தினமலர் விமர்சனம்
பைட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் வாரிசும், இளம் சண்டை பயிற்சியாளருமான திலிப் சுப்பராயன் தயாரிப்பில் பசுபதி, விமல், நந்திதா நடிக்க, வந்திருக்கிறது அஞ்சல.
இப்படக் கதைப்படி, சுதந்திர போராட்ட காலத்திற்கு முன்பு பசுபதி, பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் வழி போக்கர்களுக்கு தாகம் தணிக்கும் தண்ணீர் சாவடி வைக்கிறார். பின், அந்த சாவடி மெல்ல மெல்ல வளர்ந்து டீக்கடையாக மாறியது தான் மதுரை - சோழவந்தான் பகுதி அஞ்சல டீக்கடை. பலதரப்பட்ட மனிதர்களை நித்தமும் பார்த்து பழகிய அந்த தேநீர் விடுதிக்கு, ஒரு பெரும் கள்ளச்சாராய வியாபாரியாலும், கஸ்டமராக அடிக்கடி வந்து போகும் ஒருகள்ள நோட்டு பேர்வழியாலும், மேலும், சாலை அகலப்படுத்த வரும் அரசு உத்தரவாலும் வரும் அடுக்கடுக்கான பிரச்சினைகளை அடுத்தடுத்து சமாளித்து விமல் - நந்திதாவின் காதலையும், விமல், ஆடுகளம் முருகதாஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோருக்கான வாழ்க்கை பாதையையும் அமைத்து கொடுக்கும் அந்த டீக்கடையின் பின்னணியும் ,அதன் உரிமையாளர் பசுபதியின் தலைமுறை தாண்டிய சேவை மனப் பான்மையையும் உருக்கமாக பேசி இருக்கிறது அஞ்சல படம் மொத்தமும்.
விமல், கவாஸ்கர் எனும் கவாஸாக இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர் நடத்த பேங்க்லோனுக்காக காத்திருக்கும் இளைஞராக, காதல் காட்சிகளில் பொருந்தி நடித்துள்ளார். பிறகாட்சிகளில் ஒரே மாதிரி முகபாவம் காட்டும் விமலால் ரசிகன் வருந்துகிறான்.
பசுபதி, பாரம்பரியம் மிக்க டீக்கடை முதலாளியாக தாத்தா - பேரன் இரு பரிமாணங்களிலும் பக்காவாக நடித்திருக்கிறார். அதிலும், சுதந்திர போராட்ட காலத்தில் வரும் தாத்தா பசுபதி பிரமாதம்!
நந்திதா, கவாஸ்கரை காதலிக்கும் உத்ராவாக, ஆர்.வி.உதயகுமாரின் ஆசை மகளாக வழக்கம் போலவே கலக்கல்!
ஆடுகளம் முருகதாஸ், வில்லன் சுப்புபஞ்சு, இமான் அண்ணாச்சி, ரித்விகா, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோரில் படம் முழுக்க காதலி தேடி கலகலப்பூட்டும் முருகதாஸும், ப்ளாஷ்பேக்கில் வரும் ரித்விகாவும் சிறப்பு.
ரவி கண்ணணின் ஒளிப்பதிவில் சுதந்திரத்திற்கு முந்தைய ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசனை. இது மாதிரி பீரியட் பிளாஷ்பேக் உடைய சப்ஜெக்டுக்கு கோபி சுந்தரின் இசை பெரிய விசையாக இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.
மதுரை - சோழவந்தான் பகுதியில் இன்றும் பாரம்பரியம் மிக்க தேநீர் விடுதியாக தாயுள்ளத்துடன் செயல்படும் ஒரு டீக்கடையையும், அதற்கு வந்த சோதனைகளையும், அதன் சாதனைகளையும் அங்கு வந்து போபவர்களின் பாசம், நேசம் நிறைந்த வாழ்க்கை முறையையும் பற்றிய படம் தான் அஞ்சல. இப்படி, உணர்ச்சிமயமான ஒரு உண்மையான நிகழ்வுகள் இடம் சம்பந்தப்பட்ட கதையை இயக்குனர் தங்கம் சரவணன் இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் எனும் எண்ணம் படம் பார்க்கும் போது ஆங்காங்கே நமக்கு, எழுவது அஞ்சல படத்திற்கு பலவீனம் சேர்க்கிறது.
மற்றபடி, அஞ்சல - கெத்துல!