தினமலர் விமர்சனம்
"நல்ல தோழன் தந்தைக்கு சமமாகிறான். நல்ல தோழி தாய்க்கு சமமாகிறாள்..." எனும் தத்துவத்தை போதிக்கும் விதமாக வெளிவந்திருக்கும் "ஒரு தோழன் ஒரு தோழி" படத்தின் இயக்குநர் பெ.மோகன், ஒளிப்பதிவாளர் சிவன்குமார், படத்தொகுப்பாளர் கிருத்திகா, தயாரிப்பு மேற்பார்வையாளர் மகாதாரா உள்ளிட்ட எட்டு மெயின் டெக்னீஷியன்கள் 1999 - 2000ம் வருடத்தின் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்பதிலிருந்தே இப்படத்தில் சிறப்பான சினிமா சொல்லப்பட்டிருக்கும்! என்பதை புரிந்துகொள்ள வேண்டும்!
ராஜபாளையம் பகுதியில் நிகழ்ந்த ஒரு உண்மை நிகழ்வை யதார்த்தமான சுவாரஸ்யத்துடன் சினிமா மொழியில் சின்ன பட்ஜெட்டில் சொல்லியிருக்கும் ஒரு தோழன் ஒரு தோழி படத்தை பிரபல பைனான்சியரும், 'வெள்ளக்காரதுரை' வெற்றி்ப்பட தயாரிப்பாளருமான ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தேடிப்பிடித்து வெளியிடுகிறது... என்பதிலிருந்தும் ''ஒரு தோழன் ஒரு தோழி''க்கு தமிழ்த்திரையுலகம் தந்திருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும்!.
கதைப்படி., மனோ தீபன், மீனேஷ் கிருஷ்ணா இருவரும் இரத்தமும் சதையுமான தோழர்கள். இருவரும் நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளிகள். இவர்கள் வாழ்க்கையில் இரு பெண்கள் குறுக்கிடுகின்றனர். மனோதீபனுக்கு தலைவன் இல்லா ஏழை குடும்பத்து கல்லூரி மாணவி அஸ்த்ரா மீது காதல் வருகிறது. ஆரம்பத்தில் மனோதீபனை, மனவியாதி கொண்டவர் மாதிரி விரட்டி அடிக்கும் அஸ்த்ரா, அதன்பின் மனோவிற்கு 'டபுள் ஓகே' சொல்லி அவரை விரட்டி, விரட்டி காதலிக்கிறார். மற்றொரு நாயகர் மீனேஷ் கிருஷ்ணாவுக்கும் அவரது முறைப்பெண் அபினிதாவிற்கும் இடையிலும் அதேமாதிரியானதொரு ஊடல், கூடல், காதல்!
இந்நிலையில் மனோ தன் காதலி அஸ்த்ராவிற்கு ஒரு கைபேசி வாங்கி கொடுக்கிறார். அந்த செல்போனில் அம்மணியின் கவனக்குறைவால் அவரது முழுநிர்வாண கோலம் வீடியோ பதிவாகிவிடுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் போன் பழுதாக., அதை பழுதுபார்க்கும் கடையில் கொடுக்கும் அஸ்த்ராவை, அவரது நிர்வாண வீடியோவை பதிவிறக்கம் செய்துகொண்டு பாலியல் உறவுக்கு அழைத்து பக்காவாக மிரட்டுகிறார்கள் கடைக்காரரும் அவரது நான்கு நண்பர்களும்!.
கிராமத்து ஏழைப்பெண் அஸ்த்ரா அவர்களது இச்சைக்கு இணங்க மறுத்து எடுக்கும் முடிவும்., அவரது அகாலமுடிவைத் தொடர்ந்து அஸ்த்ராவின் தோழன் மீனேஷ் கிருஷ்ணாவும், காதலன் மனோதீபனும் எடுக்கும் அதிரடி முடிவும் தான் ஒரு தோழன் ஒரு தோழி படத்தின் திகிலும், திருப்பங்களும் நிறைந்த யதார்த்தமான மீதிக்கதை. நிச்சயம் நட்பையும், காதலையும் மையப்படுத்தி வெளிவந்த மற்ற படங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான முயற்சி இப்படம் எனலாம்!.
நாயகர்கள் மனோஜ்தீபன், மீனேஷ் கிருஷ்ணா, நாயகியர் அஸ்த்ரா, அபினிதா ஆகிய நால்வரும் யதார்த்தமான ஒப்பனை ஒரு துளியும் இல்லா கிராமிய முகங்கள். நால்வரும் திறமையான நட்சத்திரங்களும் கூட! என்னதான் யதார்த்தம் என்றாலும், யதார்த்தத்திற்கு எதிரி ஒப்பனை...(மேக்கப்) என்றாலும் கூட நாயகி அஸ்த்ராவின் செம்பட்டை தலையில் ஒரு கை தேங்காய் எண்ணெய் கூடவா வைக்ககூடாது..? எனும் கேள்வி காட்சிக்கு காட்சி எழுவது பலவீனம்!
நாயகர்களுடன் ஆலையில் வேலை செய்தபடி சைக்கிளில் காமெடியும், கலகலப்புமாக வலம் வரும் ஹலோ கந்தசாமியின் பாத்திரமும், பழமொழிகளும் 'நச் - டச்!'
எவ்வளவுதான் யதார்த்தம் என்றாலும் டாலடிக்க வேண்டிய இடங்களில் கூட டல் அடிக்கும் சிவன்குமாரின் ஒளிப்பதிவு சில இடங்களில் சிறப்பு! பல இடங்களில் பல்பு!. கே.ஜெய்கிருஷின் பின்னணி இசை பின்னி பெடலெடுத்தாலும் பாடல்கள் வலிய திணிக்கப்பட்டதாகவே தோற்றமளிக்கிறது.(ஆமாம், யதார்த்த சினிமாவிற்கு பாடல்கள் எதற்கு.?) கிருத்திகாவின் படத்தொகுப்பு பக்கா! வட்டிக்கடன் பேர்வழியும் வம்பு தாதாவும் தான் தோழர்களுக்கும், தோழிக்கும் வில்லன்களாக இருப்பார்கள்... என பார்த்தால, இடைவேளைக்குப் பிறகு எக்கச்சக்க திருப்பத்தை யோசித்து வைத்து, ரசிகனை சீட்டின் நுனிக்கும் அழைத்து வந்துவிடும் இயக்குநர் பெ.மோகன், வித்தியாசமாக, விறுவிறுப்பாக முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்! நிச்சயம் மனித திறமையை உணர இப்படத்தின் மூலம் அன்பு வழி காட்டியிருக்கிறது. டைரக்டர் சார்!!
மொத்தத்தில், ''ஒரு தோழன் ஒரு தோழிக்கு, சில விருதுகள் பல வெற்றிகள் நிச்சயம்!!.