ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வௌியான சூப்பர் படமான ரமணா, இந்தியில், அக்ஷ்ய் குமார் நடிப்பில், கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீ-மேக்காகி, ஆக்ஷ்ன் படமாக வௌியாகி இருக்கிறது. கப்பார் இஸ் பேக் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி கல்லூரி பேராசிரியர் கப்பார் எனும் அக்ஷ்ய் குமார். மாணவர்களுக்கு படிப்பை சொல்லி கொடுத்து வந்தாலும், மற்றொருபுறம் நாட்டில் ஊழல் செய்யும் அதிகாரிகளையும் களையெடுக்க களம் இறங்குகிறார். அதன்படி ஒவ்வொரு துறையிலும் அதிகமாக ஊழல் செய்த 10 அதிகாரிகளில், மிக அதிகம் ஊழல் செய்த ஒருவரை தண்டித்து(கொலை செய்து) அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறார்.
அதிகாரிகள் தவிர்த்து தொழிலதிபர்களும் இதில் சிக்குகிறார்கள். அதில் அதிக ஊழல் செய்த தொழிலதிபரான திக்விஜய் பாட்டிலும் (சுமன் தல்வார்) மாட்டுகிறார். இவர் தான் சில ஆண்டுளுக்கு முன்னர் அக்ஷய் குமாரின் மனைவி மற்றும் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் இடிய காரணமானவர். இதுஒருபுறம் இருக்க அதிகாரிகளின் கொலைக்கு காரணமானவர்களை தேட களமிறங்குகிறார் கான்ஸ்டெபிள் சுனில் மற்றும் சிபிஐ., அதிகாரிகள். சிபிஐ., அக்ஷ்ய் கப்பாரை கைது செய்ததது, தொழிலதிபர் திக்விஜய் என்ன ஆனார் என்பது தான் கப்பார் படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை!
அக்ஷ்ய் குமார் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார். கல்லூரி பேராசிரியராகவும் சரி, ஊழல் அதிகாரிகளை களையெடுக்கும் ஹீரோவாகவும் ஜொலித்திருக்கிறார். வக்கீலாக வரும் ஸ்ருதியின் நடிப்பும் ஓ.கே., கான்ஸ்டபிளாக வரும் சுனில், தொலதிபராக வரும் வில்லன் சுமன், கெஸ்ட் ரோலில் வந்து போகும் கரீனா கபூர், ஒரே ஒரு பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட்டுவிட்டு போகும் சித்ராங்கடா ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேரக்டரில் அசத்தியுள்ளனர்.
படத்தின் பாடல்கள், ஔிப்பதிவு எல்லாம் ஓ.கே., தென்னிந்திய சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் இயக்குநர் கிரிஷ்க்கு, இந்தியில் இதுதான் முதல்படம். கப்பார் படத்தின் கதை மிக மிக அருமையானது. ஆனால் அதை பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுக்க சற்று தவறிவிட்டார் இயக்குநர். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கிறது, ஆனாலும் பின்னர் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக படத்தின் வசனங்கள் அனல் பறக்கின்றன. அக்ஷ்ய் நடிப்பு, அனல் பறக்கு வசனங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்துள்ளது.
க்ளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு லேசான ஏமாற்றத்தை தந்தாலும், அக்ஷ்ய் குமாரின் நடிப்புக்காகவும், அற்புதமான கதைக்காகவும் ''கப்பார் இஸ் பேக்'' படத்தை எல்லோரும் பார்க்கலாம்.