பிரகதீஷ் கௌஷிக், யோக் ஜேப்பி, ரியாஸ்... ஆகிய மூன்று அறிமுகம் மற்றும் அவ்வளவாக பிரபலமாகாத ஆண் நட்சத்திரங்களுடன்., ஒரளவு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்க "சாவ்" (Saw) ஆங்கிலப்படத்தை கிட்டத்தட்ட தமிழுக்கு ஏற்றபடி தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் புதியவர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
மனைவி, குழந்தை, குடும்பம்... என அமைதியாக வாழ நினைக்கும் ஒரு இளைஞரை கடவுள் மூளையில் கட்டியை கொடுத்து சோதிக்க, அந்த இளைஞர், தான் இறப்பதற்குள், சுயஒழுக்கம் தவறுபவர்க்கும், அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து பணம் பண்ணுபவருக்கும் தக்க பாடம் புகட்டும் கருவை உள்ளடக்கி வித்தியாசமும் விறுவிறுப்புமாக எதிர்பாராத திருப்பங்களுடன் வெளிவந்திருக்கும் த்ரில், க்ரைம் சப்ஜெக்ட் படமிது...
கதைப்படி, தன் தொழிலில் விடாப்பிடி நேர்மையுடன் இருக்கும் ஒரு டாக்டர், தன் மனைவிக்கு பெரும் துரோகம் செய்கிறார். அந்த டாக்டரும், பணத்துக்காக பெரும்புள்ளிகளின் அந்தரங்க வாழ்க்கையை படம்பிடித்துக் கொடுக்கும் போட்டோ கிராபர் ஒருவரும், ஒரு பாழடைந்த சதுரமான அறையில், இருவரது காலிலும் சங்கிலி பிணைக்கப்பட்ட நிலையில் எதிரெதிர் மூலையில்அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் தலையில் வினோதமான கருவி மாட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்டு கிடக்கிறார். இந்த இருவருடைய பேண்ட் பாக்கெட்டிலும் தலா ஒரு ஆடியோ கேசட் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒலிநாடாக்களைப் போட்டு கேட்கின்றனர் இருவரும். அதில் இருவருக்கும் சில தகவல்கள் இருக்கிறது. அவர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு அந்த அறைக்குள்ளேயே அவர்களுக்கு சில உபகரணங்களும் ,அது பற்றிய குறிப்புகளும் அதில் சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும், அவர்களுக்கு மாலை ஆறு மணிவரையே அதில் , காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். அதிலும் , டாக்டர் புகைப்பட கலைஞரை , அருகில் கிடக்கும் கை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் இருவர் மட்டுமின்றி வேறு இடத்தில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் டாக்டரின் மனைவியும், மகளும் ...கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்று தகவல்கள் அந்த ஆடியோ நாடாக்களில் தனித்தனியாக இருக்கிறது. அந்த இக்கட்டிலிருந்து அவர்கள் இருவரும் ஒரு சேரத்தப்பித்தார்களா? அல்லது டாக்டர் ., போட்டுத் தள்ளி விட்டு தப்பித்தாரா ..? எதற்காக அவர்கள் அங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்களை யார் அடைத்து வைத்துள்ளது? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு திக் திக் திக் திருப்பங்களுடன் பதில் சொல்லி பயணிக்கிறது சதுரம் 2 படத்தின் சவாலான மீதிக்கதை!
ஆரம்பத்தில் அமைதியான கணவராக, குடும்பத் தலைவராக வரும் நாயகர் பிரகதீஷ் கௌசிக், தன் மூளையில் ஏற்படும் கட்டிக்கும் விமான விபத்துக்கும் பின், சமூகஅக்கறையுள்ள கொடூரமானவராக மாறும் விதம் வித்தியாசம்.
படம் முழுக்க சங்கிலியில் பிணைக்கப்பட்ட பாத்திரத்தில் நடித்திருந்தாலும், யோக் ஜேப்பி, ரியாஸ்... இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை படு சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தாம் கொல்லப்பட்டு விடுவோமோ... எனும் பயத்தினால் இவர்கள் நடுங்கும் காட்சிகள் ரசிகனையும் நடுங்க வைக்கிறது.
சுஜா வாருணி, இரட்டை குழந்தைகளை சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியாக இயல்பாக வருகிறார். யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
சனம் ஷெட்டி ஒரு சில காட்சிகளே வந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
யோக்ஜேப்பியின் மனைவியாக நடித்திருப்பவருக்கு நிறைய காட்சிகள்... என்றாலும் அவை அனைத்தும் சோகமயமாயான காட்சிகள்தான். அதற்கு ஏற்ப இவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவும், யதார்த்தமாகவும் நடித்து தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
க்ளைமாக்ஸில்., சங்கிலி பிணைப்பில் இருந்து விடுபட ., படத்தில் டாக்டராக வரும் யோக் ஜேப்பி தனது காலை வெட்டிக் கொள்ளும் காட்சிகூட பெரிய அளவில் ரசிகனிடம் பயத்தையோ பதற்றத்தையோ ஏற்படுத்தாமல், போவது... படத்திற்கு மிகப்பெரிய தொய்வுதான். இது மாதிரி இரத்தத்தை உறைய வைக்க வேண்டிய காட்சிகள் சாதாரணமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு, இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக திரில்லர் காட்சிகள் இருந்திருக்கலாமோ எனும் எண்ண ஓட்டத்தை ஏற்படுத்துவது சற்றே பலவீனம்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் "விரும்பி பிறந்தவன் யாரடா..? விரும்பி இறந்தவன் யாரடா..?" எனத் தொடங்கித் தொடரும் ஒரேயொரு பாடல் தான் படத்தில் என்றாலும், அந்த டைட்டில் கார்டு பாடலும், படத்தின் ஒட்டு மொத்த பின்னணி இசையும் இதம், பதம்.
சதீஷின் ஒளிப்பதிவும் பெரும்பகுதி ஒரே அறைக்குள் தான் என்றாலும், அந்தக் குறைத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறது. வாவ்!
ஆங்கிலத்தில் வெளிவந்த "சாவ்" (Saw) படத்தை கிட்டத்தட்ட தமிழுக்கு ஏற்றபடி தழுவி இப் படத்தை இயக்கியுள்ளார் சுமந்த் ராதாகிருஷ்ணன். அந்த ஆங்கிலப் படத்தில் வித்தியாசமாக கொலை செய்யும் காட்சிகளை., மிகக் கொடூரமாக காட்டியிருப்பார்கள். ஆனால், இதில் தமிழுக்கு ஏற்றவாறு., போதுமான அளவில்ரொம்பவும் கொடூரமானகாட்சிகள் இல்லாமல், இப்படத்தை திரில்லராக இயக்குனர் சுமந்த்ராதாகிருஷ்ணன் கொடுத்திருப்பது சிறப்பு.
ஒப்பனிங்கில் சென்னை ஏர்போட்டின் பிரமாண்டத்தை மிகப் பிரமாண்டமாக காட்டி., அதன்பின், ஒரு சிறிய சதுர அறைக்குள் முக்கால்வாசி படத்தையும் படம் பிடித்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியமே சாமர்த்தியம்.
ஆக மொத்தத்தில், "சதுரம்2 - டைரக்டரின் சாதுர்யம்! தமிழ் சினிமாவில் முற்றிலும் புதிய அத்தியாயம்...ப்ளஸ் ஆச்சர்யம்!
----------------------------------------------------------------------
கல்கி சினி விமர்னம்
பொதுவாக வெற்றிபெற்ற பிறமொழிப் படங்களிலிருந்து கதையை அரைகுறையாக - லேசாக உருவிக் குத்துப்பாட்டு, வன்முறை, அபத்த நகைச்சுவை, தனிமனிதத் துதி, ஒற்றையாளாய் கும்பலையே துவம்சம் செய்வது என்று இன்னபிறவற்றைக் குழைத்துக் கலந்து கட்டியாகப் படம் தருவது பல தமிழ்ப்பட இயக்குநர்களின் வாடிக்கை.
நேர்மையாக, ஹாலிவுட் 'SAW' படத்தின் இன்ஸ்பிரேஷன்(?) தான் 'சதுரம்-2' என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுமந்த் ராதா கிருஷ்ணன்.
பல கோடி சம்பள நடிகர் பட்டாளம், தண்ணீராய் - மன்னிகவும் - காற்றாய்ச் செலவழித்த உலக மகா செட்டுகள், வெளி நாடுகளில் எடுத்த ஆபாச நடனங்கள் இவையேதும் இல்லாமல் புது முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வரவேற்போம்.
ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு, மிரட்டும் கார்ட்டூன்கள், அச்சமூட்டும் பாடல் வரிகள் எனப் படத்தின் ஆரம்பமே ஓர் எதிர்பார்ப்பை ஊட்டிவிடுவதென்னவோ நிஜம்.
சதுரமான அறையில் கதை நடக்கிறது. சரி, அதென்ன பெயரில் சதுரத்துக்குப் பிறகு 2? அந்தச் சதுரத்துக்கே வெளிச்சம்!
படத்தில் யோக் ஜாப்பியின் மூக்கைப் போலவே நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறது. அவருடன் அடைபட்டிருக்கும் போட்டோகிராபர் ரியாஸும் சோடைபோகவில்லை. ஆனால் தொடர்ந்து ஒரே அறை - ஒரே மாதிரியான வசனங்கள் - ஒரே மாதிரி பீதியை வெளிக்காட்டும் நடிப்பு அலுப்புத்தட்டுகிறது.
தவறு செய்பவர்கள் திருந்தி வாழாவிட்டால் மரணமே பரிசு என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது படம்.
பெயர் காட்டும்போது ஒலிப்பதைத் தவிர வேறு பாடல்கள் இல்லை. படத்தில் அதற்கான தேவையும் இல்லை. ஜேம்ஸ் வான் இயக்கிய 'SAW' பட வரிசையின் கன்னாபின்னா வெறறிக்குக் காரணம், விதவிதமான நூதன முறைகளில் கொலைகள் செய்யப்படுவதுதான்.
இங்கிருக்கும் சூழலையும் சென்சாரையும் அனுசரித்துக் கொலைக்காட்சிகளை அடக்கியே வாசித்திருக்கின்றனர். ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனால் 'SAW' பார்த்த ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும்.
கடந்த காலமும் நிகழ்காலமும் சட்சட்டென்று மாறுவதைக் கூடுமானவரை குழப்பம் இல்லாமல் தந்திருக்கிறார் எடிட்டர். ஆனால் அளவுக்கதிகமான ஃப்ளாஷ்பேக்குகள் பாத்ரூம் போகவும், பாப்கார்ன் சாப்பிடவும் ரசிகர்களை வெளியே அனுப்பி விடுகிறதே?
சதுரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல என்பார் சுஜாதா.
இந்தப் படத்தக்கு வரிவிலக்கு கிடைத்ததா?
திரையரங்கில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ரசிகைகள் சீதாலட்சுமி, சசிகலா, லட்சுமி, பட்டம்மாள் மற்றும் புனிதவதி கியோரின் ஒட்டுமொத்த கருத்து: தப்பு செய்யறவாளைத் தண்டிக்க மேலே ஒருத்தன் பார்த்துண்ட்ருக்கான்றத நன்னா சொல்லியிருக்கா. தப்பு செய்யறவாளுக்குத் தண்டனை உண்டுன்னும் அழுத்தமா சொல்லியிருக்கா. படம் நன்னா இருக்கு.