ஜுலாயி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, பிரபல ஹீரோ அல்லு அர்ஜுன், பிரபல இயக்குனர் திரிவிக்ரம் கூட்டணி மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. படத்தின் தலைப்பை வைத்தே இந்த படம் அப்பா - மகன் இடையே சுழலும் கதை என்று தெரிந்து விடுகிறது. சத்யமூர்த்தி (பிரகாஷ் ராஜ்) மிகப்பெரிய பணக்காரர். அவருக்கு இரண்டு மகன்கள். இளைய மகன் விராஜ் ஆனந்த் (அல்லு அர்ஜுன்) வாழ்க்கையை ரசித்து வாழ்பவர். நினைத்ததை செய்து மகிழ்ச்சி கொள்பவர். இந்நிலையில் அவருக்கு ஆதா ஷர்மாவுடன் நிச்சயம் செய்யப்படுகின்றது. இதனை அடுத்து அல்லு, பார்சிலோனாவுக்கு ஜாலி ட்ரிப் செல்கிறார். அவர் நாடு திரும்பும் பொது அவருடைய வாழ்கையே புரட்டி போடப்படுகிறது. அதாவது அவருடைய தந்தைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. அதனை அடுத்து அவர் விபத்தில் மரணம் அடைகிறார்.
இளவரசரை போல வாழ்ந்து வந்த அல்லு, தந்தையின் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். ஏனெனில் அல்லுவின் மூத்த சகோதரரான வெண்ணிலா கிஷோர் முற்றிலுமாக நிலைதடுமாறி விடுகிறார். பின்னர் அல்லு மேரேஜ் பிளானர் ஆகிறார். அதன் பிறகு சமீராவை (சமந்தாவை) சந்திக்கிறார். கண்டதும் காதலாகி விடுகின்றது. சமந்தாவின் தந்தை (ராஜேந்திர பிரசாத்) அல்லுவிடம் ஒரு வேலையை செய்ய சொல்கிறார். அதாவது ஒரு பிரச்னைக்குள்ளான நில ஆவணங்களை தேவராஜிடம் (உபேந்திரா) இருந்து பெற்று வந்தால் மட்டுமே, தனது மகளை அல்லுவிற்கு திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். அந்த ஆவணங்களை அல்லு கொண்டு வந்தாரா? இழந்த குடும்பத்தின் பெயரை காப்பாற்றினாரா?மொத்தத்தில் வாழ்கையில் வெற்றி பெற்றாரா? இதுதான் படத்தின் மீதி கதையாகும்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் மின்னுகிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் பட்டையை கிளப்பி உள்ளார். மொத்தத்தில் படத்திற்கே முதுகெலும்பாக இருக்கிறார். சமந்தாவின் அழகு மற்றும் நடிப்பு நிறைவாக உள்ளது. நித்யா மேனன் சிறிய அளவில் வந்தாலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அழகு பதுமையாக ஆதா ஷர்மா வலம் வருகிறார். ராஜேந்திர பிரசாத்தும், பிரம்மானந்தமும் இணைந்து அனைவரையும் நன்றாவே சிரிக்க வைக்கின்றனர்.
சமீபத்தில் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்ற கோட்டா ஸ்ரீனிவாச ராவ், எம் எஸ் நாராயண போன்றோர் தங்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.பிரபல கன்னட நடிகர் உபேந்த்ராவும், சினேகாவும் தங்களது கதாபாத்திரமாகவே மாறி விடுகின்றனர்.
படத்தின் முதல் பாதி கதையை இன்னும் வேகமாக நகர்த்தி இருக்கலாம். பிரபல நடிகர் வெண்ணிலா கிஷோரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். பாடல்கள் நன்றாக இருந்தாலும் சில நேரங்களில் அந்த கட்டத்தில் பாட்டு தேவைதானா என்று யோசிக்க வைக்கின்றது.
இயக்குனர் திரிவிக்ரம் ஒரு குடும்பத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை அழகாக சொல்லி அதே வேளையில் நல்ல பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தாளம் போட வைக்கின்றது. பிரசாத் முரெல்லாவின் கமெரா நன்றாக விளையாடி இருக்கின்றது.
மொத்தத்தில் சன் ஆப் சத்யமூர்த்தி அப்பாவுக்கு மரியாதை