தினமலர் விமர்சனம்
வீரம், நட்பு, காதல் விளைந்த மண்ணின் மான்பு குறித்து பேசும் கருவையும், கதையையும் உள்ளடக்கிய படமே சேது பூமி.
சென்னையில் வேலை செய்யும் இராமநாதபுரத்து இளைஞர் நாயகர் தமன். வெளிநாட்டில் வேலை பார்க்கும் திட்டத்தில் இருக்கிறார். அதனால் கொஞ்சநாள் சொந்த ஊரில் பெற்றோருடன் கூடிக்களிக்க விரும்பும் தமன், இராமநாதபுரம் செல்கிறார்.
அந்த ஊர் பெரிய மனிதரான தமனின் அப்பா கேஎஸ் ஜி.வெங்கடேஷுக்கும், லோக்கல் போலீஸை கைக்குள் வைத்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து முதல், பணத்திற்காக சகலமும் செய்யும் சேரன்ராஜுக்குமிடையில் ஈகோ மோதல் இருந்து வருகிறது. அது, தமனின் வருகைக்குப் பின் ஊதி பெரிதாக்கப்படுவதும், அவரது உயிருக்கே உலை வைக்க முயல்வதையும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி, அதனூடே நாயகி சமஸ்கிருதி - தமன் இடையேயான காதலையும் கலந்துகட்டி கலர்புல்லாக வந்திருக்கிறது சேது பூமியின் கதையும், காட்சிப்படுத்தலும்!
வெளிநாட்டு கனவுடைய இராமநாதபுரகிராமத்து இளைஞனாக தமன், முறுக்கு மீசையும், நாயகி சமஸ்கிருதி மீதான கிறுக்கு பார்வையுமாக பாத்திரத்திரத்திற்கு ஏற்ப பொருந்தி நடிக்க முயற்சித்து, அதில்பாதி தேறி இருக்கிறார். கோபக்காரகிராமத்து இளைஞனாக தமன், இன்னும் நிறைய ஹோம் ஒர்க் செய்திருந்தால் ஜெயித்திருக்கலாம்!
நாயகியாக சமஸ்கிருதி செம சாய்ஸ்! அழுத்தமான பாத்திரத்தில் அசால்ட்டாக நடித்து ஜெயித்திருக்கிறது, இந்த அழகு தேவதை!
சிங்கம் புலி, வழக்கம் போலவே காமெடி என்ற பெயரில் சிங்கமாகவும், புலியாகவும் பிராண்டி எடுத்து விடுகிறார். பாவம் ரசிகன்.
ஜுனியர் பாலைய்யா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், சேரன்ராஜ், தவசி, ராஜலிங்கம் உள்ளிட்டோரும், அவர்களது பாத்திரங்களும் சேது பூமியின் மண் மணத்தை திரைக்கு கொண்டு வர பெரிதும் முயற்சித்திருக்கின்றனர், முயற்சித்திருக்கின்றன.
அது போன்றே, மண் மணம் வீசும் எஸ்.முத்துராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, வி.டி.பாரதி, வி.டி.மோனிஷ் இரட்டையரது இனிய இசை மற்றும் ஏண்டி சண்டாளி ... ஆகிய பாடல்கள், உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் நாயகியின் தாய் மாமனாகவும், பணத்தாசை வில்லன் சேரன்ராஜின் தளபதியாகவும் வந்து ரவுடித்தனம் செய்யும் இப்பட இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, இராமநாதபுர மண்ணிற்கே உரித்தான வீரம், நட்பு, காதல், மதம் கடந்த மனித நேயம்... உள்ளிட்ட சகலத்தையும் சரிவிகிதத்தில் கலந்து சரியான படம் தர முயன்று எண்ணற்ற சவால்களை சந்தித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருப்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது!
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு மண் மணம் கமழும் திரைப்படம் வெளிவந்திருந்தால் ரசிகனின் கைத்தட்டலும் தெறித்திருக்கும்!
அவ்வாறு இல்லாது, சற்றே தாமதமாக, இப்பொழுது, இக்கால கட்டத்தில், திரைக்கு வந்ததால், சேது பூமி - சாதனை பூமியும் அல்ல.... சாதா பூமியும் அல்ல... என்ற அளவிலேயே இருக்கிறது! நெஞ்சம் நிறைக்கிறது!!