தினமலர் விமர்சனம்
சூது கவ்வும் படத்திற்கும், அதன் வெற்றிக்கும் அப்புறம் சுடும் பழக்கத்தை கற்றுத்தரும் சுட்ட கதைகள் மாதத்திற்கு ஐந்தாறு படங்களின் கரு, கதை, களமாகி வருகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் வெளிவந்த ராஜதந்திரம் இந்த வார வெள்ளிக்கிழமை வெளியீடுகளான இரவும் பகலும் வரும், கள்ளப்படம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஆயா வட சுட்ட கதையும் சுடுறதை, திருடுவதையே சொல்லும் சுட்ட கதைதான்!.
கதைப்படி, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடு எடுத்து அங்கிருந்தபடில போதைப்பொருள் கைமாற்றல் - வியாபாரம் செய்யும் ஒரு குரூப்பையும், அதன் தலைவனையும் இனங்காணுகின்றனர் அதே குடியிருப்பில் பேப்பர் போடும் இளைஞனும், அவரது சகாக்களும். வெள்ளை பவுடர் விற்பவர்களிடம் பெரிதாக கொள்ளை அடித்து லைஃப்பில் செட்டில் ஆகத்துடிக்கும் ஹீரோவையும், அவரது நண்பர்களையும் மோப்பம் பிடிக்கிறார் அதே ஃபிளாட் வாசியான சஸ்பென்ட்டில் இருக்கும் சபலிஸ்ட் போலீஸ் அதிகாரி. ஹீரோவும், அவரது நண்பர்களும் போதைபொருள் விற்கும் கூட்டத்தை கொள்ளை அடித்ததா? சஸ்பென்ட்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி போதைபொருள் கும்பலை கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி சபாஷ் வாங்கினாரா? அல்லது அவர்களிடம் லட்சகணக்கில் லஞ்சம் வாங்கி சட்டைப்பைக்குள் திணித்தாரா? எனும் கதையுடன் ஹீரோவுக்கு, அதே ஃபிளாட்டில் குடியிருக்கும் ஹீரோயின் எவ்வாறு உதவுகிறார்? எனும் வித்தியாசமான காதல் கான்செப்டையும் கலந்துகட்டி ஆயா வட சுட்ட கதையை ஆஹா, ஓஹோ ஆக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்!.
புதுமுகம் அவிதேஜ் கதாநாயகனாக அதிகமாகவே நடித்திருக்கிறார். போலீசுக்கு போதைபொருள் கும்பலையும், அவர்கள் வசம் இருக்கும் போதைப்பொருளையும் காட்டிக்கொடுத்து விட்டு அவர்களது பொருளை (பணத்தை) 'லபக்'கும் இடத்தில் வாவ் சொல்ல வைத்திருக்கிறார்.
நாயகி சுபர்ணா அபாரமண்ணா எனும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை!
போதை கொள்ளை கூட்ட பாஸாக சாய்பிரசாத், சஸ்பென்ட் -சபலிஸ்ட் போலீசாக மனோகரன், மணி உள்ளிட்டவர்களில் "பாஸ்" சாய்பிரசாத் முட்டாள் உதவியாளர்களுடன் "வரும்போது தானே போகணும்..." போகும்போது வருவது எப்படி? என கேட்டபடி குழம்புவது ஹாஸ்யம், சுவாரஸ்யம்!.
பாலாஜியின் ஒளிப்பதிவு, விஜய்யின் படத்தொகுப்பு, சமீர் மற்றும் சிவாவின் இசையும், பாடல்களும், வெட்சங்கரின் பின்னணி இசையும் பனிந்திராவின் எழுத்து, இயக்கத்திற்கு பக்கபலம்! ஆனாலும்., சூது கவ்வும் படத்திற்கு அப்புறம் அடுகடை படுகடையாக வெளிவரும் ஒரே மாதிரி சுட்டகதைகள் பாணியிலேயே, ஆயா வட சுட்ட கதையும் இருப்பது சற்றே போரடிக்கிறது!
ஆயா வட சுட்ட கதை டைட்டிலைப்போலவே அந்தக்காலத்து கதை...! ஹி...ஹி...!