தரம்பால் திரிவேதி ( பரேஷ் ரவல்), அருகிலுள்ள மசூதியில் பாடப்படும் தொழுகை பாடலை கேட்டு, அசதியுடன் எழுந்திருப்பதில் துவங்குகிறது தர்ம் சங்கேத் மெய்ன் படம். அன்பான மனைவி , 2 குழந்தைகள், மகிழ்ச்சியான வாழ்க்கை என்று உற்சாகமாக வாழ்ந்து வருகிறார் கேட்டரிங் தொழிலை செய்துவரும் தரம்பால் திரிவேதி. தரம்பாலின் பக்கத்து வீட்டுக்காரரும், வக்கீலுமான நவாப் மெகமூத் நஜீம் அலி ஷா கான் பகதூரின் (அன்னு கபூர்) மதம் சார்ந்த நடவடிக்கைகளால், தரம்பால் பெரிதும் பாதிக்கப்படுகிறார். அதனால், தனது அக்கம்பக்கத்தினரையே வெறுக்க ஆரம்பிக்கிறார். தரம்பால், தனது இறந்த அம்மாவின் பேங்க் லாக்கரை திறக்கிறார். அதில் தன் வாழ்நாளில் அவர் வரைந்த படங்களை வைத்திருக்கிறார். அதை பார்த்தவுடன் தரம்பாலிற்கு தாரை தாரையாக கண்ணீர் வந்துவிடுகிறது. அந்த ஓவியங்களுடன், ஒரு ஜோடி தங்க வளையலும், ஒரு பிரமாண பத்திரமும் உள்ளது. அதில், தான் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்றும், தான் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் என்ற உண்மை தெரிய வருகிறது. இவ்வளவு காலம், தனது உண்மையை தெரிந்துகொள்ளாமல் இருக்கிறேனே என்று மனம் நொந்துகொள்கிறார். இந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான முஸ்லீம் வக்கீல், தரம்பாலின் பெற்றோரை தேட உதவுகிறார். தரம்பாலின் அம்மா இறந்திருந்தாலும், அவரது அப்பா, முஸ்லீம் சாண்டோரத்தில் இருப்பதாக, அந்த முஸ்லீம் வக்கீல் கூறுகிறார். அந்த சாண்டோரத்திற்கு, தரம்பால் செல்லும்போது, முல்லாவால் (முரளி சர்மா) தடுத்து நிறுத்தப்படுகிறார். முஸ்லீம் ஆக மாறினால் மட்டுமே, சாண்டோரத்தில் அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைக்குமாறு, தரம்பாலிடம், வக்கீல் கூறுகிறார். தரம்பாலின் மகன் அமித், மத குரு நீல் ஆனந்த் பாபா வின் (நஸ்ரூதீன் ஷா) தீவிர பக்தராக இருக்கிறார். இந்த இக்கட்டான நிலையை, தரம்பால் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மீதி்க்கதை
இயக்குநர் பவாத் கான், படத்தில் சமூக கருத்துகளை சொல்வதற்கும், அதேநேரம் பொழுதுபோக்கிற்கும் குறைவில்லாது வெற்றிகரமாக படத்தை இயக்கியிருக்கிறார். தான் சொல்ல வந்த கருத்தை, எவ்விடத்திலும் சிதைத்துவிடாமல், அதேநேரம் கதை மற்றும் திரைக்கதையை சிற்பமாக செதுக்கியிருக்கிறார். பல இடங்களில், காட்சிகளை முன்கூட்டியே நிர்ணயிக்க முடிந்தாலும், சில இடங்களில் கிளிஷே காட்சிகளை தவிர்த்திருக்கலாம். பாடல்கள், படத்தின் வேகத்தை குறைக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில், கலை மற்றும் எடிட்டிங் குறிப்பிடும்படி உள்ளது.
படம் முழுமைக்கும், பரேஷ் ரவல் வந்தாலும், ஒரு இடத்தில் கூட அவர் நடிப்பு சலிப்பு தட்டவில்லை, கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். நஸ்ரூதீன் ஷா சிறிதுநேரமே வந்தாலும், அனைவரின் மனதிலும் ஒட்டிக்கொள்கிறார். அன்னு சர்மா, முரி சர்மாவின் நடிப்பும் குறிப்பிடும் வகையில் உள்ளது.
மத ரீதியாக ஏதாவது தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்....