நடிகர்கள் : ஜெயசூர்யா, சன்னி வெய்ன், விஜய்பாபு, விநாயகம், அஜூ வர்கீஸ், ரெஞ்சி பணிக்கர், ஸ்வாதி, சிருந்தா ஆசப் மாறும் பலர்
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு :விஷ்ணு நாராயண்
இயக்கம் : மிதுன் மானுவேல் தாமஸ்
ஆடு ஒரு பயங்கர மிருகமாக்கும் என்பது தான் படத்தின் பெயர். கயிறு இழுக்கும் போட்டியின்போது ஜெயசூர்யா & கோவுக்கு பரிசுத்தொகையுடன் ஆடு ஒன்றும் பரிசாக கிடைக்கிறது. சிலர் அதை வளர்க்கலாம் என்று சொல்ல, இன்னும் சிலர் பிரியாணி போட்டுவிடலாம் என்கிறார்கள். ஜெயசூர்யாவோ அதை விற்று விடலாம் என்க, அனைவரும் ஜெயசூர்யாவின் வேனில் பயணமாகிறார்கள்..
இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு அரிய வகை பூ ஒன்றை தனது முதலாளியின் மருத்துவ சிகிச்சைக்காக வாங்கிச்செல்ல கேரளா வருகிறார் விநாயகம் (திமிரு படத்தில் ஷ்ரேயா ரெட்டியின் வலதுகரமாக காலை சாய்த்தபடி நடப்பாரே அவர் தான்). சில பல குழப்பங்களுக்கு பிறகு அந்தப்பூவை கைப்பற்றப்போகும் நிலையில் அதை இந்த ஆடு தின்றுவிடுகிறது.
பூவை பறிகொடுத்த விநாயகம், பூவை விற்றபின் ராசி போய்விட்டதே என திரும்பவும் பூவை வாங்க முயற்சிக்கும் சன்னி வெய்ன், இந்த கும்பலால் உயர் அதிகாரியிடம் திட்டு வாங்கிய கோபத்தில் அந்த பூவை கைப்பற்ற நினைக்கும் போலீஸ் அதிகாரியான விஜய்பாபு மூவரும் என்ன செய்தார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்..
சமீப காலத்தில் நிறைய திறமையான நடிகர்கள் நடித்திருந்தும் மோசமான திரைப்படம் ஒன்று மலையாளத்தில் வெளியானது என்றால் அது நிச்சயம் இந்தப்படமாகத்தான் இருக்கும். வலுவில்லாத கதை, மோசமான திரைக்கதை, ஒரு தீர்வு இல்லாத க்ளைமாக்ஸ் என எல்லா ஏரியாவிலும் படம் செமத்தியாக அடி வாங்குகிறது.
ஜெயசூர்யா சண்டியர் மீசை வைத்துக்கொண்டால் அது வித்தியாசமான கெட்டப்பாகி விடுமா..? ஆரம்ப காட்சியிலேயே அவருக்கு முதுகெலும்பில் அடிபட்டு விட்டதால் அவரது மனைவி இன்னொருவருடன் ஓடுவதாக காண்பிப்பது, அதுவும் அவரிடம் சொல்லிவிட்டே ஓடுவது ஜெயசூர்யாவின் கேரக்டரை டோட்டாலாக டேமேஜ் பண்ணிவிடுகிறது. போன வருடம் வெளியான 'அயூபிண்டே புத்தகம்' படத்தில் சிறந்த வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயசூர்யா இப்படிப்பட்ட மொக்கை கேரக்டர்களில் நடிப்பதை எல்லாம் விட்டுவிட வேண்டியது அவரது கேரியருக்கு நலம்.
'சுப்ரமணிபுரம்' ஸ்வாதி, சிருந்தா ஆஷப், நல்ல காமெடியனான அஜு வர்கீஸ் ஆகியோரை எல்லாம் ஒரு காட்சியில் வந்து போவதற்காக பயன்படுத்தியிருப்பது டூமச் என்பதுடன் இயக்குனரின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. சரி.. ஆடு இருக்கிறதே.. அது ஏதாவது சாகசம் பண்ணும் என நினைத்து வந்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மொத்தத்தில் ரசிகனை எந்த வகையிலும் இந்த ஆடு திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை.