைத்யாவின், 'செல்லம்மா, செல்லம்மா' பாடல் மாஸ்டர் பீஸ்! பாடல் அமைந்திருக்கும் சூழலும் பாடல் வரிகளும் அடடா ஓ!
ஆரம்பக் காட்சியில் கேமராவின் நகர்வே ஆவலைத் தூண்டுகிறது. நடிகர்கள் அனைவருமே பொருத்தமான தேர்வு. 'பகத்சிங் அவுத்து விட்ருவேன்'. 'சகாயம் பண்ண வேண்டாம். சகாயமாக இருங்க' போன்ற அநேக வசனங்கள் பளிச் ரகம். தியேட்டரில் வசனங்களுக்காக அதிகமான இடங்களில் கைதட்டல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பிரதமரோட ஆளுகளின் சதியாக இருக்குமோ? என்ற வசனம் திரும்பத் திரும்ப வருவது அலுப்பு.
படத்தில் முக்கிய இடத்தைக் கழிவறை பிடித்திருப்பது நிஜம். அதுக்காக இயற்கை உபாதைக் காட்சிகள் இவ்வளவு தேவையா?
80களில் வெளியான படப்பாடல் ஒன்றின் இடையே, பேருந்து நடத்துநர், 'தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு' என்று வசனம் பேசுவதைப் போன்ற பேருந்து பாடல் இதில் இருக்கிறது.
கதாநாயகனின் போராட்ட உத்திகளான தீவைத்துக் கொள்வது, ஆமை விடுவது, விஷப்பாம்புகளுடன் இருக்க முனைவது, தன் உடம்பிலேயே அடித்துக் கொள்வது போன்றவை ஒரே காட்சியின் வெவ்வேறு வடிவங்களாகவும் சற்றே அலுப்பூட்டுவனவாகவும் இருக்கின்றன.
நல்ல கதை, திரைப்படமாக உருமாறும் போது நிகழ்ந்திருக்கும் சிற்சில குறைபாடுகளை நீக்கிப் பார்த்தால், 'ஜோக்கர்' இன்றைய சூழலுக்கு தேவையான படம்!
ஜோக்கர் - சிரிப்பூட்டும் கோமாளிப் படம் அல்ல; சிந்திக்காத ஏமாளிகளுக்கான படம்.
திரையங்கில் ரசிகர் மந்திரமூர்த்தியின் கருத்து: அரசியலிலும், தனிமனித வாழ்விலும் சுகாதாரம் வேணும்னு வலியுறுத்தும் படம். எனக்குப் பிடிச்சிருக்கு.