கோடை விடுமுறை காலத்தில் குழந்தைகளையும், அவர்களை திரையரங்கிற்கு கூட்டி வரும் பெற்றோர்களும் கொண்டாடும் வகையில் புதியவர்கள் கூட்டணியில் வந்திருக்கும் கருத்தும், காமெடியும் நிறைந்த படம் தான் கத சொல்லப் போறோம்".
இப்படக் கதைப்படி, நரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்த கொஞ்ச நேரத்திலேயேதாய் மயக்கத்தில் இருக்கும் நிலையில், தந்தை நரேனை ஏமாற்றி அந்த குழந்தையை, ஒரு பெண் திருடி செல்கிறார். அந்த திருட்டு பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன், போலீஸில் புகார் கொடுக்கிறார். போலீசாரும் அந்த பெண்ணை நரேனுடன் சேர்ந்து தேடுகின்றனர்.
இந்நிலையில், போலீசாருடன் நரேன் ரோட்டில் செல்லும்போது, குழந்தையை கடத்திய அந்த பெண் இவர்களை பார்த்து ஓட்டம் பிடிக்கிறார். இதை பார்த்த நரேனும், போலீசாரும் அந்த பெண்ணை துரத்துகின்றனர். அப்போது, அந்த பெண் எதிரில் வந்த லாரியில் மோதி குற்றுயிரும் கொலை உயிருமாக கீழே விழுகிறார். அவளை, போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு அந்த பெண் கோமா நிலையில் இருக்கிறார். தனது குழந்தையை கடத்திய அந்த
பெண்ணின் கையில், தன் குழந்தை இல்லாததால் நரேன் தவிக்கிறார்.
மேலும், அந்த பெண் கோமா நிலையில் இருந்து திரும்பினால்தான் தனது குழந்தை பற்றிய விவரம் தெரியும்.. .. என்பதனால், அந்த பெண்ணுக்கு தன் சொந்த செலவிலேயே சிகிச்சை செய்து வருகிறார். எட்டு வருடங்களுக்கு மேலாக அந்த பெண் கோமா நிலையில் இருந்து பின் இறந்துபோகிறார். தனது குழந்தை கடைசிவரை எங்கிருக்கிறது ?என்று தெரியாமல் போனதால் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றனர் நரேன்- விஜயலட்சுமி தம்பதியினர்.
இந்நிலையில், ஒரு அனாதை ஆசிரமத்தில் நரேனின் குழந்தைவளர்வதாக போலீஸூக்கு தகவல் வருகிறது. நரேனைக் கூட்டிக் கொண்டு அங்கு போகிறது போலீஸ். அந்த குழந்தை நரேனின் குழந்தைதானா? அந்த குழந்தை எப்படி அனாதை ஆசிரமத்திற்கு சென்றது? இறுதியில் நரேன்- விஜயலட்சுமி தம்பதியினர் வசம் கிடைக்கும் குழந்தை நிஜத்தில் அவர்களுடையது தானா..? என்பதை எல்லாம் நேர்த்தியான கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், இத்யாதி, இத்யாதிகளுடன் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள் கத சொல்லப் போறோம் படக்குழுவினர்.
இப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது குழந்தை நட்சத்திரங்களைத்தான். அவர்கள் எல்லோருமே சிறப்பாகநடித்திருக்கிறார்கள். ஷிபானா (பிரியா), ரவீனா (அனிதா) , அரவிந்த்ரகுநாத் (அருண்) , அரவிந்த் (டீனு) , ஷாமு (ஷாமு), உள்ளிட்ட குழந்தைகள் அமர்க்களம்.
ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கும், வீட்டில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் போட்டி நடைபெறும் காட்சிகளில், ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளின் வேதனையை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள். வாவ்!
இது நாள் வரை தமிழ் சினிமா நாயகன் - நாயகியரின் வயதான அப்பாவாக வந்து போன நரேன், இதில் ஒரு சுட்டி தியாக உள்ளம் கொண்ட பெண் பிள்ளையின் இளவயது அப்பாவாக, பிறந்த குழந்தையை காணாமல் மனைவியுடன் தவிக்கும் இளம் தந்தையாக என்னமாய் நடிந்திருக்கிறார். வாவ். மனிதர். மகளை
தொலைத்த அப்பாவின் வேதனையை தனது நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நரேனைப்போன்று, பிறந்த குழந்தையின் பிஞ்சு முகத்தைக் கூட பார்த்த ரியாத தாயாக விஜயலட்சுமியும் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் பெருவாரியாக இடம்பிடிக்கிறார். குழந்தையை பறிகொடுத்த துக்கத்தில் இவர் துடிக்கும் காட்சிகள் எல்லாம் பிரமாதம்.
மற்றபடி, இளஞ்ஜோடிகள் அர்ஜூன், ஜெனி, மற்றும் அக்ஷரா, பசங்க சிவக்குமார், ராகுல் சாமுவேல் உள்ளிட்டோருடன் ஆசிரம வாட்ச்மேனாக வரும் காமெடி காளி வெங்கட்டும் கச்சிதம். ஆனால், படத்தில் அடிக்கடி, காளி வெங்கட் வாயு தொல்லையால் மற்றவர்களுக்கு, குறிப்பாய் ஆசிரம சிறுவர்களுக்கு தொல்லை தருவதான காட்சிகள் காமெடி அல்ல. கடுப்பேற்றல்! ஏன் இப்படி .? இளம் இயக்குனர்கள் இது மாதிரி அறுவெறுப்பு காட்சிகளை அறவே தவிர்ப்பது தமிழ் சினிமாவிற்கும், சமூகத்திற்கும் மிகவும் நல்லது என்பது நம் கருத்து.
பவன் குமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகராகம். பின்னணி இசை ஓகே எனும் அளவில் இருக்கிறது. ஜெமின் ஜோம் அயாநாத் ஒளிப்பதிவு ஒஹோ பதிவு இல்லை என்றாலும் ஓ.கே பதிவென்பது ஆறுதல்! விஜய்யின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் ஷார்ப் பாய் கட்டிங் செய்திருக்கலாம்!
இக்கால கட்டத்தில், குழந்தைகளிடம் குறைந்து வரும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை பெரிய அளவில் க்ளைமாக்ஸில், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பெண் குழந்தை மூலம் மிக அழகாக, கட்டி இழுத்து வந்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம், கூட படம் பார்க்கும் குழந்தைகளையும் மறந்து, பெரியவர்களான பெற்றோரின் கண்களிலும் கண்ணீர் துளிகள் வரவழைக்கின்றன என்றால் மிகையல்ல! அது தான் இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி !
மேலும், ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளின் வேதனையையும், பிஞ்சு மனதிலும் மிகப்பெரிய நல்லெண்ணங்கள், விட்டுத் தரும் மனப்பான்மைகள் உண்டு என்பதையும் இப்படத்தில் அழுத்தமாக, ஆழமாக,அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கல்யாண்குமார். அதற்காகவும், அருமையான கருத்தாழமிக்க படம் தந்ததற்காகவும் அவருக்கு வாழ்த்துக்கள்... சொல்வோம்!
ஆகமொத்தத்தில் இத்திரைப்பட ஆரம்பத்தில் சில சின்ன, சின்ன குறைகள் இருந்தாலும், நிறைவான கருத்திற்காக, கதசொல்லப்போறோம் படத்தை எல்லாத் தரப்பினரும் பார்க்கலாம், ரசிக்கலாம்!
நிச்சயம் இந்த, கத சொல்லப்போறோம் - கத கேட்க தாராளமா போலாம்".