தினமலர் விமர்சனம்
காமெடி - பேமிலி சென்டிமெண்ட் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், காதல் அதிரடி நாயகர் விஷால், தயாரித்து, கதாநாயகராக நடித்திருக்கும் திரைப்படம் தான் ஆம்பள. வழக்கம் போலவே சுந்தர்.சி யின் இயக்கத்தில், அப்பாவால் பிரிந்த குடும்பத்தை பிள்ளையும், பிள்ளையின் காதலும் ஒன்று சேர்க்கும் காமெடி கலர்புல், பேமிலி, லவ், சென்டிமெண்ட் கதை தான் ஆம்பளயும்!!
படத்துக்கு ஆம்பள என பெயர் சூட்டிவிட்டு கதாநாயகி ஹன்சிகா மோத்வானியில் தொடங்கி, படத்திலும், பாடல் காட்சியிலும் கெஸ்ட் ரோலில் வரும் ஆண்ட்ரியா, குஷ்பு... தவிர்த்து., பூனம் பஜ்வா, துளசி, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா(நடிகை லட்சுமியின் பெண்ணே தான்) உள்ளிட்ட ஒரு டஜன் முன்னாள், இந்நாள் கதாநாயகிகள் முக்கிய பாத்திரமேற்று நடித்து, அவர்கள் அனைவரது வாயாலும் விஷாலை ஆம்பள என சொல்ல வைத்திருக்கும் பொம்பளங்களுக்கும், பொம்பளங்களை பிடித்தவர்களுக்கும் பிடித்த படம் தான் ஆம்பள படம் மொத்தமும்.
கதைப்படி, விதி வசத்தால் தன் தாயுடன் ஊட்டியில் வசிக்கும் விஷால், அரசியல் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆள் அனுப்பி நாலு காசு பார்க்கும் உத்தியோகம் பார்க்கிறார். இந்நிலையில், ஊட்டியில் தங்கி படித்து வரும் ஹன்சிகாவுடன் தன் விதியாலும், மதியாலும் விஷால் காதல் கொள்கிறார். ஹன்சிகா மீது முதலில் காதல் கொள்கிறார் விஷாலின் போலீஸ் நண்பர் சந்தானம்.ஆனால் அவருக்கு பெப்பே காட்டிவிட்டு ஹன்சிகாவை லவ்வும் விஷால், தனக்கு தெரிந்தும் தெரியாமலும் சந்தானத்தின் போலீஸ் வேலை போக காரணமாகிறார். அதனால் கடுப்பாகும் சந்தானம், காதலை பிரிப்பதை தொழிலாக கொண்ட வைபவ்வை சென்னையிலிருந்து வரவழைத்து ஆண்ட்ரியா உதவியுடன், விஷால்-ஹன்சிகாவின் காதலை பிரிக்கிறார்.
காதல் கைவிட்டு போன வருத்தத்தில் வெறுத்துபோய் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் விஷாலிடம், உன் ஏமாற்றுபேர் வழி அப்பாவை பிரிந்து வந்து நான் தனியாக உன்னை வளர்த்து ஆளாக்கியது தான் நீ குடிப்பதற்கு காரணம்... என அம்மா துளசி புலம்ப, ஹன்சிகாவை பிரித்துவிட்டு விஷாலுடன் ஒட்டிக்கொள்ளும் வைபவ்வுடன், தன் அப்பாவை தேடி மதுரைக்கு போகிறார் விஷால்.
அங்கு தன் அப்பா பிரபுவையையும், அண்ணன் காமெடி சதீஷையும் எடுத்த எடுப்பிலேயே கண்டுபிடிக்கும் விஷால், தன் அப்பா-அம்மா பிரிவுக்கு காரணமான, அப்பாவின் காதலி மகன் தான் வைபவ் என்பதையும் குடிக்கும் சரக்கு சமாச்சாரத்தில் கண்டுபிடிக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு சாங்கில் சேரும் பிரிந்த குடும்பம், இந்தப்படத்தில் சரக்கில் சேருவது வித்தியாசம். பிரிந்த விஷால் குடும்பமும், அவ்வாறு சேர்ந்த பின்., பிரிந்த அப்பா பிரபுவின் ஜமீன் குடும்பத்தையும், சேர்க்க முயற்சி எடுக்கிறார். பிரபுவை தவறாக புரிந்து கொண்டு பிரிந்த அவரது சகோதரிகள், அதாகப்பட்டது விஷாலின் அத்தைகள் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களையும் ஒன்று சேர்க்க அப்பா பிரபுவின் ஐடியாபடி அடுத்தப்படியாக கிளம்புகின்றனர் விஷால், வைபவ், சதீஷ் அண்ட் கோவினர். அவர்களுக்கு ஆளுக்கொரு அத்தை மகள் கிடைக்கின்றனர். அதில் தன்னை தவறாக பிரிந்து சென்ற விஷாலின் ஊட்டி காதலி ஹன்சிகாவே, விஷாலுக்கு கிடைப்பது அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் நம்பமுடியாத இன்ப அதிர்ச்சி!
ஆனாலும், விஷாலின் அப்பா பிரபுவை தவறாக புரிந்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட அத்தைகளுக்கு உண்மையை உணர வைத்து, விஷால்-ஹன்சிகாவை கரம்பிடித்தாரா.? சகோதரர்கள் சதீஷ், வைபவ்வின் அத்தை மகள் காதல்களும் கைகூடியதா...? என்பதை சிரிப்பும், சீரியஸமுமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
விஷால் வழக்கம் போலவே ஆக்ஷ்னில் அதிரடி பண்ணி, காமெடியிலும் கலக்கி, காதலிலும் களைகட்டியிருக்கிறார். ஹன்சிகாவின் காதல் வேண்டி அவர் ஸ்டார் ஹோட்டல் லிப்ட்டில் செய்யும் மாய்மாலத்தில் தொடங்கி, அத்தை ரம்யா கிருஷ்ணனை எம்.எல்.ஏ., ஆக்க முயற்சிப்பது வரை... சகலத்திலும் சபாஷ் வாங்கிவிடுகிறார்.
ஹன்சிகா, வழக்கம்போலவே கலர்புல், கவர்ச்சி டாலாக குஷ்புவின் சிஸ்டர் மாதிரியே கோலோச்சியிருக்கிறார்(இதுதான் சுந்தர்.சி, ஹன்சிகாவை அடுத்தடுத்து தன் படங்களில் பயன்படுத்தி கொள்ள காரணமோ.?!)
கெஸ்ட்ரோலில் வரும் குஷ்பு, ஆண்ட்ரியாவில் தொடங்கி படம் முழுக்க பெஸ்ட் ரோல்கள் ஏற்று நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், துளசி, ஐஸ்வர்யா, கிரண், பூனம் பஜ்வா உள்ளிட்ட மாஜி நாயகியரும் சரி, மதுரிமா, மாதவி, லதா உள்ளிட்ட இளம்நடிகைகளும் சரி அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
சந்தானம் - சதீஷ் இருவரும் மாறி மாறி டபுள் மீனிங்கில் பிரித்து பெடலெடுத்திருக்கின்றனர். வைபவ்வும் நச்-டச் கொடுக்கிறார்.
பிரபு, வில்லன் ராவத், கனல் கண்ணன், ராஜ்கபூர், உள்ளிட்டவர்களும் சபாஷ் போட வைக்கின்றனர்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, ஹிப்-ஆப் ஆதியின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், சுந்தர்.சி-யின் இயக்கத்தில், நம்மஊர் பக்கம் பொம்பளங்க நிரம்பிய பொங்கல் திருவிழாவுக்கு போய்விட்டு வந்த திருப்தியை தருகிறது ஆம்பள.
இந்நாள், முந்நாள் கதாநாயகி பொம்பளங்க நிரம்பிய டயலாக் ஓரியண்டட் காமெடி சப்ஜெக்ட் படம் என்பதால் வள வள... என இருந்தாலும், ஆம்பள, கூட்டும் காமெடி ரசிகர்கள் கும்பல.!
மொத்தத்தில், ஆம்பள - அசரல - பெருசா அசத்தல!
ரேட்டிங் - 2.5/5
கல்கி விமர்சனம்
கோவிலூர் ஜமீன்தார் பிரபு, தம் தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் மூவரையும் பாசமலர்களாக வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் தம் அப்பாவின் மரணத்துக்கு பிரபுதான் காரணம் என்று மூன்று தங்கைகளும் அவரை ஒதுக்கிவைக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் மகள் ஹன்சிகா சென்னையில் படிக்கிறார். கூட்டத்துக்கு ஆள் பிடித்து விடும் விஷால் ஹன்சிகாவை காதலிக்கிறார். சந்தானம் இவர்கள் காதலைப் பிரிக்கிறார்.
பிரபுவும் துளசியும் பிரிந்து வாழ்கின்றனர். அம்மாவான துளசி ஆசைப்படி அப்பாவைத் தேடி மதுரை செல்கிறார் விஷால். அங்கு தம் தம்பிகள் வைபவ், சதீஷ், அப்பா பிரபு மூவரையும் கண்டுபிடிக்கிறார். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது.
பிரபுவின் ஆலோசனைப்படி அத்தை மகள்கள் மூன்று பேரையும் கடத்தி தாலி கட்டிவிட்டால் குடும்பம் ஒன்று சேர்ந்துவிடும் என்று விஷால், வைபவ், சதீஷ் மூவரும் கடத்துகிறார். ஆனால் மகளை அல்ல, அத்தைகளைக் கடத்தி விடுகிறார்கள்.
அந்தப் பழி வில்லன்மீது விழ, ரம்யாகிருஷ்ணன் அவரை எதிர்த்து அரசியலில் போட்டியிடுகிறார். ஹன்சிகாவைப் பந்தயமாக வைத்து தேர்தலில் போட்டியிடும் அத்தைக்கு துணையாக விஷால் நின்று எதிரிகளின் கொட்டத்தை அழித்து ஹன்சிகாவை கைபிடிக்கிறார். இதுதான் கதை.
சந்தானம் வரும்போதெல்லாம் தியேட்டரில் கைதட்டல். ஊட்டியில் ஆரம்பிக்கும் கதையில் அரசியல் கூட்டங்களுக்கு வேணுங்கிற அளவுக்கு ஆள் பிடித்துதரும் விஷால் படம் முழுவதும் பரபரவென பட்டாசு வெடிக்கிறார். ஹன்சிகா ஊட்டி ஆப்பிள் போல பளபளக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழா என்ற புதிய இசை அமைப்பாளர் மீட்டிய இசை பரவாயில்லை. பாடல்களை ஆதி எழுதியுள்ளார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கலர்புல், ஆர்ட் இயக்குநர் சண்முகம் அசத்தல்! ஷோபியின் நடனம் படு துள்ளல்!
பண்டிகை சீசனுக்கு மக்களுக்கு என்ன தேவையோ அதைக் குறைவில்லாமல் தந்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
ஆம்பள - கலகல