தினமலர் விமர்சனம்
ஒரே ஜாதி்யை சேர்ந்த இரு பெரிய மனிதர்களுக்கு இடையேயான ஈகோ யுத்தம், இரத்த யுத்தமாக பரம்பரை பகையாக மாறும் கதையையும், இறுதியில் அதுமாதிரி இரத்தம் வேண்டாம் - யுத்தம் வேண்டாம்...எனும் தேவர்மகன் மாதிரியான மெசேஜையும் சொல்லும் படம்தான் திலகர்.
கதைப்படி., திருநெல்வேலி ஏரியா பெரிய மனிதர் உக்கிரபாண்டிக்கு தன்னை தாண்டி பெரிய மனுஷனாக வளர்ந்து வரும் இளம்வயதுகாரர் போஸ்பாண்டி மீது இனம்புரியா எரிச்சல்!. அதன் விளைவாக, போஸ் பாண்டியை, தன் மூன்று மகன்களை ஏவிவிட்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில போட்டுத்தள்ளுகிறார். அதுநாள்வரை, தானுண்டு தன் வேலையுண்டு..தன் காதலியுண்டு..என சாதுவாக வாழ்ந்து வரும் போஸ் பாண்டியின் தம்பி திலகர், அண்ணன் கொலைக்குப்பின் "சாதுமிரண்டால் காடு கொள்ளாது..." என்பதற்கு ஏற்ப உக்கிரபாண்டியின் வாரிசுகள் உயிரைப் பறிக்கிறார். போலீசில் இருந்தும், கோர்ட், கேஸில் இருந்தும் தப்பிக்கிறார். திலகரை, உக்கிரபாண்டியின் வாரிசுகளுடைய வாரிசுகள், தாத்தாவின் கண் எதிரே எப்படி தீர்த்துகட்டுகின்றனர்? என்பதும் அதை பார்க்கும் திலகரின் அண்ணன் போஸ்பாண்டியின் வாரிசு என்ன செய்கிறார்...? என்பதும் தான் திலகர் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்...!
புதுமுகம் துருவா திலகராக கத்தி, துப்பாக்கி எல்லாம் கையில் எடுக்கும் கலகராக கலக்கி இருக்கிறார். ஜெயா - மிருதுளா பாஸ்கரின் காதலராகவும், ஒருசில சீன்களில் உருகுகிறார். பின் ரசிகர்கள் உருகும் விதத்தில் உயிரை விடுகிறார். மனிதர் சாது மிரண்டால் காடு கொள்ளாது எனும் பாத்திரத்திற்கு சரியான தேர்வு!. ஜெயாவாக திலகரின் காதலியாக மிருதுளா பாஸ்கர் நச்சென்று நடித்து இருக்கிறார்.
போஸ் பாண்டியாக கிஷோர், உக்கிரபாண்டியனாக பூ ராம் உள்ளிட்டவர்கள் தங்கள் பாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றனர். படம் முழுக்க அடிதடி கத்தி, கம்பு, துப்பாக்கி வெட்டுகுத்து என்று காட்டிவிட்டு இறுதியில் மெசேஜ் சொல்வது சற்றே போரடிக்கிறது! ஆனால், அது தெரியாமல் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும், கண்ணனின் இசையும், ஜி.பெருமாள்பிள்ளையின் எழுத்து, இயக்கத்தில் திலகரை தூக்கி நிறுத்த முயன்றிருக்கின்றன என்றால் மிகையல்ல!
ஆக மொத்தத்தில், சற்றே கலகராக தெரியும் திலகர், இறுதியில் அடிதடி, வெட்டுகுத்து, கத்தி-இரத்தம் வேண்டாம் என நல்ல மெசேஜ் சொன்ன விதத்தில் அழகர்!. ஆகவே, ரசிகர்களுக்கு நல்லது சொன்ன திலகர் கலகரே என்றாலும் அழகர்!!.