தினமலர் விமர்சனம்
கண்மணியின் எழுத்து, இயக்கத்தில், ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டர்டெயின்மெண்ட் ஜி.ராகவன் தயாரிப்பில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி.மதன் வெளியிட வந்திருக்கும் ஹாரர், காமெடி படம் தான் "பேய்கள் ஜாக்கிரதை" இப்படம் பற்றி இனி, பார்போம்...
ஈ.சி.ஆர் ஏரியா வஸ்தாத் ஆன அண்ணாச்சி தம்பி ராமையாவிற்கு பேய் என்றாலே பயம். அந்த பயத்தாலேயே மனைவி குழந்தை உள்ளிட்ட பேமிலியை விட்டு பிரிந்திருக்கிறார் அந்தபெரிய மனிதர். அண்ணாச்சி தம்பிராமையா கூடவே சதாசர்வ நேரமும் ஏகப்பட்ட ஆள் அம்புகள் இருந்தாலும்., பேய் என்று எதுவுமே இல்லை... என அவருக்கு தெரிய, தெளிய வைத்து அவரது குடும்பத்துடன் அவரை சேர்த்து வைக்க, அநாதையான ஹீரோ ஜீவரத்னம் வந்து சேருகிறார்.
பேய் இல்லை என சொல்ல வந்த ஹீரோ ஜீவரத்னத்திற்குள் சில பேய்கள் புகுந்து ஆட்டம் காட்டுகின்றன. இதுமாதிரி சம்பவங்கள், தம்பி ராமையாவை மேலும் பயமுறுத்தும் விதமாக அமைகின்றன. மேலும், ஜீவரத்னத்தின் காதலுக்கும் உலை வைக்கும் விதத்தில் அந்த பேய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அப்படி தனக்குள் ஜாகை செய்யும் பேய்கள் யார்?, எவர்..? அவற்றின் ஆசாபாசங்கள், அடங்கா அபிலாஷைகள் என்ன, என்ன? அவற்றுக்கும், தனக்கும் என்ன ஒட்டு, உறவு ..? எனக் காணக்களம் இறங்கும் ஜீவரத்னம் சந்திக்கும் சவால்களும், சம்பவங்களும் தான்... பேய்கள் ஜாக்கிரதை படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், ரசிகனைப்படுத்தல்... இத்யாதி, இத்யாதி... எல்லாம்!
அண்ணாச்சி தம்பி ராமையாவை பயமுறுத்தும் அத்தனை பேய்களும் விபத்தொன்றில் நாயகரை மட்டும் தப்பிக்க வைத்து, தாங்கள் எல்லோரும் அகால மரணமடைந்த அவரது (ஹீரோவின்...) உறவு பேய்கள்.. எனும் க்ளைமாக்ஸ் திருப்புமுனை மட்டுமே மொத்த படத்திலும் வித்தியாசம். ஆனால் அதைக் காண ரசிகன், கடைசி சீன் வரை தியேட்டரில் இருக்க வேண்டுமே.?! என்பதே ஒரு விமர்சகனாய் நம் ஆதங்கம்!
கதாநாயகராக புதியவர் ஜீவரத்னம் நடிப்பில் நல்ல துடிப்பு இருக்கிறது. பேஷ், பேஷ்!
கதாநாயகியாக அறிமுகம், புதுமுகம் ஈஷான்யா, ஓ.கேய்யா ..!
தம்பி ராமையா, பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், கெஹனாவசிஸ்த், ஜான்விஜய், ஆடுகளம் ஜெயபாலன், தருண்குமார், பிளாக் பாண்டி ஆகியோரில் நான் கடவுள் ராஜேந்திரனும், தம்பி ராமையாவும் திருப்தி!
மல்லிகார்ஜுனின் ஒளிப்பதிவு, மரியஜெரால்டின் இசை, சுரேஷ் ஆர்ஸின் படத்தொகுப்பு உள்ளிட்ட எல்லாமும் பேய் படம் என்பதால் சற்று கூடுதலாகவே மிரட்டியுள்ளன பாவம், கிகன்!
கண்மணியின் எழுத்து, இயக்கத்தில், வித்தியாசமான பேய் கதை என்பதும்.... பிரமாதமான திருப்புமுனை க்ளைமாக்ஸும் ப்ளஸ் என்றாலும், காமெடியாக பேய் கதை சொல்கிறேன்... பேர்வழி... என ரசிகர்களை விழி பிதுங்க விட்டிருப்பது சற்றே மைனஸ்!
ஆக மொத்தத்தில், நாய்கள் ஜாக்கிரதை படம் மாதிரி வித்தியாசமாக வருமென்று "பேய்கள் ஜாக்கிரதை படத்தை எடுத்திருப்பார்கள்... போலும்! ஆனால், பாவம் விறுவிறுப்பில்லாத காமெடி திரைக்கதையால், நமக்கென்னவோ , ரசிகர்கள் ஜாக்கிரதை என்றே சொல்ல தோன்றுகிறது!!