டைட்டிலை பார்த்ததும் சிறுவர் ராமயணமோ என நினைத்துவிட வேண்டாம் குஞ்சிராமன் என்கிற கதையின் நாயகனை பற்றிய கதை தான் இது. அதிலும் செல்போன் தாக்கம் உருவாகாத காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் நிகழும் கதை..
வெளிநாட்டில் வேலைபார்த்துவிட்டு லீவில் ஊருக்கு வரும் வினீத் சீனிவாசனுக்கும் (குஞ்சிராமன்) பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மாமா மகன் தயன் சீனிவாசனுக்கும் ஒரு டிவிடி பிளேயர் மூலமாக பகை ஏற்படுகிறது. இதில் வினீத்துக்கும் மாமா மகளுக்கும் பின்னாளில் திருமணம் செய்யலாம் என பேசப்பட்டு வந்த திருமண பந்தத்திற்கும் வேட்டு விழுகிறது. இதனால் கோபமாகும் வினீத்தின் அம்மா, பக்கத்து ஊரில் உள்ள சிருந்தா ஆஷப்பை வினீத்திற்கு மனம் பேசி நிச்சயம் செய்கிறார்.
எப்போதாவது ஜாலிக்காக நண்பர்களுடன் குடிக்கும் பழக்கம் உள்ள வினீத், தனது மனைவியாக வரப்போகிறவரிடம் செய்துகொடுத்த சத்தியத்தின்படி நண்பர்கள் முன்னிலையில் பாட்டிலை உடைத்துவிட்டு, இனி குடிக்க மாட்டேன் என கூறிவிட்டு வெளிநாடு போய்விடுகிறார். ஆனால் அதன்பின் ஊருக்குள் வரும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை தாண்டி யாராலும் சல்சா என சொல்லப்படும் மது பாட்டிலை ஊருக்குள் கொண்டுவரவே முடியாமல் போகிறது.. எப்படி கொண்டுவந்தாலும் அந்த இடத்திற்கு வரும்போது ஏதோ ஒருவிதத்தில் பாட்டில் உடைந்துவிடுவது வாடிக்கையாகிறது. அந்த இடத்திற்கே சல்சா முக்கு என பெயரும் வந்துவிடுகிறது.
அடுத்த வருடம் லீவில் தனது திருமணத்திற்காக ஊருக்கு வரும் வினீத்திற்கு இந்த தகவல் சொல்லப்பட, அவர் நான் கொண்டுவந்து காட்டுகிறேன் என சவால் விட்டு, தனது திருமணத்திற்கு முதல்நாள் வெளியூரில் இருந்து நண்பர்களுக்காக சல்சா பாட்டில் வாங்கி வருகிறார். ஒரு தைரியத்திற்காக கடையிலேயே நன்றாக குடித்துவிட்டு வரும் அவர், சல்சா முக்கிற்கு வந்தவுடன் கீழே விழுந்து பாட்டில் உடைந்து குத்தியதில் மயக்கம் ஆகிறார்.. ஆனால் அவர் மது அருந்திவிட்டார் என கூறி அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் சிருந்தாவுக்கும் வேறொருவருக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது..
உடனே அதே ஊரில் உள்ள போலீஸ்காரரின் தங்கையான இன்னொரு பெண்ணை அவருக்கு நிச்சயம் செய்கிறார்கள். ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அந்த பெண்ணுக்கும் அந்த ஊர் டெய்லரான அஜு வர்கீசுக்கும் யாரும் எதிர்பாராத விதமாக திருமணம் நடக்கிறது இந்த வருத்தத்தில் மீண்டும் வெளிநாட்டுக்கு திரும்பிச்செல்கிறார் வினீத் சீனிவாசன். அவர் போனபின் அவரது சண்டைக்கார மாமா ஒரு சல்சா பாட்டிலை வாங்கிக்கொண்டு, அதை உடையாமல் வெற்றிகரமாக ஊருக்குள் கொண்டுவந்து ஊர்க்காரர்களின் ஹீரோவாகிறார்..
ஆனால் புதிய பிரச்சனை வேறொரு ரூபத்தில் முளைக்கிறது. வினீத் சீனிவாசனின் திருமணம் நின்றதில் இருந்து ஊருக்குள் எந்த திருமணமும் நடைபெற முடியாமல் போகிறது. மீண்டும் அடுத்த வருடம் திரும்பி வரும் வினீத் சீனிவாசனுக்கு இந்தமுறை வேறொரு பெண்ணை நிச்சயிக்கிறார்கள்.. அந்தப்பெண்ணை தான் விரும்புவதால், இந்த திருமணத்தை தடுக்க வினீத்தின் மாமா மகன் தயன், அவனது கூட்டாளி அஜு வர்கீசுடன் சேர்ந்து சதி செய்கிறார்.. இந்தமுறையாவது வினீத்தின் திருமணம் நடந்ததா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
நிச்சயமாக ஒரு புது கதைக்களத்தில், புதுசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு ரொம்ப அழகாக படம் பண்ணியிருக்கிறார்கள்.. படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே இருபது வருட காலகட்டத்திற்கு முந்தைய கெட்டப்புகள் கச்சிதமாக பொருந்துகின்றன.
கதை நாயகனாக வினீத்திற்கும் அவரது மாமா மகன் தயனுக்கும் டிவிடி பிளேயரில் சிக்கிய ஒரு பிட்டு படத்தால் பகை உண்டாவது சுவாரஸ்யம்.. அதேபோல வினீத் குடிப்பதை நிறுத்தியதும் ஊரே மது கிடைக்காமல் அல்லாடுவது, வினீத்தின் திருமணம் நின்றதும் ஊருக்குள் எந்த திருமணமும் நடக்காதது என ஒவொரு விஷயத்தையும் சுவாரஸ்யமாக கற்பனை செய்திருக்கிறார்கள்.
தனது நண்பன் தயன் காதலிக்கும் பெண்ணை, வினீத் சீனிவாசன் திருமணம் செய்துகொள்வதை நிறுத்துவதற்காக, அஜு வர்கீஸ் பண்ணும் யுக்தி விலாநோக சிரிக்கவைக்கும் காமெடி.. மணப்பெண்ணின் அறையை வெளியில் இருந்து பூட்டுவதற்கு பதிலாக உள்ளே சென்று பூட்டிக்கொள்வதும், மறுநாள் இருவரையும் ஒரே அறையில் வைத்து பார்த்ததும் அவருக்கே அந்தப்பெண்ணை திருமணம் செய்து வைத்துவிடுவதும் செம ட்விஸ்ட்.. செம காமெடி.
க்ளைமாக்ஸில் பிஜு மேனனின் அதிரடி என்ட்ரி கடைசி பத்து நிமிடத்தை இன்னும் களைகட்ட வைக்கிறது. க்ளைமாக்ஸில் தனது மாமன் மகளையே வினீத் திருமணம் செய்வதும், மாமன் மகளை திருமணம் செயவந்த பிஜுமேனன் வினீத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதுமாக இன்னொரு ட்விஸ்ட் வைத்து, கடைசியில் தயன் சீனிவாசனுக்கு எந்தப்பெண்ணையும் கிடைக்கவிடாமல் செய்து வினீத் பழி தீர்ப்பது நச்.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, அறிவால் கலாச்சாரம் என எந்த சீரியஸும் இல்லாத ஒரு ஜாலியான நகைச்சுவை படத்தை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் இயக்குனர் பாசில் ஜோசப்.