நடிகர்கள் : நிவின்பாலி, அனு இம்மானுவேல், ரோகிணி, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜோஜூ ஜார்ஜ்
டைரக்சன் : அப்ரிட் ஷைன்
தயாரிப்பு : நிவின்பாலி
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான '1983' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த நிவின்பாலியும், இயக்குனர் அப்ரிட் ஷைனும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. அதனாலேயே இந்தப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப்படம் பூர்த்தி செய்துள்ளதா..?
தமிழ் சினிமாவாகட்டும் அல்லது மலையாள சினிமாவாகட்டும் போலீஸ் படங்கள் என்றாலே ஒரு அதிரடி போலீஸ் ஆபிசர், நகரத்தில் உள்ள ஒரு பெரிய ரவுடியோடோ அல்லது அரசியல்வாதியோடோ அல்லது தொழிலதிபரோடோ அல்லது தீவிரவாதியோடோ இவர்கள் யாருடனாவது படம் முழுவதும் சவால்விட்டு மோதிக்கொண்டே இருப்பார். கடைசியில் எதிரிகளை வென்று நீதியை நிலைநாட்டுவார். இப்படித்தானே இதுநாள் வரையிலும் இருந்து வருகின்றன.
ஆனால் இந்த 'ஆக்சன் ஹீரோ பைஜூ' மூலம் அந்த பார்முலாவை உடைத்திருக்கிறார்கள். எர்ணாகுளம் ஜங்கஷனில் உள்ள ஸ்டேஷன் ஒன்றில் சப் இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி தான் நிவின்பாலி. இவருக்கு திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து திருமணம் நடக்கும் வரையிலான பதினைந்து நாட்களில் நிகழும் இவரது அன்றாட வழக்கமான போலீஸ் பணிகளை அப்படியே தொகுத்து தோரணமாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்..
எம்.எல்.ஏவுக்கு சவால் விடுவது, உயர் போலீஸ் அதிகாரியையே எதிர்த்து பேசுவது, மிகப்பெரிய தாதாவை நடுரோட்டில் பட்டையை கிளப்புவது, தேவையில்லாமல் என்கவுண்டர் பண்ணுவது என எந்த க்ளிஷேக்களிலும் சிக்காமல் ஒரு நகரத்தின் எதார்த்தமான சப் இன்ஸ்பெக்டராக தனது நடிப்பில் மிடுக்கு காட்டியிருக்கிறார் நிவின்பாலி.
கஞ்சா குடிக்கும் மாணவர்களை டீல் செய்வது, செயின் அறுக்கும் கும்பலை அடித்து வெளுப்பது, தொழிலாளிக்கு சம்பளம் தராத கம்பெனி மேனேஜரை அலற விடுவது, மாங்காய் பறித்த குழந்தையை நாயை ஏவி கடிக்கவிட்ட பணக்காரனை பஞ்சர் ஆக்குவது என காட்சிக்கு காட்சி மிடுக்கு குறையாமல் கம்பீரம் காட்டியுள்ளார் நிவின்பாலி. அதிலும் குற்றவாளிகளுக்கு அவர் செய்யும் இளநீர் வைத்தியம் அதிரவைக்கிறது.
நிவின்பாலி அன்றாடம் டீல் செய்யும் ஒவ்வொரு வழக்குகளையும் ஒவ்வொரு எபிசோடாக ஓட்ட வைத்திருப்பதால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பத்து நாள் லீவு போட்டுவிட்டு ஒரு போலீஸ் அதிகாரியுடன் சுற்றிய அனுபவம் நிச்சயமாக கிடைக்கும்.. சொல்லப்போனால் இந்தப்படத்திற்கு 'விசாரணை' என டைட்டில் வைத்திருந்தால் மிக பொருத்தமாக இருந்திருக்கும்..
கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அனு இம்மானுவேல் ஹீரோவுக்கு நான்கு காட்சிகளில் போன் பேசுகிறார்.. ஒரு பாடலுக்கு வந்து போகிறார்.. அவ்வளவே.. தனது மனைவி தனது நண்பனுடன் ஓடிப்போய் குடித்தனம் நடத்துவதை அறிந்து ஸ்டேஷனில் கண்ணீர் விடும் சுராஜ் வெஞ்சாரமூடு, குழந்தைகளின் படிப்புக்காக வேலை செய்யும் வீட்டில் நகையை திருடி விற்று மாட்டிக்கொள்ளும் ரோகிணி உட்பட படத்தில் நடித்துள்ள மற்ற துணை கதாபாத்திரங்களும் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.
பின்னணி இசையில் ராஜேஷ் முருகேசன் அதிரவைக்கிறார் என்றால், 'பூக்கள் பனிநீர் பூக்கள்' பாடலில் இசையால் வருடுகிறார் ஜெர்ரி அமல்தேவ். அலெக்ஸ் ஜே.பள்ளிக்கல்லின் ஒளிப்பதிவு மனதை அள்ளுகிறது. படத்திற்கு வசனங்கள் மிகப்பெரிய பலம். வழக்கமான போலீஸ் சினிமா பாதையில் இருந்து விலகி வித்தியாசம் காட்டியிருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.
ஆக்சன் ஹீரோ பிஜூ - கதையல்ல.. சம்பவங்களின் தொகுப்பு.. அதனாலேயே அழுத்தமும் கொஞ்சம் குறைவுதான். படம் துளி கூட போரடிக்காவில்லாம் வழக்கமான போலீஸ் பாணி படங்களை எதிர்பார்த்து வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.