Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »

பாகுபலி

பாகுபலி,Bahubali
பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கியுள்ள சரித்திர படம் இது.
13 ஜூலை, 2015 - 15:09 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாகுபலி

தினமலர் விமர்சனம்


200 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாய் உருவாகி, உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில், நான்கைந்து மொழிகளில் இன்று ஒரேநாளில் வௌியாகி இருக்கும் திரைப்படம் பாகுபலி. மகதீரா, நான் ஈ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை தந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கும் பாகுபலி. இப்படம் எப்படி இருக்கிறது.? எந்தளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது...? என்பதை இனி பார்ப்போம்...


ராஜ்யத்திற்காக போராடும், இதிகாச காலத்து, அரச குடும்பத்து அங்காளி, பங்காளி சண்டை தான் பாகுபலி படம் மொத்தமும்! மகிழ்மதி ராஜ்யத்தின் அரசகுல வாரிசு மகேந்திர பாகுபலி - பிரபாஸ். அவர் கைக்குழந்தையாக இருக்கும்போதே, 7 மலை, 7 கடல் என்பார்களே, அதுபோல சில மலைகளும், சில நீர்வீழ்ச்சிகளும் கடந்து வந்து உயிருக்கு போராடிய நிலையில், ராணி கெட்டப்பில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், குழந்தை பிரபாஸை தூக்கி வந்து நீரில் தத்தளித்தபடி குந்தள தேசத்து கிராமம் ஒன்றில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியினர் ரோகிணி மற்றும் அவரது கணவரிடம் கொடுத்துவிட்டு உயிர் துறக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லா ரோகினி தம்பதியர் தங்களுக்கு கடவுள் தந்த குழந்தை இது என அக்குழந்தையை அள்ளி அணைத்து பாசத்துடன் வளர்க்கின்றனர்.


சிறுவனாக இருந்து, வளரும் பருவத்திலேயே வானுயர்ந்த மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கடந்து அந்தப்பக்கம் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அடிக்கடி அடிக்கடி மலையேறி உச்சிக்கும் போகும் முயற்சியில் இருக்கிறார் மகேந்திர பாகுபலி பிரபாஸ். அவருக்கு நல்ல புத்தி தர வேண்டும், மலையேறி தன்னை விட்டு போகும் புத்தியை தரக்கூடாது என வேண்டிக்கொண்டு நீர்வீழ்ச்சி ஓரம் இருக்கும் லிங்க சிலையை, உச்சி குளிர்விக்கும் முயற்சியாக அங்கிருக்கும் ஒரு சாமியாரின் யோசனையின் படி ஆயிரம் குடம் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யும் முயற்சியில் இறங்குகிறார் ரோகிணி. தன் தாய் படாதபாடு படுவதை பார்த்த பிரபாஸ், அதிக பாரமுள்ள கருங்கல் லிங்க சிலையையே பெயர்த்து எடுத்து சென்று வேறுயிடத்தில் நீர்வீழ்ச்சி தண்ணீர் நேரடியாக அதன்மீது படும்படி செய்துவிட்டு தன் மலையேறும் முயற்சியில் தொடர்ந்து இறங்குகிறார்.


சிவனின் அருள்பெற்ற பிரபாஸின் கண்களில் ஒருநாள் தேவதை மாதிரி தெரிகிறார் அவந்திகா - தமன்னா. சிவனின் அருளாலும், தமன்னாவின் கடைக்கண் பார்வையாலும் ஒருநாள் மலையின் உச்சிக்கு செல்லும் பாகுபலி பிரபாஸ், அங்கு தமன்னாவுக்கு உதவப்போய் தான் யார்? என்பதை அறிகிறார். ராஜகுலத்தில் பிறந்த பாகுபலி பிரபாஸின் பின்னணி பிளாஸ்பேக்காக விரிகிறது. அங்காளி - பங்காளி சண்டையில், ராஜகுலத்து பிரபாஸ் கருவிலிருக்கும் போதே நயவஞ்கர்கள் நாசர் மற்றும் அவரது வாரிசு ராணா டகுபதியின் சூழ்ச்சியால், தனது தந்தையையும், ராஜ்யத்தையும் இழந்து மகிழ்மதி ராஜ்யத்திலிருந்து வௌியேற்றப்படுகிறார்.


ஆனால் அவரது தாய் தேவசேனா - அனுஷ்கா, 25 ஆண்டுகளாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு வெயிலிலும், மழையிலும் நாசர், ராணா மன்னர்களது அடிமையாக வாழ்வது தெரிந்து கொதித்து எழுகிறார். தங்கள் ராஜ்யத்திற்கு விசுவாசமான கட்டப்பா - சத்யராஜ் உதவியுடன், அப்பா இழந்த ராஜ்யத்தை மகன் பிரபாஸ் மீட்டெடுத்தாரா.? இல்லையா.?, அம்மா அனுஷ்கா, காதலி தமன்னா இருவருடனும் தற்போது ராஜ்யத்திலிருக்கும் ராணா, நாசர் இருவரது எதிர்ப்பையும் தாண்டி கைகோர்த்தாரா.? வளர்ப்பு தாய் ரோகிணி மற்றும் வளர்ப்பு தந்தையின் கூட்டத்தின் நிலை என்ன..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பதிலளிக்க வேண்டிய பாகுபலி படத்தின் மீதிக்கதை, அதில் பாதிக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மீதியை பாகுபலி பகுதி-2ல் பாருங்கள் என பிரமாண்டமாய் முடிகிறது.


அனுஷ்காவின் வாரிசு மகேந்திர பாகுபலியாகவும், மகேந்திராவின் அப்பா அமரேந்திர பாகுபலியாகவும், ரோகிணியின் வளர்ப்பு மகன் ஷிவ்வாகவும், மூன்று விதமான கெட்டப்புகளில் ராஜ்கம்பீரத்துடன் பிரபாஸ் பக்காவாக நடித்திருக்கிறார். கூடவே வாள் வீச்சு, சொல் வீச்சு... என இதிகாசகால மன்னர்களை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். வீர தீர காட்சிகளை காட்டிலும் அறிமுக காட்சியிலேயே கண்கட்டி வித்தை காட்டும் தமன்னாவுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஒருபடி அதிகமாவே அசத்தியிருக்கிறார் பிரபாஸ். தன் தாயை தான் காப்பாற்ற செல்கிறோம் என்பது தெரியாமல் தமன்னாவின் வேண்டுகோளுக்காக அனுஷ்காவை காபந்து செய்ய செல்லும் பிரபாஸ், தன் ராஜகம்பீர பின்னணி தெரிந்து கொள்ளும் இடம் சுவாரஸ்யம்.


ராணா டகுபதி - பல்வார் தேவனாக போர்முனையில், அமரேந்திர பாகுபலி - பிரபாஸ்க்கு நம்பிக்கை துரோகம் செய்வதிலாகட்டும், தன் தந்தை நாசரின் நயவஞ்சக திட்டப்படி ராஜ்யத்தை கைப்பற்ற துடிப்பதிலாகட்டும், புத்தி கூர்மையிலும், கத்தி வீசுவதிலும் பிரபாஸ்க்கு தானும் சளைத்தவர் இல்லை என்பதை ஒவ்வொரு காட்சியிலும் மெய்ப்பித்திருப்பதிலாகட்டும் அனைத்திலும் தானும் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார் ராணா!.


அனுஷ்கா - தமன்னா இருவரில், தேவசேனாவாக வரும் அனுஷ்காவுக்கு பாகுபலி பகுதி இரண்டில் தான் நடிக்க வாய்ப்பு இருக்கும் போல, இந்தப்பகுதி ஒன்றில் வயதான கெட்டப்பில் வாழ்ந்திருக்கிறார் என்றாலும் வந்து போய் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


அவந்திகாவாக, போர் வீராங்கனையாக வரும் தமன்னா, பிரபாஸின் கனவா.?, நினைவா..? என தெரியா பாடல் காட்சியில் பட்டாம்பூச்சி உடையுடன் வந்து ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைக்கிறார். ராணா தலைமையிலான மகிழ்மதி ராஜ்ய வீரர்களுடன் காட்டுக்குள் இருந்தபடி தன் சகாக்களுடன் போர் புரியும் காட்சிகளில் சபாஷ் சொல்ல வைக்கிறார். வாள் வீச்சில் தன் கையில் பட்ட காயத்தை ஆற்று மீன்களின் மூலம் ஆற வைக்க முற்படும் தமன்னாவின் கைகளில், தமன்னாவிற்கே தெரியாமல் பிரபாஸ் ஓவியம் தீட்டுவது, அதனால் தமன்னாவின் வீரம் போனதாக கருதும் தன் தந்தை மாதிரியான குருவிடம் அம்மணி வாக்குவாதம் செய்வது, அதைத்தொடர்ந்து தன் கைகளில் ஓவியம் தீட்டியவன் யார்.? என கண்டு, அவனை தீர்த்துகட்டும் முனைப்புடன், தோழியுடன் தமன்னா வந்த இடத்தில் பச்சை பாம்பு உதவியுடன் மரக்கிளையில் மறைந்து இருந்தபடி மீண்டும் தமன்னாவின் தோள்பட்டையில் பிரபாஸ் ஓவியம் தீட்டுவது உள்ளிட்ட.. காதல் ரசம் கொட்டும் காட்சிகள், இப்படியானதொரு பிரமாண்டம். ஆக்ஷ்ன் படத்தில் காதலை எதிர்பார்க்கும் ரசிகனுக்கும் செம தீனி!


ராஜமாதவாக, சிவகாமியாக வரும் ரம்யா கிருஷ்ணன், தன் மகன் ராணாவை காட்டிலும், ராஜ்யத்திற்கு உரிய அமரேந்திர பாகுபலி பிரபாஸ் தான் மன்னராக வேண்டும் என துடிப்பது, கணவர் நாசரின் சதி வேலைகளை புறம் தள்ளி, அமரேந்திர பாகுபலி பிரபாஸ்க்கு முடிசூட்ட முயல்வது, தன் உயிரையும் பொருட்படுத்தாது பாகுபலியின் கை குழந்தை வாரிசை மழை, அலை வௌ்ளத்தில் போர் வீரர்களின் துரத்தலுக்கு பயமின்றி ஒற்றை ஆளாக தூக்கி வந்து கடவுளின் கருணையால் ரோகிணியிடம் ஒப்படைத்து உயிரை விடுவது உள்ளிட்ட காட்சிகளில் மெய்சிலிர்க்க வைக்கிறார்.


நாசர், சத்யராஜ், கிச்சா சுதீப், ரோகிணி, ஆதி விசேஷ், ராகேஷ் வாரி, மேகா ராமகிருஷ்ணா உள்ளிட்ட ஒவ்வொருவரும் மன்னர்கால பாத்திரமறிந்து பக்காவாக பாகுபலிக்கு பலம் சேர்த்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


வி.வீரேந்திர பிரசாத்தின் மன்னர்காலத்து கதை, மதன்கார்க்கியின் வசன வரிகள், கே.கே.செந்தில் குமாரின் மிளிரும் மிரட்டலான ஔிப்பதிவு, சாபு சிரிலின் பிரமாண்டமான அரண்மனை செட்டுகள், போர்முனை காட்சிகள் உள்ளிட்ட கலை இயக்கம், எம்.எம்.மரகதமணியின் பாடல் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், எஸ்.எஸ்.ராஜமௌலியின் எழுத்து-இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தை படுபிரமாண்டமாக காட்டியிருக்கின்றன.


இதுவரை இந்திய சினிமா கண்டிராத அரண்மனை செட்டப்புகள், போர்முனை காட்சிகள், பனிப்புயல் காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலைப்பிரதேசங்கள் உள்ளிட்ட கிராபிக்ஸ் சிஜே ஒர்க்குகள் பிரமாண்டம். பாகுபலியின் ஸ்பெஷாலிட்டியே இதுமாதிரி காட்சியமைப்புகள், செட்டுகள் என்றால் மிகையல்ல!


அரசர் காலத்து கதைக்கு இத்தனை பிரமாண்டம், இத்தனை பொருட்செலவு தேவைதான் என்றாலும் இந்த பாகுபலி பகுதி ஒன்றுக்கே இத்தனை செலவும், பிரமாண்டமும் தேவையா.? என ஆங்காங்கே கேள்வி எழுவது பலவீனம்! மற்றபடி பாகுபலி போர்க்காட்சிகள், மகாபாரத காட்சிகளையே மிஞ்சுகின்றன.


மொத்தத்தில், பாகுபலி - மகாபலி!!




ரேட்டிங் - 3.5/5




குமுதம் சினி விமர்சனம்


அவதார், டென் கமாண்ட்மென்ட்ஸ் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்கள் வரிசையில் 'நான் ஈ' இயக்குநர் ராஜமௌலியின் 'பாகுபலி'யையும் சேர்க்கலாம். ஒரு சரித்திரக் கதையை இவ்வளவு பிரம்மாண்டமாக இந்தியாவில் யாரும் தந்ததில்லை.

ஒரு நாட்டுக்காக பங்காளிகள் இருவர் மோதிக் கொள்வதுதான் கதை. பாகுபலியாக வரும் பிரபாஸும், பல்லால தேவனாக வரும் ராணா டகுபதியும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். மன்னர் பதவி கிடைக்காததால் வஞ்சமாக பாகுபலியைக். கொன்ற பல்லாலதேவன் மன்னனாகிறான். கூடவே பாகுபலியின் மனைவி தேவசேனாவையும் சிறைவைக்கிறான். தப்பித்த குழந்தை பாகுபலி தன் தாயையும் தாய் நாட்டையும் மீட்க மீண்டும் நாட்டிற்குள் வருகிறான். மீதியைத் தெரிந்து கொள்ள இரண்டாம் பாகம் வரை காத்திருக்க வேண்டுமாம்.

பிரபாஸும் ராணாவும் கதைக்கும் அந்த ராஜபுத்திர பாத்திரங்களுக்கும் கச்சிதம். தாய் தேவசேனாவாக வரும் அனுஷ்காவின் கோபமும் ரம்யாகிருஷ்ணனின் வீரமும் புல்லரிக்க வைக்கிறது. கட்டப்பாவாக வரும் சத்யராஜூம், ராஜதந்திரியாக வரும் நாசரும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். காதலியாக வரும் தமன்னாவின் வீரமும் அழகும் ரசிக்க வைக்கிறது.

கோட்டைக் கொத்தளங்களும், போர்க்களமும், போர்ப்படையும் வரலாற்றுக் காலத்திற்க்கே அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். போர்க்காட்சிகளில் எம்.எம். கீரவாணியின் இசை பிரமிப்புக்கு உயிரோட்டம் தருகிறது.

பிரமாண்டமான நகரம், பழங்காலத்து ஆடைகள், போர்த்தளவாடங்கள், யானைகள், குதிரைகள், நீர்வீழ்ச்சி என்று எல்லாமே பிரமாண்டம். ஒரு மாபெரும் யுத்த களத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குநர். ஆனால் சென்டிமெண்டுகளுடனும் பழைய உறவுப் பகையையும் மட்டுமே பிரதானமாகச் சொல்வதால் முதல் பாகத்துப்படி கதையில் புதுமை இல்லை. கொஞ்சம் 'அடிமைப் பெண்' வாடையும் அடிக்கிறது.




பாகுபலி - பிரமிப்பு!




குமுதம் ரேட்டிங் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

பாகுபலி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in