லக்கி (நானி) தன் போக்கில் சந்தோஷமாக வாழும் இளைஞன், இவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவ்வப்போது ஏற்படும் ஞாபக மறதி. இதனாலே அவனது திருமண வாய்ப்பு தள்ளிப்போனது. சில நாட்கள் கழித்து லக்கி , நந்தனாவை(லாவண்யா) பார்க்கிறார். அவளது அழகில் மயங்கி நந்தனாவின் மீது லக்கி காதல் கொள்கிறான்.
அவளிடம் அபரிமிதமான அன்பை எதிர்பார்க்கிறான், தன்னுடைய மறதியால் பிரச்சனை வரும் போதெல்லாம் அவளிடம் பொய் சொல்லி சமாளிக்கிறான். சுமுகமாக செல்லும் காதல் கதையில் திருப்பம் வர வேண்டுமே அதுவும் வருகிறது. நந்தனாவின் தந்தையை லக்கி பார்க்கும் தருணத்தில். அவர் தான் முன்னர் தன் மகளுக்காக லக்கியை முடிவு செய்தவர் என்பது தெரிய வருகிறது.பின் லக்கி என்ன செய்தான்? நந்தனாவையும் அவளது அப்பாவையும் எப்படி சமாளித்தான்? என்பது மீதிக்கதை.
நானி தன் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கு பழக்கப்பட்ட களத்தில் அதகளம் பண்ணியிருக்கிறார் நானி. முதல் காட்சிகளில் இருந்தே தன் நடிப்பால் ஈர்க்கிறார். எல்லா புகழும் இயக்குனருக்கே, இப்படியோரு தரமான பொழுதுபோக்கு படத்தை கொடுத்ததற்கு இயக்குநர் மாருதியை பாராட்டியாக வேண்டும். முரளிசர்மா எப்போதும் வில்லன் கதாபத்திரமே அதிகமாக ஏற்று நடித்திருக்கிறார்.
இம்முறை அவர் நாயகியின் அப்பாவாக. நானியுடனான காட்சிகள் அசத்தியிருக்கிறார்.படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே கிடையாது. கிஷோர் மற்றும் ஸ்ரீனிவாஸின் கூட்டனி ரசிகர்களை சிரிக்கவைக்கிறது.அழகான லாவண்யா காதல் காட்சிகளில் மேலும் அழகாக தெரிகிறார்.. நானியுடனான காட்சிகள் படத்திற்கு மேலும் பலம்,
ஒரே பலவீனம் அதே ஆதிகாலத்து பழக்கப்பட்ட கிளைமாக்ஸ், இறுதியில் பேசப்படும் சில மறதி சம்பந்தமான லாஜிக்குகளும் அளவுக்கு அதிகமாக தெரிகிறது..கோபி சுந்தரின் பின்னனி இசை படத்தை தாங்கிப்பிடிக்கிறது. வசனங்களும் ஒரு வித நேர்த்தியுடனே இருக்கிறது. இயக்குனர் மாருதி ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார்.
பலே பலே மகாதேவோ - பொழுதுபோக்கு சித்திரம்.