தினமலர் விமர்சனம்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் கடன்-உடன்பட்டாவது வெளிவருவதற்கு காரணகர்த்தாவான மதுரை அன்புசெழியன்., தான் சார்ந்த வட்டி தொழில் சம்பந்தப்பட்ட கதை என்பதால், முதன்முதலாக சொந்தமாக தயாரிக்க துணிந்தாரா? தன் அப்பாவின் பெயர் பிரபு அதனால், தான் வெள்ளக்கார துரை ஆவோம்... என விக்ரம்பிரபு உடனடியாக நடிக்க சம்மதித்தாரா? அல்லது இயக்குநர் எஸ்.எழில்., காமெடிதான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கலெக்சன் வெடி...என சரியாக புரிந்து கொண்டு மனம்கொத்திபறவை, தேசிங்குராஜா ஆகிய காமெடி வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இப்படத்தையும் அவுட் அண்ட் அவுட் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறாரா..? எது எப்படியோ...வெள்ளக்காரதுரை மேற்படியாளர்களின் கூட்டணியில் வெற்றி துரையாக உலாவருவது மடடும் நிச்சயம்!.
கதைப்படி., விக்ரம்பிரபு, சூரி, டாடி சரவணன் உள்ளிட்ட நான்குபேர் நெருங்கிய நண்பர்கள். வேலைவெட்டி இல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையான சூரி., மனைவி மற்றும் மாமனாரின் கொடுமை தாங்க முடியாமல் சொந்தமாக தொழில் செய்கிறேன் பேர்வழி ...என வட்டிவரதன் ஜான் விஜயிடம் 15 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கிறார். அதில் ஓர் இடத்தை வாங்கி நான்கு நண்பர்களும் இஷ்டலட்சுமி நகர் என்று பிளாட் போட்டு விற்க முயற்சிக்கின்றனர். அதற்கு, விக்ரம்பிரபு செய்யும் டி.வி.விளம்பரத்தை பார்த்து, அந்த இடத்தை மொத்தமாக வாங்குவதற்கு மலேசியா மாதவன் மதன்பாப் வரும்போது தான், தாங்கள் பிளாட் போட்ட இடம் சுடுகாடு என்பதும், தங்களுககு நிலத்தை விற்றவன், தங்களை நன்றாக ஏமாற்றிவிட்டான் என்பதும் விக்ரம்பிரபு - சூரி அண்ட்கோவினருக்கு தெரிய வருகிறது. அப்புறம்? அப்புறமென்ன..? வட்டி வரதனுக்கு வட்டியையும் கட்டமுடியாமல் அசலையும் தரமுடியாமல் நால்வரும் அடிமையாகி நாய்படாதபாடுபடுகின்றனர்.
வட்டி வரதன் வீட்டில் கடனை அடைக்க முடியாத கேரள சேட்டனி்ல் தொடங்கி பஞ்சாப் சிங் வரை...பலதரமானவர்கள் ஜாதி, மதம், மொழி, மாவட்டம், மாநிலம் கடந்து அடிமைகளாக மூன்று வேளை சோறு...முழுநேர வேலை..என கடனை கழிக்க படாதபாடுபடுகின்றனர். இந்நிலையில் அங்கு வந்து சேரும் விக்ரம்பிரபு, சூரி, டாடி சரவணன் உள்ளிட்டோர் படும்பாடும்., வட்டி வரதனையும் அவரது அடியாள் கோஷ்டியையும் படுத்தும்பாடுதான் வெள்ளக்காரதுரை படத்தின் மொத்த கதையும். இந்த கதையுடன் வட்டி வரதன் கல்யாணம் கட்டிக்கொள்ள, வட்டி பணத்திற்காக பிடித்து வந்து வைத்திருக்கும் ஸ்ரீதிவ்யாவுடனான விக்ரம்பிரபுவின் காதலையும் கலாட்டா மோதலையும் கலந்துகட்டி கலர்ஃபுல்லாக ஒரு காமெடி, காதல் படத்தை ஜனரஞ்சகமாக தந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எழில். அதை சீன் பை சீன் காமெடியாக சொல்லி கலக்கி இருப்பதற்காக எழிலுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே ஆக வேண்டும்!.
இயக்குநர் எஸ்.எழிலின் எண்ணத்தை அப்படியே வண்ணத்தில், தங்கள் பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கின்றனர் விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல், வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், கதாக. திருமாவளவன், வனிதா, மதுமிதா உள்ளிட்ட ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமும்!.
அதிலும் முருகனாக வரும் விக்ரம்பிரபு., இதுநாள்வரை தன் படங்களில் மூர்க்கனாக காட்டிய குணாதிசயங்களை கம்மி பண்ணி காமெடியனாக கலக்கி இருக்கிறார். ஸ்ரீதிவ்யாவை விக்ரம்பிரபு துரத்தி துரத்தி லவ் பண்ணும் சீன்களில் ஆகட்டும்., சூரியின் காசில் தனக்கும் தன் சங்கீத வித்வான் தந்தை எம்.எஸ்.பாஸ்கருக்கும் பப்ளிசிட்டி தேடுவதில் ஆகட்டும், ஜான்விஜய்க்கு போக்கு காட்டி ஸ்ரீதிவ்யாவுடன் ரொமான்ஸ் பண்ணுவதிலாகட்டும், சகலத்திலும் சக்கைபோடு போட்டிருக்கிறார்...
கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா., இதுவரை ஊதாகலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா., இந்த படத்திற்கு அப்புறம் கூத காத்து ஸ்ரீதிவ்யா ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. குடும்பப்பாங்காய் அம்மணி வரும் காட்சிகளில் எல்லாம்., விக்ரம்பிரபுவின் நெஞ்சத்தில் மட்டுமல்ல...நம் மனதிலும் இளமை ஊஞ்சலாடி காதல் பற்றிக்கொள்கிறது என்றால் மிகையல்ல!.
அப்பா எம்.எல்.ஏ. பாண்டி, அண்ணன்கள் வக்கீல் பாண்டி, டாக்டர் பாண்டி, நான் போலீஸ் பாண்டி எல்லோரும் அப்படி ஆக வேண்டுமென ஆசைப்பட்டார் அப்பா என சூரி காமெடி சூப்பர் பாண்டியாக ஜொலித்திருக்கிறார். இப்படத்தில் விக்ரம்பிரபு, சூரி, ஸ்ரீதிவ்யா மாதிரியே, வட்டி வரதனாக வரும் ஜான் விஜய்யும் வழக்கம்போலவே மிரட்டி இருக்கிறார். சிங்கம்புலி, நான்கடவுள் ராஜேந்திரன் இருவரும் சில சீன்களே வந்தாலும் சிறப்பாக சிரிக்கவைப்பது படத்தின் பெரிய பிளஸ்!.
ஆற்காடுல இடம் வாங்கி இருக்கிறேன்...ஏற்காட்டுல இடம் வாங்கி இருக்கிறேன். முதன்முதலா சுடுகாடுல இடம் வாங்க வைக்கப் பார்க்கறீங்களே...எனும் டயலாக்கில் தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் வரும் எழிச்சூர் அரவிந்தனின் காமெடி கொப்பளிக்கும் வசன வரிகளும், சூரஜ் நல்லுசாமியின் ஒளிரும் ஒளிப்பதிவும் டி.இமானின் இசையில் 4 பாடல்களும், எஸ்.எழிலின் இயக்கத்தில் வெள்ளக்காரதுரை படத்தின் பெரும்பலம்!.
மொத்தத்தில், விக்ரம்பிரபுவின் வெள்ளக்காரதுரை - வெற்றிவாகை சூடும் துரை! ; பெரிதாக குறை இல்லா நிறை!!.
கல்கி சினி விமர்சனம்
வேலை வெட்டி இல்லாத விக்ரம் பிரபு, சூரி இருவரும் வீட்டு மாப்பிள்ளைகள். வெட்டி பந்தா பேர்வழிகளான அவர்கள் வாழ்வில் உயரவேண்டும் என்று ஜான் விஜய்யிடம் 15 லட்சம் கடன்வாங்குகிறார்கள். அதை வைத்து ரியல்எஸ்டேட் வியாபாரம் செய்ய, அது சுடுகாட்டு இடத்தில் மாட்டிக் கொண்டு பறிபோகிறது. கடனை வசூலிக்க விக்ரம் பிரபு, சூரியை தனது வீட்டில் அடிமைபோல் நடத்துகிறார் ஜான் விஜய். அந்த நேரத்தில் ஸ்ரீதிவ்யா - விக்ரம் பிரபு காதல் மலர்கிறது. இருவரும் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். தன்னிடம் கடன்பட்ட விக்ரம் பிரபுவிடம் தன் மகள் போனதை கௌரவக் குறைவாகக் கருதி ஜான் விஜய் விரட்டுகிறார். அவரிடமிருந்து ஸ்ரீதிவ்யாவும் விக்ரம் பிரபுவும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதைக் கலகலப்பாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் எழில்.
சீறும் சுமோ, அடிதடி ஆட்கள் என மசாலா படத்துக்கே உரிய காட்சிகள் அதிகம் என்றாலும் சீரியஸ் விக்ரம் பிரபு இந்தப் படத்தில் காமெடி இளைஞனாக கலகலப்பூட்டுகிறார். சூரிக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். அவர் வந்தாலே தியேட்டரில் விசில் பறக்கிறது. ஜான் விஜய்யின் நடிப்பு ஓ.கே. ஸ்ரீதிவ்யா "ஆப்சாரியில் அழகுப் பதுமையாக ஜொலிக்கிறார்.
எழிச்சூர் அரவிந்தனின் வசனம், டி. இமானின் இசையில் முதலிரவுப் பாடலும், மீனாட்சி ஆடும் குத்து பாடலும் ரசிக்க வைக்கிறது. காமெடி படம் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் லாஜிக் இல்லை. கலகலப்பு ஒன்றையே மனதில் வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.
வெள்ளக்காரதுரை - ரசிக்கலாம்.