தினமலர் விமர்சனம்
ஒரு காலத்தில் கமலின் நாயகியாக, சக்கை போடு போட்ட ஸ்ரீதேவி வில்லியாகவும், இன்று கமலின் கலையுலக பெண் வாரிசாக சக்கைபோடு போட்டு வரும் சுருதிஹாசனுடன், ஹன்சிகா மோத்வானியும் சேர்ந்து கதாநாயகிகளாகவும் விஜய்யுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் "புலி!". இளைய தளபதி "விஜய், இயக்குனர் சிம்புதேவனின் இயக்கத்தில் நடித்திருக்கும் பாகு பலி டைப் சரித்திரப்படம்! தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படைக்குமா? பார்ப்போம்...
வேதாள உலகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் கொடுங்கோல் - அரசி, யவன ராணி ஸ்ரீதேவி. அவரது ராஜ்ஜியத்தின் கீழ் படிந்த ஒரு குறுநிலத்தில் மனிதப் பிறவியே அல்லாத அம்மணியின் செங்கோல் அடிக்கடி தவறுவதையும், அராஜகங்கள் அரங்கேறுவதையும் கண்டு மனம் புழுங்கும் சாதாரண அக்குறுநில குடிமகன் மருதிரன் - விஜய், ஒரு நாள் அசாதாரண மருந்துகள் மூலம் வேதாள பிறவி எடுத்து வேதாளங்கள் தூக்கி சென்று பவுர்ணமி பூஜைக்கு பலி கொடுக்க வைத்திக்கும் தன் காதலி பவளமல்லியையும், தன் மண்ணையும் மீட்க வேதாளங்களுடன் நடத்தும் போராட்டம் தான் புலி படம் மொத்தமும்!
விஜய் மக்களுக்காக, மக்கள் தலைவனாக, நின்று தைரியமாக செய்யும் வேதாள - மானுடப் புரட்சியில், வேதாள கூட்ட தலைவி யவனராணி - ஸ்ரீதேவியின் அரியணை ஆட்டம் காண்கிறது. மக்கள் ஒன்று திரண்டு, தங்களுக்காக போராடிய விஜய்யை ஆட்சி கட்டிலில் ஏற்றி அழகு பார்க்க துடிக்கின்றனர். விஜய் அரியணையில் ஏறி ஆட்சி செய்தாரா? அல்லது அது தன் வேலை அல்ல.., பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் செங்கோல் தவறக்கூடாது... கொடுங்கோல் ஆட்சி புரியக்கூடாது... என ஆட்சியாளர்களுக்கு புரிய வைத்து, பொருத்தமான ஒருத்தரை ஆட்சி கட்டிலில் அமர வைத்து, கிங் ஆக விரும்பாமல் கிங் மேக்கர் ஆகும் முயற்சியில் வெற்றி பெற்றாரா ? இல்லையா.. ? அல்லது மிஸ்டர் பொது ஜனமாக, வேதாளமாக... ஒதுங்கி நின்றாரா.? எனும் கேள்விகளுக்கு புலி பதுங்குவதும் தெரியாமல் பாய்வதும் தெரியாமல் .. "பாகுபலி "பட ஸ்டை லில் பம்மி பதுங்கியிருப்பதும்., பாய முற்பட்டிருப்பதும் தான் புலி " படத்தின் பலம், பலவீனம்... எக்ஸட்ரா, எக்ஸட்டரா... கரு, கதை, களம், காட்சிபடுத்தல் எல்லாம் எனலாம்.
இளைய தளபதி விஜய், சுருதிஹாசனுடனான காதல் காட்சிகளிலாகட்டும், "நான் ஈ "சுதீப் மீது வைக்கும் நம்பிக்கையிலாகட்டும், ஸ்ரீதேவியுடனான முட்டல், மோதல்களிலாகட்டும், இன்னும் பிற ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் காட்சிகளிலும் கூட, விஜய் வழக்கமான "வாங்கண்ணா, வணக்கங்கண்ணா... விஜய் அல்ல ., அதையும் தாண்டிய ஹார்டு ஒர்க்கர் தான் ... என்பதை, பிரேம் டூ பிரேம் நிருபித்திருக்கிறார். அதிலும் ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா விஜய் அப்பப்பா. பாசத்துக்கு முன்னாடி தான் நான் உருகுற பனி . பகைக்கு முன்னாடி நான் உருமுற புலி ... என்றும் பலம் உடம்புல இல்ல ... திறமையில தான் இருக்கு ... என்றும் ., ராணிக்கு என் மீது சந்தேகம் இல்ல, நடுவுல இருக்கிறவங்களுக்கு தான் இருக்கு என்றும், டைமிங்காக ரீலுக்கு ஒரு பன்ச் டயலாக் எல்லாம் அடித்து தன் ரசிகர்களை தக்க வைத்து கொள்கிறார்.
சுருதிஹாசன் புலியின் கிளியாக, வந்து விஜய்யுடன் கொஞ்சி, கொஞ்சி பேசி., டூயட் பாடி, ஆடி ரசிகனின் தூக்கம் தொலைக்க செய்திருக்கிறார்.
சுருதி மாதிரியே ஹன்சிகாவும் பாகுபலி தமன்னா ஸ்டைலிலேயே எண்ட்ரி கொடுத்து விஜய்யுடன் இரண்டு டூயட்களுக்கு ஆடிப்பாடி ஒய்கிறார். ஆக்ஷ்ன் படத்தில் அதற்கு மேல் கதாநாயகிகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்..?
ஸ்ரீதேவி, கொடுங்கோல் ராணியாக பழைய மப்பும், மந்தாரமும் கொஞ்சமும் குன்றாமல் கண்களில் மட்டும் வில்லத்தனத்தை ஏற்றிக் கொண்டு பெரிதாக கோலோச்சியிருக்கிறார். பலே, பலே!
நான் ஈ சுதீப்பும் நச் சென்று நடித்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.
ஜிங்கிலியா... உள்ளிட்ட பாடல்களில் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை, புலிக்கு புதிய விசையைத் தந்தாலும், சில இடங்களில் அளவுக்கு அதிகமாக அதிரும் பின்னணி இசை, நம் மனசை படத்தோடு பசை போட்டு ஓட்ட விடாமல் வெட்டி விடுகிறது.
நட்டி எனும் நடிகர் என். நடராஜ சுப்ரமணியனின் ஒளிப்பதிவு, சில இடங்களில் ஓஹோ பதிவு., சில இடங்களில் ஓ.கே பதிவு !
ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, டி.முத்துராஜின் கலை இயக்கம் உள்ளிட்டவைகளும் புலியின் பலமாக பேசப்படும்!
விஜய், கொடுங்கோல் ராணியை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்குவதும், பொருத்தமான தலைவராக தானே அரியணை ஏறுவதும்... என்ன தான், மன்னர்காலத்து கதை என்றாலும், எக்குத்தப்பாய் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் படி ஏதேதோ அரசியல் பேசுவது "புலி" படத்திற்கு பலமா? பலவீனமா..? என்பதை இளைய தளபதி விஜய்யும், இயக்குனர் சிம்புதேவனும் தான் சொல்ல வேண்டும்!
பொதுவாக புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளும் என்பார்கள்... இங்கு பாகுபலி யைப் பார்த்து இந்தப் புலி சூடு போட்டுக் கொண்டிருப்பது காமெடி(அல்லது பாகுபலியின் இயக்குநர் ராமெளலியும், புலியின் இயக்குநர் சிம்புத்தேவனும் ஒரே கதையை வேறு ஏதோ வெளிநாட்டு படத்திலிருந்து உருவியிருப்பார்கள் போலும்...) புலி படத்தின் கதைதான் பாகுபலி என்றால் ஹீரோ விஜய்க்கு, மஹதீரா எனும் தெலுங்கு படத்தின் பெயரை பிரதிபலிக்கும் வண்ணமாக மருதீரன் என பெயர் சூட்டியிருப்பதும் அச்சடித்தான் காப்பியாக இருப்பது அபத்ததிலும் அபத்தம்.
புலிக்கு முன்னதாகவே ரிலீஸாகிவிட்ட பாகுபலியிலிருந்து வித்தியாசப்படுத்திகிறேன் பேர்வழி என கிராபிக்ஸில் விஜய்யின் தோழனாக வரும் பேசும் பறவை, கருஞ்சிறுத்தையுடனான விஜய்யின் சண்டைக்காட்சி, பச்சைத்தவளை, அதன்மீதான தம்பி ராமைய்யாவின் பாசநக்கல், பிரம்மாண்ட பேசும் ஆமை... என ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது புலி. குழந்தைகளுக்கு வேண்டுமானால் புலி பெரிதாக பிடிக்கலாம், விஜய் ரசிகர்களுக்கும் கூட சந்தேகம் தான்.
ஆக மொத்தத்தில், புலி தமிழ் சினிமா ரசிகனின் இல்லை, இல்லை... விஜய் ரசிகர்களின் வயிற்றில் கரைத்திருக்கிறது கொஞ்சம் புளி!
புலி - வெறும் உருமல்! - கொஞ்சம் விஜய்யின் அரசியல் ஆசை பொருமலும் கூட ..!
------------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
விஜய்யின் அறிமுகக் காட்சியில் வில்லனின் எடுபிடிகளின் காலில் அவர் விழும்போதே ரசிகர்களுக்கு ஏமாற்றம் தொடங்கிவிடுகிறது. பதுங்கிப் பாயும் எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லாத, கதையினந் ஆரம்ப நிலையிலேயே ஏன் அப்படிச் செய்கிறார் என்பது விளங்கவில்லை. அந்தச் சமயத்தில் பாத்திரங்களின் உரையாடலில் இருந்து எப்போதெல்லாம் வில்லனின் கையாட்கள் கிராமத்தினரைத் துன்புறுத்த வருகிறார்களோ அப்போதெல்லாம், காலில் விழும் உத்தியைத்தான் அவர் வழக்கமாகக் கையாளுகிறார் என்பதையும் அவதானிக்க முடிகிறது. விஜய்யின் அப்பாவாக வரும் புலிவேந்தன் (இன்னொரு) விஜய்யும் எந்த எதிர்ப்புமின்றி வில்லன் தரும் விஷத்தைக் குடித்து ஊர் மக்களைக் காப்பாற்றுகிறார்! அவரது அலங்கார மாறுவேடப் போட்டி சாமியார் போல இருக்கிறது.
கதைக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா என்று இரண்டு கதாநாயகிகள். ஒரு கதாநாயகிகூடத் தேவைப்படாத அளவுக்குத்தான் திரைக்கதை இருக்கிறது. அவரது உடையலங்காரம் விரசமாக .ள்ளது. இடைவேளைக்குப் பிறகு ஸ்ருதி, படுத்துக் கொண்டே நடிக்கிறார். ஆம்! அவரை ஒரு பலிபீடத்தில் கிடத்தி, ஒரு குண்டாந்தடியை அவர்மீது அசைத்துக் கொண்டே ஸ்ரீதேவி வரும் பல காட்சிகள் நகர்கின்றன.
பேசும் பறவை, பேசிவிட்டுக் காறிதுப்பும் ஆமை, நாக்கினால் தடவினால் வழிகாட்டும் பச்சைத் தவளை, சித்திரக் குள்ளர்கள், இயல்பாகவே நீலநிறத்தைக் கொண்ட கண்கள் மற்றும் கோபமடைந்தால் கோரை பற்கள் வளரும் அமைப்புடைய வேதாளங்கள், மோதிரத்தில் இருக்கும் சிலந்தியின் காலை அழுத்தினால் வெளியேறும் வசியமாக்கும் பச்சை வண்ண வசிய வஸ்து, ஒற்றைக்கண் ராட்சசன் என்று பல அம்சங்களும் படத்தில் உண்டு. காதைக் கிழிக்கும் வகையில் இசை இருக்கிறது. மாயா ஜாலப் படமா அல்லது சரித்திரப் படமா என்ற குழப்பம் நமக்கு மட்டுமல்ல... இயக்குநருக்கும் கடைசிவரை இருந்திருப்பது தெரிகிறது. வெவ்வேறு வண்ணமுள்ள துணிகளை ஆங்காங்கே கிழித்து தைத்தும் அணிவதுதான் அந்தக் கால வழக்கம் போலும்! மிக மோசமான ஆடை வடிவமைப்பு!
புலி - விட்டலாச்சாரியா ரிட்டர்ன்ஸ்!