தினமலர் விமர்சனம்
பல சாதனையாளர்களை உருவாக்கிய ஒரு விளையாட்டு மைதானத்தை ஆட்டையப்போட நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அந்த ஏரியா பொது நல இளைஞனக்கும் இடையில் நடக்கும் போராட்டமே புகழின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்! ஜெய் சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்து வெளிவந்திருக்கும் படமான "புகழ்" இப்படக் குழுவினருக்கு புகழ் தேடித் தருமா... பார்ப்போம்.?!
புகழ் கதைப்படி, வாலாஜா நகராட்சி மார்கெட்டில் கடை எடுத்தும் ஹோல்சேல் பூ வியாபாரம் செய்கின்றனர் சகோதரர்களான கருணாஸும், ஜெய்யும். அவ்வப்போது ஜெய்க்கு, ஏரியா அரசியல் பிரபலம் தாஸ் - மாரிமுத்துவுடன் முட்டல் மோதல் ஏற்படுகிறது. இருவரும் ஒரு விளையாட்டு மைதானத்திற்காக விளையாடும் அரசியல் விளையாட்டு தான் புகழ் படத்தின் முக்காலும் முழுசுமான மொத்தகதையும் .
ஜெய் - புகழாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி... எல்லாவற்றிலும் சரிவிகிதத்தில் நடித்து சபாஷ் சொல்ல வைக்கிறார் மனிதர். கீப் இட் அப் ஜெய்!
அநீதியைக் கண்டால், அடக்க முடியாது பொங்கி எழுவதிலாகட்டும், காதலியை கசிந்துருக பார்ப்பதிலாகட்டும், நண்பன் செய்திருக்க மாட்டான் என நம்புவதிலாகட்டும்.... அதையெல்லாம் தாண்டி... இந்த அரசியயையும், அரசியல்வாதிகள்மேலயும் நம்பிக்கை இல்லைன்னா... அதற்கு பதில் ஏதாவது கோயிலுக்கு வேண்டிகிட்டு... மொட்டை போடுறதுல கூட நல்லது நடக்கும்னு நம்புறவன் நான்.. என்று ஜெய், நிகழ்கால நிஜம் பேசும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது!
கதாநாயகி, சுரபி சும்மா வந்து போனாலே.... படம் பார்க்கும் ரசிகனுக்கு லவ் ஹார்மோன் சுரபிகள் சுரக்கும் என நம்பி ஏமாந்திருக்கின்றனர் ஜெய் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும். அதிகம் மேக்-அப் இல்லாத அம்மணியை பார்த்தால் பரிதாபம் தான் ஊற்றெடுக்கின்றது. பாவம்! ஆனாலும், காதலை சொல்லத் தயங்கும் நாயகர் ஜெய்யிடம், என்ன, எப்ப பார்த்தாலும் எம்ஜிஆர் பாட்டே பார்த்துகிட்டு, கொஞ்சம் ஜெமினி பட்டும் பாரேன்... என சேனல் மாற்றுவது... ரசனையான குறும்புகள்!
தம்பிக்காக தாஸ் - மாரிமுத்துவை ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து எதிர்க்கும் இடத்தில் கவனிக்க வைக்கிறார் கருணாஸ்.
வில்லன் கம் பதவி ஆசை அரசியல்வாதியாக தாஸாக வரும் கண்ணும் கண்ணும் மாரிமுத்து, தன் பையனுக்கு பைக் வாங்கித்தர முடியாது., ஓட்டுக்காக ஊரான் பிள்ளைக்கெல்லாம் பைக் வாங்கி தரும் வயிற்றெரிச்சல் காட்சியில் வயிறு குலுங்குகிறது. மாரிமுத்து வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மூர் அரசியல்வாதிகளை பட்டவர்த்தனமாக படம் பிடித்து காட்டுகின்றன பலே, பலே!
அதே மாதிரி, அந்த மைதானதிற்கு ஆசைப்படும் மினிஸ்டராக வரும் கமலா தியேட்டர் வள்ளியப்பனும், பழைமை அரசியல்வாதி பாடலாசிரியர் பிறைசூடனும் கூட பக்கா கச்சிதம். ஜெய்யின் நண்பர்கள் ஆர்.ஜே.பாலாஜி, வெங்கட், கமிஷ்னராக வரும் காமிராமேன் ஆர்.வேல்ராஜ் உள்ளிட்டவர்களும் நச்சென்று நடித்திருக்கின்றனர். .
விவேக் சிவா - மெர்வின் சாலமன் இரட்டை யர் இசையில், அடடடா என்ன அழகு..., உள்ளிட்ட அழகிய பாடல்களூடன், ஜி.பி.வெங்கடேஷின் பக்கா படத்தொகுப்பில், ஆர்.வேல்ராஜின் அழகிய ஒளிப்பதிவில், மணிமாறனின் எழுத்து, இயக்கத்தில் நச் சென்று வந்திருக்கிறது புகழ் மொத்த படமும்!
ஒருமைதானத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பது நெருடலாக தெரியா வண்ணம். ஜனரஞ்சமாக இப்படத்தை காட்சிப்படுத்தியிருப்பதிலும், மக்கள் பிரச்சினைக்காக உண்டியல் ஏந்தி ரோடு ரோடாக போராடிய காலம் எல்லாம் மாறிப்போச்சு... சாதாரண கவுன்சிலர் கூட பார்சினோ காரில் வந்து பந்தாவா இறங்குறான்... நீ சைக்கிளுக்கு காத்தடிக்க முடியாம கடன் சொல்லிட் டநிக்கிற... என்று பழமை அரசியல்வாதியாக இப்படத்தில் வரும் பாடலாசிரியர் பிறைசூடனிடம், கருணாஸ், கொந்தளிக்கும் இடத்திலும் கவனம் ஈர்க்கின்ற இயக்குனர் மணிமாறன் இந்த இடங்களில் ஜெயித்திருக்கிறார்.
அதே நேரம் ,புகழ் மொத்தப் படமும் ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடித்த மெட்ராஸ் பட சாயலிலேயே இருப்பது பலவீனம்! ஆகவே, மெட்ராஸ் படத்திற்கு முன்பு இப் புகழ் படம் வந்திருந்ததென்றால் இதன் புகழ் ஒருவேளை, எட்டுத்திக்கும் பரவியிருக்கலாம்!
புகழ் - புரட்சி! செய்யுமா? வசூல்புரட்சி...? பார்ப்போம் !
-------------------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
தங்களது உணர்வோடு ஒன்றியக் கலந்துவிட்ட மைதானம் ஒன்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் 'புகழ்' என்ற இளைஞனின் செயல்பாடுகள்தான் 'புகழ்' என்ற திரைப்படத்தின் கதை.
இந்தச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக, டஜனுக்கும் மேற்பட்டவர்களை (வழக்கம் போல) ஒற்றை ஆளாக வெட்டிச் சாய்க்கும் 'பொறுப்பான' இளைஞனாக ஜெய் நடித்திருக்கிறார். வாயில் புகையிலையை அதக்கிக் கொண்டு பேசவதைப்போன்ற இவரது வசன உச்சரிப்புதான் என்னமோ போல இருக்கிறது.
கதாநாயகன் கொன்று வீழ்த்தும் நபர்களில் மந்திரி ஒருவரின் மருமகனும் இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது 'கெதக்' என்றாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்த டஜன் கொலைக் கேஸை ஆறே மாதத்தில் விசாரித்து, கதாநாயகனை நிரபராதி என நீதிமன்றம் விடுவிக்கும்போது, சட்டத்தின் விரைவான செயல்பாடு ஆச்சர்யம் அளிக்கிறது. பொதுச் சொத்தை ஆக்கிரமிக்கும் அரசியல்வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம். துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.
கருணாஸ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். கச்சிதம்!
சற்றே உள்வாங்கிய பல்வரிசையுடன் கதாநாயகி சுரபி, பனி நிறத்தில் மினுங்குகிறார். பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; நடிப்புகூட வேண்டாம் எனும்படியான ஜில் தோற்றம். அதனால்தானோ என்னவோ அதிகமாக நடித்து அவரும் சிரமப்படவில்லை; நம்மையும் சிரமப்படுத்தவில்லை.
கதாநாயகன் 'அந்த இடத்துல நம்மை ஒண்ணும் செய்ய முடியாது. நம்ம ஆளுங்க அங்க அதிகம்' என்பது, இவள்ளவு காசு கிடைக்கும்னா நானே கவுன்சிலராகி இருப்பேனே என்பதும் அவரது பொதுத் தொண்டு இமேஜூக்கு கரும்புள்ளிகள் இல்லீங்களா இயக்குநரே?
வழக்கமான குத்துப்பாட்டுகள், மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றுக்கும் அடையாளமாக மதுவருந்தும் காட்சிகளுடன் கூடுதலாக வாந்தி எடுப்பதையும் சேர்த்து, தான் மாத்தி யோசித்திருப்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். உவ்வே!
அரசியலில் முன்னுக்கு வரத் துடிக்கும் தாஸ் பாத்திரம் வெகு யதார்த்தம். நடித்திருப்பவர் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டார். 'இவரு பெரிய எம்ஜிஆரு! ஊர்ல இருக்கிற கிழவிக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுராரு' என்பது போல ஆங்காங்கே குண்டூசி வசனங்கள் புன்முறுவலை வரவழைக்கின்றன. பெண்களை மட்டமாகக் கிண்டல் செய்யும் காட்சிகள் அதிகம். அப்போதெல்லாம் தியேட்டரில் விடலைகளின் ஊளைச் சத்தம் எழுந்து அடங்குகிறது. கூடவே பெண்களும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். மஹா ஜனங்களின் ரசனை மிரட்சியளிக்கிறது.
திரைப்படம் பார்த்து வெளிவந்த ரசிகர் விழுப்பும் ஆர். ஏழுமலையின் கருத்து: பொதுப் பிரச்னைக்காகப் பசங்க போராடுறது ரொம்ப அவசியம். அதை நல்லாச் சொல்லியிருக்காங்க. ஃபிரண்ட்ஸுங்க பண்றதெல்லாம் ஜாலியா இருக்கு. கதாநாயகி ரொம்ப அழகு. நிறையப் படம் இது மாதிரி வந்திருக்கு. படம் சுமார்.
புகழ்: படத்தின் பெயரில் மட்டும்தான்!