தினமலர் விமர்சனம்
பிரபுதேவா, ராகவேந்திரா லாரன்ஸ் வரிசையில் நடன இயக்குநர் ஸ்ரீதர் நாயகராக முயன்றிருக்கும் திரைப்படம் தான் போக்கிரி மன்னன்.
அசந்தால் அவர்களிடம் ஆட்டைய போட்டு., நண்பர்களுடன் சதாசர்வகாலமும் குடித்தபடி, உருப்படியாக எந்த வேலைவெட்டியும் இல்லாமல் திரியும் ஹீரோ ஸ்ரீதர்., ஹீரோயின் ஸ்பூர்த்தி., நீ குடிப்பியா? குடியால் தான் நான் என் அப்பாவை இழந்தேன்...என்று சொன்னதும் குடியை விடுகிறார். இச்சமயத்தில் ஸ்ரீதரின் உயிர்நண்பர் ஒருவரும் கலப்பட மதுவால் உயிர் இழக்கிறார். அவரைத்தொடர்ந்து ஸ்ரீதரின் தங்கைக்கு தாலி கட்டும்நேரத்தில் மணமகனும் கலப்பட மதுவால் அகால மரணமடைய., இதில் வெகுண்டெழும் ஸ்ரீதர், கலப்பட மது தாதாவான ரமேஷ் ரெட்டியை தேடிப்பிடித்து, எப்படி பழிதீர்க்கிறார் என்பதுதான் போக்கிரி மன்னன் படத்தின் கரு, கதை, களம், காட்சிபடுத்தல், ரசிகனை படுத்துதல்....எல்லாம்!.
நாயகர் ஸ்ரீதர், ஊர் சுற்றி பொன்னம்பலமாக, உ.பாவும் கையுமாக பாத்திரமறிந்து பளிச்சிட முயன்றிருக்கிறார். அது சில இடங்களில் ஓவர் பளிச்சிடல் ஆகி பல் இளிப்பதுதாவ் வேதனை. அதிலும், குறிப்பாக தான் பிரபல டான்ஸ் மாஸ்டர் என்பதால், நடன காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன், வித்தியாசம் காட்டுகிறேன்., பேர்வழி என ஒரு பாடல் காட்சியில் ஒத்த செருப்பை கையிலும், வாயிலும், தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி அவரும், அவருடன் ஆடும் இளைஞர் பட்டாளமும் பண்ணும் சேட்டைகள் உவ்வே ரகம்!. பாவம்., ஷாரூக்கின் லுங்கி டான்ஸ் மாதிரி இந்த செருப்பு டான்ஸூம் பிரபலமாகுமென கருதியிருப்பார் போலும் ஸ்ரீதர்!. அது ஓவர் டோஸாகி படத்திற்கு பலவீனத்தை கூட்டுவது கொடுமை. மற்றபடி., கிளைமாக்ஸ் வரை குடித்தபடி நடித்துவிட்டு, கிளைமாக்ஸில குடிக்காதே என மெசேஜ் சொல்வது., துபாய் துட்டுடன் அரசியல் ஆசையில் திரியும் சிங்கம்புலியை கரைத்து அடிக்கடி கறப்பது, நாயகியை திட்ட சொல்லி, துரத்தி துரத்தி காதலிப்பது என இயக்குநர் சொன்னதை இம்மியும் பிசகாது செய்திருக்கிறார் மனிதர்.. ரசிகன் தான் பாவம்!.
நாயகி ஸ்பூர்த்திக்கு பெரிதாக ஒரு வேலையும் கிடையாது. ஆனாலும், கிளாமரிலும், குடும்பபாங்கிலும் ரசிகனின் தேவையை ஒருசேர பூர்த்தி செய்வது ஆறுதல்!.
துபாய் ரிட்டர்ன் சிங்கம்புலியின் அரசியில் ஆசையும், அவர் தெரிந்தே ஸ்ரீதரிடமும், பெண் கவுன்சிலரிடமும் ஏமாறும் இடங்கள் சுவராஸ்யமில்லா ஹாஸ்யம்! ஸ்ரீதரின் அப்பாவாக குணசித்ர பாத்திரத்தில் வரும் மயில்சாமி, அந்தகால சாராயம் காய்ச்சும் செட்-அப்பில் போலி மது தயாரிக்கும் ரமேஷ்ரெட்டி உள்ளிட்டவர்கள் ஓ.கே.!.
ஏ.டி.இந்திரவர்மனின் இசை, சினிடெக் சூரியின் ஒளிப்பதிவு, பகத்சிங்.டி.யின் படத்தொகுப்பு எல்லாம் இருக்கிறது. இருந்தும் ராகெள மாதேஷின் எழுத்து, இயக்கத்தில், டைட்டிலில் இருக்கும் பெப் கதையிலும், காட்சிபடுத்தலிலும் இல்லாதது ஏமாற்றம்!.
ஆக மொத்தத்தில், போக்கிரி மன்னன் "போக்கிரி"யும் அல்ல "மன்னனு"ம் அல்ல! சரியான "உட்டாலங்கடி வடகறி!".