பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான லக்ஷ்மி மஞ்சு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்திருக்கும் படம் தொங்காடா ஆகும். அவரது சொந்த தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 5வது படம் என்பதால், அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் படபடப்பு இருப்பது இயல்பே. சரி லக்ஷ்மி மஞ்சு தனது முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறாரா என்பதனை இப்போது பார்ப்போம்...
படத்தின் ஆரம்பத்தில் கடம் ராஜு(பிரபாகர்) தற்செயலாக சந்திக்கும் வெங்கட் (அதவி செஷ்), விஜ்சு(மது நந்தன்) ஆகியோருடன் இணைந்து பிரபல நடிகையான ஸ்ருதியை (லக்ஷ்மி மஞ்சு) கடத்த திட்டமிடுகின்றனர். அவர்களின் திட்டம் சரிவர நிறைவேறி, நடிகை ஸ்ருதியை, பிரபல துப்பறியும் நிபுணரான பிரம்மானந்தம் வீட்டில் மறைத்து வைக்கின்றனர். அதாவது பிரம்மானந்தம் அமெரிக்கா சென்டிருக்கும் நேரத்தை கடத்தல்காரர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்கின்றனர். பிரபல நடிகையை ஏன் கடத்துகின்றனர்? அதனால் யாருக்கு என்ன பயன்? சம்பந்தம் இல்லாத மூன்று பேர் இந்த கடத்தலில் ஏன் ஈடுபடவேண்டும்? பிரபல நடிகை எப்படி தப்பிக்கிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தருவதுதான் இந்த படத்தின் முழுக்கதையாகும்.
லக்ஷ்மி மஞ்சுவை பாராட்டியே ஆகவேண்டும். அவர் ஒரு அறிமுக இயக்குனரை நம்பி தயாரிப்பில் ஈடுபட்டதற்கு காரணம் கதை தான். ஏனெனில் கதையில் புதுமைக்கும், பரபரப்புக்கும் குறைவில்லை. மேலும் நடிக, நடிகையர்களுக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பும் வழங்கப்பட்டு இருக்கின்றது. பல காட்சிகளில் வசனங்கள் இயல்பாகவும், நகைச்சுவையாகவும், அதே வேளையில் அர்த்தமுள்ளதாகவும் அமைந்துள்ளது. அதற்காக பிரபல வசனகர்த்தாவான சாய் மாதவ் புர்ராவை பாராட்டலாம். ப்ருத்வி, பிரம்மானந்தம் மற்றும் பிரகதி ஆகியோர் தங்களது டைமிங் வசனங்களால் கலகலப்பை ஏற்படுத்துகின்றனர்.
படத்தின் பின்னணி இசையில் பிரபல இசை அமைப்பாளரான சாய் கார்த்திக் நம்மை மெய் மறக்க செய்கிறார்.அவர் சில காட்சிகளில் நடிக, நடிகையர்கள் தவறவிட்டவைகளை தனது இசை மூலம் அழகாக சரி செய்துவிடுகிறார். படத்தின் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். படத்தின் முதல் பாதியின்
நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் பல எதிர்பாராத திருப்பங்களை தந்த இயக்குனருக்கு ஹேட்ஸ் ஆப். படத்தில் வரும் ஒரு பாடலில் 9 பிரபலங்களுடன் நடனமாடும் வாய்ப்பை லக்ஷ்மி மஞ்சு பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
கதையை மட்டுமே நம்பி ஒரு படத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்ற இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் முயற்சி முழுமை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். சில நேரங்களில் அவருடைய அனுபவமின்மையும் தலைகாட்டி விடுகின்றது. லக்ஷ்மி மஞ்சு தனது ஓபனிங் காட்சியில் தூள் பறக்கும் சண்டை காட்சியில் கலக்கி இருக்கிறார். அவர் தனது டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அவர் நிறையவே கருத்துகளை சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார். நகைச்சுவை நடிகரான பிரபாஸ் ஸ்ரீனுவை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி ரசிக்கும் படியாகவே உள்ளது. இந்த படத்தை லக்ஷ்மி மஞ்சு நன்றாக ரசித்து நடித்து ரசிகர்களையும் ரசிக்கவே வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ''தொங்காடா - தூள் பறக்கும் காமெடி ஆக்ஷன் டிராமா!''