தினமலர் விமர்சனம்
டி.ஆரின் "ஒருதலைராகம்" சங்கர், நீண்ட இடைவெளிக்கு அப்புறம் தமிழில் இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கும் படம் தான் "மணல் நகரம்". துபாயும், துபாய் வாழ் இந்தியர்களும் தான் இப்படத்தின் கதைக்களம் என்பதால் மணல் நகரம் எனும் பெயர். மற்றபடி, மணல் மாபியா, மணல் கடத்தல் கும்பலுக்கும், இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹி..ஹி...!
கதைப்படி, குடும்ப வறுமை காரணமாக துபாய்க்கு வேலைக்கு செல்லும் இஞ்ஜினியர் கவுதம் கிருஷ்ணாவுக்கு, தங்கள் அறையில் இடம் தருகிறார்கள் பிரஜினும், ஜெய்சியும். உடனடியாக இஞ்ஜினியர் வேலை கிடைக்காததால் ஒரு ஓட்டலின் கண் தெரியாத பாடல் குழுவில், கண் தெரியாத பாடகராக வேஷம் போடுகிறார் கவுதம். அவரது நற்குணம் கண்டு அவர் மீது காதல் கொள்ளும் ஓட்டல் முதலாளி சங்கரின் மகள் வருணா ஷெட்டி, அவருக்கு தங்கள் நிறுவனத்திலேயே நல்ல வேலை தருகிறார். கூடவே, தன் இதயத்தையும் தருகிறாள்.
பிரஜினுக்கும், அதே துபாயில் ஒரு காஸ்ட்லி ரெஸ்டாரெண்டில் வேலை பார்க்கும் தனிஷ்காவுக்கும் காதல். ஆனால், அதே தனிஷ்கா மீது அந்த ரெஸ்டாரெண்ட் முதலாளிக்கு பெரும் காமம். முதலாளியின் காமம் வெல்கிறதா? பிரஜினின் காதல் வெல்கிறதா? அதற்கு கவுதம் கிருஷ்ணா - வருணா ஷெட்டியின் காதல் எவ்வாறு விட்டுக்கொடுத்து உதவுகிறது..? என்பதை துபாய் நகர அழகியலுடன் அசத்தலாக சொல்லி இருக்கிறது "ஒருதலைராகம்" சங்கரின் இயக்கம்!.
கவுதம் கிருஷ்ணா - வருணா ஷெட்டி, பிரஜின் - தனிஷ்கா இரண்டு ஜோடியும் பாத்திரம் அறிந்து பக்காவாக நடித்திருக்கின்றனர். ஜெய்சி, இயக்குநர் சங்கர் உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கூட பலே சொல்லும் அளவு பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜெ.ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, ரணில்கவுதமின் இசை, ஆர்.வேலுமணியின் வசனம், எஸ்.பி.அகமதுவின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் ஒருதலைராகம் சங்கரின் இயக்கத்தில் மணல்நகரம் காதலும், தியாகமுமாக உருக்கமாக ஜொலித்திருக்கிறது!
வாவ்...மணல்நகரம் பிரமாண்ட பண நகரம்...நிச்சயம் ரசிகர்கள் மனங்கவரும்!!.