தினமலர் விமர்சனம்
நடிகர் சிபிராஜ், தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு தனிஇடம் வேண்டி தயாரித்து, நாயகராகவும் நடித்திருக்கும் புதுமையான படம்தான் "நாய்கள் ஜாக்கிரதை".
காஷ்மீர் லடாக் பகுதி இந்திய எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கி, குண்டுகளுக்கு தன் எஜமானரான ராணுவ வீரரை பறிகொடுத்து விட்டு அங்கு சுற்றி, இங்கு சுற்றி தமிழ்நாடு போலீஸில் எஸ்.ஐ.ஆக இருக்கும் சிபிராஜிடம் அடைக்கலமாகிறது அந்த உயர்ஜாதி ரக நாய். சுப்ரமணி எனும் பெயருடைய அந்த நாயை முதலில் பார்த்து மிரளும் சிபிக்கு, ஒருகட்டத்தில், தன் கடமையை செய்ததற்காக, தன் காதல் மனைவி அருந்ததியை கடத்தி உயிரோடு புதைக்கும் சைக்கோ கும்பலை கூண்டோடு பிடித்து கொன்று குவிக்க அந்த நாயே உதவுவதும்., அருந்ததியின் உயிரை காப்பாற்றி, சிபிக்காக அந்த நாய் உயிரை விடுவதும் தான் "நாய்கள் ஜாக்கிரதை" படத்தின் மிரட்டும் மீதிக்கதை!.
சிபிராஜ்., நவீன சினிமாவிற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு மிரட்டலாக நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக, துப்பாக்கி குண்டு வெடிக்கும் சப்தத்திற்கு பயப்படும் அவரது பாத்திர படைப்பு புதுமை!. சிபியின் துப்பாக்கி குண்டு சப்த பயம், நாய் சுப்ரமணிக்கும் உண்டென்று கூறும் ஓப்பனிங் நாய் பிளாஸ்பேக் சீனும், நன்றியுள்ள ஜீவனின் நடிப்பும் கூட தூள்.
சவப்பெட்டிக்குள் உயிருடன் போராடும் அருந்ததி., அழகான பெண்களை உயிருடன் சவப்பெட்டிக்குள் தள்ளி, அவர்கள் மூச்சுமுட்ட தாக்கு பிடிக்கும் நேரத்தை, காமிரா உதவியுடன் கவுன்ட்டவுன் செய்யும் சைக்கோ வில்லன் பாலாஜி(சுட்டகதையில் ஹீரோவாக சுட்டதை விட, CvÀ வில்லனாக பாலாஜி ஜொலித்திருக்கிறார், ஜெயித்திருக்கிறார்...), ஓப்பனிங் சீனில் டிடெடிக்டிவ் நாய் சுப்ரமணியுடன் ஒய்யாரமாக பனிப்பிரதேசத்தில் உலா வந்து உயிரை விடும் இளம் இந்திய ராணு வீரர் சித்து, சிபியின் தங்கச்சியாக வரும் இளம்பெண், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையாக வந்து பரிதாபமாக உயிரை விடும் அருள்.டி.ஜோதி உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம். தருண்குமாரின் இசையில், நாய் பாடல், நாயகர் பாடல், நிஷாரின் ஒளிப்பதிவு, ப்ரவீன்-ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்.இப்படத்திற்கு பெரும்பலம்.
"சிங்கம்புலி உலவுகிற காட்டுல சாதாரண நாய்க்கு பயப்படுறியே..., மூன்றாம் பிறை பட காலத்தில் இருந்து நாய்க்கு சுப்பிரமணி தானே பேரு..." உள்ளிட்ட காமெடி, கடி டயலாக்குகள், இப்படத்தில் வரும் காற்று புகமுடியாத சவப்பெட்டிக்குள் மழைநீர் புகும் ஓட்டைகள் உள்ளது மாதிரி ஒருசில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், இதையெல்லாம் சரிகட்டி, சக்தி சவுந்தர்ராஜனின் இயக்கத்தில், நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் "ரசிகர்கள் ஜாலிங்கிறதை" மெய்ப்பிக்கின்றன. பேஷ், பேஷ்!
---------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
தமிழில் இப்படி ஒரு படம் வந்து ரொம்ப நாளாயிற்று,. நாயகனையும் நாயகியையும் வில்லன் உயிருடன் சவப்பெட்டிக்குள் அடைத்து, பூமிக்குள் புதைத்து வைத்து விடுகிறான். ஆறு மணி நேரம் மட்டுமே பெட்டிக்குள் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் அந்த இருவரையும் நாயகனின் நாய் தேடியலைந்து காப்பாற்றுவதுதான் கதை.
ராமநாராயணன் டைப்பில் நாய்க்கு பஞ்ச் டயலாக், டூயட், முதலிரவு எல்லாம் வைக்காமல் பயிற்சி அளிக்கப்பட்ட நாய் என்ன செய்யுமோ அதை மட்டும் யதார்த்தமாக காட்டியதற்காகவே இயக்குநர் சக்தி எஸ் ராமனை கைகுலுக்கிப் பாராட்டலாம்.
படத்தின் "நாய்கன் அந்த நாய்தான். டைட்டிலில் கூட அதன் பெயர்தான் முதலில் வருகிறது! (இதப் பார்றா)
க்ளைமாக்ஸில் புதைக்கப்பட்ட இருவரையும் அது ஓடித் தேடி கண்டுபிடிக்கும் போது விசில் பறக்கிறது. தன் உயிரை விடும் விநாடியில் கூட நாயகி புதைக்கப்பட்ட இடத்தைக் குறியிடுவது உருக்கம்!
போலீஸ் அதிகாரி வேடம் அப்பாவைப் போலவே சிபிராஜுவுக்கும் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. மனைவியைத் தேடும் அவரது ஓட்டம் நைஸ்.
அருந்ததி ஓகே.
நாய் போலவே ஆக்ஷன் காட்டும் அந்த டாக்கி டான்ஸ் க்யூட்!
சிபியின் தங்கைதான் கடத்தப்பட்டார் என்பது போல நம்பச் செய்து, மனைவி என்று சொல்வது நல்ல டிவிஸ்ட். ஆனால் வில்லன் விஷயத்திலும் அதே ட்விஸ்டை உபயோகப்படத்தியிருக்க வேண்டாம்.
நாய்கள் ஜாக்கிரதை முன்பாதி வள் வள்! பின்பாதி வெல் வெல்!
குமுதம் ரேட்டிங் - ஓகே