தினமலர் விமர்சனம்
கடந்த ஆண்டு இறுதியிலேயே தேசிய விருது வாங்கி குவித்துவிட்டு, இந்த வருடம், திரையில் வசூல் வாரி குவிக்க, வந்திருக்கும் படம் தான் குற்றம் கடிதல்". ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் அருமையான படமான "குற்றம் கடிதல் "திரைப்படம் சொல்லியிருக்கும் போதனைகளை..., மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய சூழலில் நம் கல்வி துறைக்கே மிகவும் பயனுள்ளதாகும்.
மாணவர்களை சகட்டு மேனிக்கு அடிக்கும் ஆசிரியர்களும், "காசேதான் கல்வியடா... எனும் கல்வி நிறுவனங்களும் இப்படத்தை பார்த்த பிறகாவது, வருந்த வேண்டும்.... திருந்த வேண்டும்... என்பதே நம் அவா!!
கதைப்படி, கட்டுப்பாடுகள் நிரம்பிய தனியார் பள்ளியின் இளம் ஆசிரியை மெர்லின் எனும் அறிமுக நடிகை ராதிகா பிரசாத் அவரது காதல் கணவன் - தனியார் நிறுவன பொறியாளன் மணிகண்டன் எனும் புதுமுக நடிகர் சாய் ராஜ்குமார். பெற்றோரை எதிர்த்து, மதம் மீறி திருமணம் செய்து கொள்ளும் மெர்லின், திருமணம் முடிந்து பள்ளிக்கு வேலைக்கு வந்த முதல் நாளே தன் பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுத்த மாணவிக்கு முத்தம் கொடுத்த மாணவனை அழைத்து கண்டிக்கும் நோக்கில் ஓர் அறை விடுகிறார். அதில் சுருண்டு விழும் அந்த மாணவனை அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கு ஓடுகிறது பதறும், பள்ளி நிர்வாகம்.
அங்கு எமர்ஜென்சி வார்டில், கோமா ஸ்டேஜில் அம்மாணவன் கிடத்தப்பட, புதுமண தம்பதிகளான மெர்லின் டீச்சரும், அவரது காதல் கணவரும், அம்மாணவனின் உற்றார் உறவினர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும், சுயநலம் மிகுந்த மீடியாக்களிடமும் சிக்கித் தவிக்கும் தவிப்புடன், கோமா ஸ்டேஜ் மாணவன் உயிர் பினழத்தானா?!, இல்லையா? உண்மையாகவே மாணவன் மயங்கி விழ அந்த ஆசிரியை தான் காரணமா..?, ஆசிரியையின் குற்ற உணர்ச்சி அவரையே எவ்வாறு பாடாய்படுத்துகிறது..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு... தமிழ் சினிமா வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக வசீகரமாகவும், ரசிகனுக்கு மிகவும் நெருக்கமாகவும் பதில் சொல்கிறது குற்றம் கடிதல் படத்தின் மீதிக் கதை!
மெர்லின் டீச்சராக அறிமுக நடிகை ராதிகா பிரசிதா, தான் புதுமுகம் என்பது துளியும் தெரியா வண்ணம் அப்பாத்திரத்தில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்... என்றால் மிகையல்ல! தான் சார்ந்திருக்கும் மதத்தின் தீவிர பிரசகரான தன் தாயின் எண்ணத்திற்கு எதிராக, தான் காதலித்த வேற்று மத வாலிபரை திருமணம் செய்து கொண்ட மெர்லின் .. தன் கணவனின் மதத்தை முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தன் மத சம்பிரதாயங்களை கொஞ்சமும் விட்டுத் தரவும் முடியாமல் எதிர்கொள்ளும் மன, மதப்போராட்டங்களிலும் சரி, குறும்புக்கார மாணவன் மீது கை ஓங்கிவிட்டு குற்ற உணர்ச்சியில் படும்பாட்டிலும் சரி... கைதேர்ந்த நடிகைகளையே தன் நடிப்பு பார்த்து கைதட்ட விட்டிருக்கிறார்... அல்லது கையை பிசைய விடுகிறார்... எனலாம்! ஹாட் ஸ் ஆப் டூ யூ ராதிகா பிரசிதா !! ."
மெர்லினின் காதல் கணவராக, மணிகண்டன் பாத்திரத்தில் வரும் புதியவர் சாய்ராஜ் குமாரும், காதல் மனைவி செய்த சின்ன தவறு பூதாகரமாக மாறி பிரச்சனை மேல் பிர்ச்சனைகளை சந்தித்து சுய முடிவு எடுக்கவும் முடியாமல், மனைவியை கடிந்து கொள்ளவும் முடியாமல் தவிப்பதில் சபாஷ் சொல்லும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வாவ்!
சிறுவன் செழியனாக மாஸ்டர் அஜெய், எடுப்பான பற்கள், மெகா சைஸ் மூக்குகண்ணாடி, மூளையில் கட்டி, அதன் வெளிப்பாடாக மூக்கில் இருந்து வழியும் இரத்தம், துறு துறு துடுக்கு தனம்... என படத்திற்கு இயக்குனர் எதிர்பார்த்ததற்கு மேலாகவே வலு சேர்திருக்கிறார். பலே., பலே.
அதிலும், செழியன்... தான் மாணவிக்கு முத்தம் கொடுத்தது தவறு... என உணராமல், உங்களுக்கு பர்த்டே என்றால், உங்களுக்கும் கிஸ் தருவேன் மிஸ்... கிஸ் தருவதில் தப்பென்ன இருக்கு மிஸ்...? என விவரம் புரியாமல் வெள்ளாந்தியாக கேட்கும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது. செழியனும் இந்த சீரியஸ் சீனில் சிறப்பாக நடித்திருக்கிறான். மேலும் இந்த இடத்தில் செக்ஸ் கல்வியின் அவசியத்தை சொல்லாமல் சொல்லி இயக்குனரும் ஜெயித்திருக்கிறார்.
செழியனின் புரட்சிகர மாமா பாவல் நவகீதன் பார்வையாலேயே மிரட்டி இருக்கிறார். பத்தாதற்கு., ஆரம்ப காட்சியில் ஏழை ஏரியா வாசி மீது லேசாக மோதும் பணக்கார கார் காரனை படுத்தும் பாட்டில் தொடங்கி, பள்ளி முதல்வர், மற்றும் அவரது டீச்சர் மனைவி, மேலும் மெர்லினின் தாயார்.. உள்ளிட்டவர்களை சந்தேக கண்ணோடு சல்லடை போட்டு வறுத்து எடுப்பது மற்றும் மெர்லின் டீச்சரின் கணவரை கண்டதும் கை நீட்டுவது என தனக்கு தரப்பட்ட பாத்திரத்தை பக்காவாக செய்திருக்கிறார்..
மேற்கண்டவர்கள் மாதிரியே சிறுவனின் ஆட்டோ ஓட்டும் ஏழை தாய் சத்யா, பள்ளி முதல்வர் குலோத்துங்கன், அவரது மனைவியாக வரும் துர்கா, நிகிலா கேசவன், ஐஸ்வர்யா... பரிதி உள்ளிட்டவர்களும் கணமான கேரக்டர்களில் அசால்ட்டாக நடித்து அப்ளாஸ் அள்ளுகின்றனர். அதிலும்., தங்களை உருட்டி மிரட்ட வரும் சிறுவனின் தாய் மாமாவிடம், மிகவும் பக்குவமாக, தாங்களும் தாங்க முடியா இழப்பை சந்தித்தவர்கள் தான் ... என்றும், ஒரு விபத்தில் தாங்களும் ஒற்றை செல்ல மகளை எதிர்பாராமல் பறிகொடுத்தாகவும் சொல்லி உருகும் பள்ளி முதல்வரும் அவரது டீச்சர் மனைவியும் சம்பந்தபட்ட பாத்திரங்களாகவே. ஜொலித்திருப்பது கூடுதல் சிறப்பு!
சி.எஸ் . பிரேமின் படத்தொகுப்பு, மணிகண்டனின் ஒளிப்பதிவு, சங்கர் ரங்கராஜனின் இசை, உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இயக்குனர் பிரம்மா.ஜீ-யின் எழுத்து, இயக்கத்தில் சற்றே ஒரு குறிப்பிட்ட மதவாடை பலமாக வீசும் காட்சிகளில் (குறிப்பாக, தான் மதம் மீறி திருமணம் செய்து கொண்டு பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு வந்ததால் தானோ? தனக்கு இவ்வாறு பிரச்சனை மேல் பிரச்சனை... என கருதும் மெர்லின், சர்ச் வாசலில் சிலுவையை பார்த்ததும் தன் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அவசர அவசரமாக அழிப்பது, அதே போன்று, மெர்லின் டீச்சரால் தன் சகோதரி மகனுக்கு இப்படி சீரியஸ் ஆகி விட்டது... எனத் தெரிந் ததும், மெர்லினைத் தேடி அவரது தாய் வீட்டிற்கு ஆத்திரத்துடன் செல்லும் சிறுவனின் தாய்மாமா அங்கு மத பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் மெர்லினின் தாயாரைப் பார்த்து அமைதி காப்பது... உள்ளிட்ட காட்சிகள் யாரையோ திருப்திபடுத்த வலிய திணிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது....) அந்தக் குறை தெரியாமல், சாமான்ய ரசிகனின் கவனத்தை திசை திருப்பி படத்தின் கதையோட்டத்தில் கலந்து கரையச் செய்வது ஆறுதல்!
மொத்தத்தில், செக்ஸ் கல்வியின் அவசியம், ஆசிரியர்களின் அலட்சியம், மீடியாக்களின் அவசரம்... உள்ளிட்டவைகளை உறுதியாக உரத்த குரலில் பேசியிருக்கும் "குற்றம் கடிதல்", தேசிய விருதை குவித்தது மட்டுமல்லாது... வசூலையும் வாரி குவிக்கும்! குவிக்க வேண்டும்!!
குற்றம்கடிதல் - வசூல் குவிதல்"