தினமலர் விமர்சனம்
என்னை அறிந்தால்" திரைப்படத்தில் தல அஜீத் பாடிய பாடல் வரிகளையே டைட்டிலாகக்கொண்டு புதியவர்களின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ஆவி, அமானுஷ்ய சக்தி, இத்யாதி, இத்யாதிகள்... அடங்கிய பேய் படம்தான் உனக்கென்ன வேணும் சொல்லு"
திருமணமே செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் லைப் ஸ்டைலில் வாழ்ந்து, ஈகோ வால் பிரிந்த ஒரு ஜோடியின் வாரிசு., பிறந்த மூன்று நாட்களிலேயே அனாதை ஆக்கப்பட்டு, எதிர்பாராமல் அதன் உயிரும் பறிபோகிறது. அதன் ஆன்மா சாந்தியடையாமல் தான் கருவில் இருந்த போது தன் தந்தை தனக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தரச் சொல்லி தந்தையையும்., தாயின் தற்போதைய புது வாழ்க்கையையும், படுத்தும் பாடும், பிசாசு மிரட்டலும் தான் உனக்கென்ன வேணும் சொல்லு" படம் மொத்தமும்.
எட்டு வயது குழந்தை பேயாகவும், பெண்ணாகவும் டெய்சி பாத்திரத்தில் சிறுமி அனு, அருமையாக நடித்து மிரட்டியிருக்கிறார். ஆழ்மன சக்தி வாயிலாக ஆவியான தன்னை அணுகும் தன் தந்தை கார்த்திக்கிடம் தன் கையில் இருக்கும் பொம்மையை காண்பித்து, ''அப்பா, இது நீ எனக்காக வாங்கி வச்ச பொம்மை தான், உனக்கு தெரியலையாப்பா?" என கேட்பதும், என் கையை பிடிச்சு சிட்டு நடக்குறேன்னு சொன்னாயே... அப்பா, இப்போ நடக்கலாமே.... அப்பா...' என உருகுவதும் இளமை முறுக்கில் ஏதேனும் தவறுகள் செய்து பின் திருந்திடும், வருந்திடும் ஒவ்வொரு அப்பனையும் நிச்சயம் உலுக்கும்.
கார்த்திக்காக கதையின் நாயகராக வரும் தீபக் பரமேஷ், கருவில் இருக்கும் குழந்தையை கொஞ்சி மகிழ்வதிலும் சரி, தன் அபிலாஷைகள் அடங்காமல் ஆன்மாவாக அலையும் பெண் பிள்ளையுடனும் சரி... பாசத்தை கொட்டி மெய்சிலிர்க்க வைக்கிறார். பூஜா மற்றும், ஜீடி யுடனான இவரது காதலும் கூட கண்ணியம், காவியம்.
வருமானம் நின்று போன காதலனை அம்போ என விட்டு, அவனது குழந்தையை அவன் கண்ணில் காட்டாமலேயே தோழியின் பேச்சைக் கேட்டு அனாதை
ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, அது பற்றிய குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் பூஜா என்னும் நாயகி ஜாக்லின் பிரகாஷ், சிங்கப்பூரில் செட்டில் ஆவது சற்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது... என்றாலும் இந்தக்கால நவநாகரீக பெண்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்... என்பதை எடுத்துகாட்டும் விதமாக அமைந்திருப்பது ஆறுதல். ஜாக்குலின் முதல் படத்திலேயே தான் நடிப்பிலும் குயின் நிருபித்திருக்கிறார். பேஷ், பேஷ் .
மாத்தியூவாக மத கோட்பாடுகளுக்கு மாறாக ஆவி ஓட்டுகிறேன், ஆன்மாவுடன் பேசுகிறேன்., பேய், பிசாசுகளை விரட்டுகிறேன....பேர்வழி.. என அவைகளாலேயே அழியும் 'மைம்" கோபியின் நடிப்பு பலம்.
சிவாவாக பூஜாவின் சிங்கப்பூர் புருஷனாக வந்து தன் குழந்தை அபியை சென்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிட்டு தவிக்கும் குணாலன் மோகனும் பெருந்தன்மையான நடிப்பில் பிரகாசித்துள்ளார்.
ஜீ.டி-மோர்ணா அனிதாவும் உயிரை கொடுத்து நடித்து உருக்குகிறார் நம்மை .!
எம். ஆர்.கே.வின் அமானுஷ்யம் நிரம்பிய லாஜிக்கான திகில் கதை, மணீஷ் மூர்த்தியின் ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவு, சிவசரவணனின் பீதியை கிளப்பும் பின்னணி இசை, ஹரிஹரனின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும்., ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் திறமையான எழுத்து, இயக்கமும், 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தின் மூலம் ரசிகனுக்கு என்ன வேணும் ? என்பதை ஒரளவு உணர்ந்து சரியாக பூர்த்தி செயதிருப்பது இனிமை!
ஆக மொத்தத்தில், குழந்தை டெய்சியை அனாதை ஆசிரமத்தில் இருந்து குழந்தையில்லா சோகத்தில் மனநலம் பாதித்த பெண் ஜீ டி திருட உதவி தகவல் சொல்லும் ஆசிரம ஆயாவை டெய்சி ஆவிப் பேய் எதுவும் செய்யாமல் விடுவது ... உள்ளிட்ட குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் 'உனக்கென்ன வேணும் சொல்லு'' நிச்சயம் ரசிகனுக்கு பிடிக்குமுன்னு சொல்லலாம்!!