தினமலர் விமர்சனம்
''பசங்க'', ''கோலிசோடா'' படங்களில் வந்த 4 சிறுவர்களையும் மீண்டும் நாயகர்களாக கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் வஜ்ரம். எஸ்.டி.ரமேஷ்செல்வனின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ''வஜ்ரம்'' வைரமா? வைடூரியமா? தங்கமா? தகரமா? பார்ப்போம்.
தாங்கள் படித்து வரும் பள்ளிக்கூடத்தை, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கூடாரமாக்கிக் கொள்ள முயலும் அமைச்சருக்கும், அவரிடமிருந்து அதை காப்பாற்ற போராடும் நான்கு சிறுவர்களுக்குமிடையேயான முட்டலும் மோதலும் தான் வஜ்ரம் படத்தின் மொத்த கதை, களம், கரு....எல்லாம்
''பசங்க'' - பசங்க நாலுபேரும், ''எங்கள சின்ன பசங்கன்னு நெனச்சியா? வெடிச்சா சுற்றி இருப்பவர்களை சிதறடிக்கும் கோலிசோடா நாங்க...'' என வயசுக்கு மீறி பேசுவதும், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்களிடம் தவறாக நடக்க முயலும் காவலர்களை கொல்வதும், அந்த காவலர் கொலை கேஸூக்காக கோர்ட்டுக்கு அழைத்து போகப்படும் சிறுவர்கள் வழியில் போலீஸ் ஜீப் வெடித்து இறந்ததாக கணக்காட்டப்பட்டு., உயரதிகாரி ஒருவரின் சுயலாபத்திற்காக காப்பாற்றப்படுவதும், அந்த உயர் அதிகாரி இவர்களுடன் சேர்ந்து மினிஸ்டரை கடத்த திட்டம் போடுவதும், இவர்கள் மினிஸ்டரை கடத்தாமல், மினிஸ்டர் மகளை கடத்தி வைத்துக் கொண்டு, அத்துவனக் காட்டில் சுற்றி திரிந்தபடி தங்கள் பள்ளியை மீட்பதும், காட்டில் அமைச்சர் மகளுடன் இருக்கும் நால்வரும் திடீரென நாட்டிற்குள் வந்து, மகளை மீட்க செத்ததாக நடிக்க திட்டமிடும் அமைச்சரை அடித்துக் கொல்வதும், கதையாக கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். அதுவே வஜ்ரம் படக்காட்சிகளாக....சுத்த ஹம்பக் என சொல்ல வைத்து விடுகிறது.
ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி நால்வரும் வயதுக்கு மீறி நடித்திருக்கின்றனர். இல்லை, இல்லை இயக்குநர் இவர்களை அவ்வாறு நடிக்க வைத்திருக்கிறார் பாவம். நாயகி பவானி ஷெட்டியும் அவ்வாறே என்பது மேலும் பாவம். தம்பிராமைய்யா, ஜெயபிரகாஷ், மயில்சாமி, சமீரா, நந்தா சரவணன், மூனார் ரமேஷ், சானா என ஏகப்பட்ட பேர் எக்கச்சக்கமாய் நடித்திருக்கின்றனர். அதேமாதிரி ஜே.பி.யின் தடாலடி மனைவியாக வந்து சவுண்டு விடும் சானாவும், ஆரம்ப காட்சிகளில் வரும் ரேஸ் குதிரைகளும், ரேஸ் கோர்ஸ் லொகேஷன்களும் மிரட்டலாக இருப்பது ஆறுதல்! இருந்தும் என்ன பயன்?
ஏ.ஆர்.குமரேசனின் ஒளிப்பதிவில் காடும் காட்டை சார்ந்த இடங்களும், சவுடால் சானா, ரேஸ் குதிரைகள்... மாதிரியே பளிச். பைசலின் இசை ப்ளஸ். லோகிதாஸின் வசனத்தில் எஸ்.டி.ரமேஷ் செல்வனின் எழுத்து, இயக்கத்தில், ''அரசாங்கம் இலவசமா தர வேண்டிய கல்வியை தனியார் காசுக்கு விற்கிறாங்க. அரசாங்கம் தடை செய்ய வேண்டிய மதுபானத்தை சட்டபூர்வமா விற்குது...'' உள்ளிட்ட வசனங்களில் வஜ்ரம் வைரமா ஜொலிக்குது! ஆனாலும் 4 சிறுவர்களின் வயதுக்கு மீறிய செயல்களால் வஜ்ரம்- அமெச்சூர்தனம்...!