இதுவரை நீங்கள் கண்டிராத புதிய பாணியிலான படம் என அடிக்கடி பல இயக்குனர்கள் சொல்வதை கேட்டு, அதை நம்பி படம் பார்த்து ஏமாந்திருப்பீர்கள். ஆனால் உண்மையிலேயே இந்தப்படம் மலையாள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒரு சேர தந்திருக்கும் புதுவிதமான படைப்பு என காலரை தூக்கிவிட்டு சொல்லலாம்.
கோவாவின் பின்னணியில் கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர் லிஜோ. மிகப்பெரிய பணக்காரர் ஒருவரிடம் உள்ள இரண்டு விலைமதிப்பில்லாத வைரங்களை பத்துகோடி ரூபாய்க்கு விலை பேசி ஒருவார காலத்திற்குள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வதாக சொல்கின்றனர் பிருத்விராஜும் அவரது கூட்டாளி இந்திரஜித்தும். அந்த வைரங்களை கடத்தல் மன்னன் விஜயபாபுவுக்கு 100 கோடி ரூபாய்க்கு தருவதாக பேரம் பேசுகின்றனர்.
அந்த வைரங்களை வாங்க தங்களுக்கு தேவையான பத்துகோடியை இரண்டு இடங்களில் இருந்து சுடுகின்றனர் பிருத்விராஜும் இந்திரஜித்தும். பணத்தை இழந்த ஆட்கள் தங்களது துரத்தல் வேட்டையை ஆரம்பிக்கின்றனர். பிருத்விராஜ் & கோ அந்த வைரங்களை வாங்கி கைமாற்ற முயலும்போது அது இன்னொரு கும்பலால் தடைபடுகிறது.. கடைசியில் இந்த வைரம் பல நபர்களின் உயிர்களை காவு வாங்கி, யாரிடம் போய் சேருகிறது என்பது தான் க்ளைமாக்ஸ்.
படத்தின் முதல் காட்சியிலேயே இது வழக்கமான படம் இல்லை என்பதை நம் மூளையில் பதியவைத்து விடுகிறார்கள்.. காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து கௌபாய் படங்களின் பின்னணியில் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை, என்னதான் எக்ஸ்பிரஸ் ட்ரெயினாக இருந்தாலும், பாம்பன் பாலத்தை கடக்கும் பாசஞ்சர் வண்டியின் வேகத்திலேயே நகருவதுபோல ரொம்ப ஸ்லோவாக நகருவது சாதாரண ரசிகனுக்கு சோதனை தான்.
பிருத்விராஜ்(பாஞ்சோ), இந்திரஜித்(வின்சி) கூட்டணியின் 'கெக்கே பிக்கே' கோமாளித்தனங்களில் பிருத்விராஜை விட இந்திரஜித் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். சம்பந்தமே இல்லாத ட்ராக்கில் வந்து இணையும் மஜ்னுவான ஆர்யாவும் அவரது கூட்டாளியான செம்பான் வினோத்தும்(டீசல்) மேற்கொள்ளும் வேன் பயணமும் அதில் நடக்கும் கூத்துகளும் பெரிய அளவில் ரசிக்கும்படியாக இல்லை.
லைலாவாக வரும் ஸ்வாதிக்கு இந்தப்படத்தில் நடித்ததே புதிய அனுபவமாக இருந்திருக்கும். ஃப்ரிட்ஜ்க்குள் உறைந்தநிலையில் பிணமாக கிடக்கும் ஸ்வாதி. ஆர்யாவின் பயணத்தின்போது இல்யூஷன் என்கிற கற்பனை தோன்றல் வடிவத்தில் ஆர்யாவையும் அவரது கூட்டாளியையும் கலங்கடிப்பது சுவராஸ்யம். கிட்டத்தட்ட சூது கவ்வும் படத்தில் வரும் சஞ்சிதா ஷெட்டியின் 'இருக்கு ஆனா இல்ல' டைப் கேரக்டருக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
விஜயபாபுவின் கோணங்கித்தனமான வில்லத்தனம், குழந்தையை டார்ச்சர் பண்ணும் பெற்றோர்களை சுட்டுத்தள்ளும் சன்னி வெய்ன், இழந்த பணத்தை மீட்பதற்காக பயணம் மேற்கொள்ளும் அனில் & கோ, என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு வித தனித்தன்மை இருப்பதை காட்டியிருப்பது புதுசுதான்.
அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மலையாளப்படம் எப்படி இருக்கும் என்பதை இரண்டரை மணி நேரமும் கண்கூடாக காண முடிகிறது. பிரசாந்த் பிள்ளையின் நவீனத்துவமான பின்னணி இசையும் அதை உறுதி செய்கிறது. ஏற்கனவே தனது சிட்டி ஆப் காட், ஆமென் படங்களில் சில புதிய முயற்சிகளை மேற்கொண்ட இயக்குனர் லிஜோ ஜோஸின் மிகவும் துணிச்சலான ஒரு புதிய முயற்சி என்றுதான் இந்தப்படத்தையும் பாராட்ட தோன்றுகிறது. அதுதான் உண்மையும் கூட.
ஒரு புதிய ட்ரெண்டிலான படத்தில் நடித்ததுடன் இந்தப்படத்தை தயாரித்தற்காகவும் பிருத்விராஜ், ஆர்யா, இருவரும் பெருமையும் கூட பட்டுக்கொள்ளலாம்.. ஆனால் வழக்கமான ஒரு கமர்ஷியல் படத்தை எதிர்பார்த்து வந்த பேமிலி ஆடியன்சும், குழந்தைகளும் இடைவேளைக்கு முன்னரே தூங்க ஆரம்பித்துவிட்டதும், ஷ்ஷ்.. அப்பாடா என பல ரசிகர்கள் நெளிந்துகொண்டே அவ்வப்போது குரல் கொடுத்ததும் வெகுஜன ரசிகனுக்கு இந்தப்படம் ஏமாற்றத்தையே தரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அப்படி என்னதான் பண்ணியிருக்கிறார்கள் என்கிற ஆர்வம் ஏற்பட்டால் ஒருமுறை தாராளமாக இந்த டபுள் பேரலை பார்க்க கிளம்புங்கள்..