தினமலர் விமர்சனம்
வித்தியாசமான படங்களை இயக்கிடும் பாலாவின் தயாரிப்பில்., விறுவிறுப்பான படங்களை இயக்கிடும் மிஷ்கின் இயக்கி இருக்கும் திரைப்படம் "பிசாசு". பாலா - மிஷ்கினுக்கு பிடித்த "பிசாசு", வித்தியாசமும், விறுவிறுப்பும் விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்குமா... பார்ப்போம்.
சாலையில் டூவீலரில் சென்ற இளம்பெண் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்க, அதை பார்க்கும் ஹீரோ நாகா, துடிதுடித்துப்போய் ஒரு ஆட்டோ டிரைவரின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடுகிறார். மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதிப்பதற்குள் தன் இறுதிமூச்சுக்காற்றை, நாகாவின் கைகளை பிடித்தபடி விடும் அந்த இளம்பெண்., அப்பா என்று அழைத்தபடி உயிரை விடுகிறார். அந்த இளம்பெண்தான் பிசாசு நாயகி பிரயாகா. அவரது அப்பா ராதாரவி. ராதாரவியும் மகள் விபத்தில் சி்க்கிய செய்தி கேட்டதும்., மருத்துவமனைக்கு ஓடோடி வந்து அழுதுபுரண்டு மகளின் உடம்பை வாங்கி கொண்டு செல்கிறார். ஆனால்., நாயகி பிரயாகாவின் உயிர் எனும் ஆன்மா அலைஸ் பிசாசு., நாயகர் நாகா தனிக்குடித்தனம் இருக்கும் பிளாட்டிற்கு பேக்-அப் ஆகிறது!.
அங்கு, நாயகர் நாகாவை ஒரு பியர் கூட குடிக்க விடாமல் அந்த பிசாசு படுத்தும் பாடும், இன்னும் பல சுவாரஸ்ய சம்பவங்களும், நாகாவை அந்த பேயின் பின்னணி அறிந்துகொள்ள தூண்டுகிறது. கூடவே., நாயகி பிரயாகா பிசாசு ஆகக் காரணமான கார் டிரைவரையும் தேடி களம் இறங்கும் நாகாவிற்கு அடுக்கடுக்காக பல அதிர்ச்சி சம்பவங்களும் காத்திருக்கின்றன. அது என்னென்ன? என்பதும் நாயகர் நாகாவின் கைகளில் விபத்து ஏற்படுத்திய கொலையாளி சிக்கினானா..? என்பதற்கும் விடை சொல்கிறது பிசாசு படத்தின் பிரமிப்பூட்ட முயலும் மீதிக்கதை!.
மேற்படி, கதையுடன் நாயகர் நாகா, இளையராஜாவின் சினிமா இசைக்குழுவில் எல்லாம் வயலின் வாசிக்கும் திறமைசாலி கலைஞர் என்பதையும் , அவரது அடுத்த வீட்டில் அறிவாளி ஆட்டிச குழந்தை உள்ளதென்பதையும், கீழ்போர்ஷனில் இளம் மனைவியை கொடுமை செய்யும் குடி குடித்தனக்காரரையும், சுரங்கப்பாதையில் சிறுமி உதவியுடன் ஜீவனம் நடத்தும் மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர்களையும், அவர்களிடமும் ஆஃபிற்கும், குவாட்டருக்கும் அடித்து பிடுங்கும் ரவுடி பசங்களையும் வெரி டீசண்ட் லுக்கில் பிளாட் வாசலில் நின்றபடி, சதாசர்வநேரமும், உலகசினிமா முதல் உள்ளூர் காய்கறி விலையேற்றம் வரை பேசியபடி அகப்பட்டவர்களிடமெல்லாம் ஆட்டைய போடும் இளைஞர்களையும், மனைவிக்கு தெரியாமல் வீட்டில் பியர் பதுக்கி குடிக்கும் நடுத்தர வயதுக்காரர்களையும், டீக்கடை பெஞ்சில் பேப்பர் படித்தபடியே வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர்களையும், நாயகரின் படபட அழகான அம்மாவையும், நாயகியின் அப்பா ராதாரவியின் ஐஸ் ஃபேக்டரியையும், அதனுள் ஒரு உறைய செய்யும் உண்மையையும், கண்ணை கட்டும் கலர் -கார்கள் குழப்பத்தையும் கலந்துகட்டி பிசாசு படத்தை மேலும் பிரமாதப்படுத்த முயன்றிருக்கிறார் மிஷ்கின். அதில் சில வெகுஜன ரசிகர்களுக்கு புரியும் பல புரியாது...என்பது மிஷ்கினுக்கு புரியாமல் போனது பிசாசு படத்தின் பலமா? பலவீனமா..? என்பது இனிமேல்தான் தெரியவரும்!.
ரவிராயின் ஒளிப்பதிவு இருட்டிலும் மிளிர்கிறது. ஆரோல் கரோலியின் இசை பயப்படும்படி மிரட்டுகிறது. ஆனாலும் இதுநாள் வரை பெரும்பாலும் கெட்ட பேய்களையே பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த நல்லது செய்யும் பிசாசு, எந்தளவிற்கு பிடிக்கும் என்பது புரியாத புதிர்!.
நாயகர் நாகா, பிசாசாக வரும் நாயகி பிரயாகா, அப்பா ராதாரவி, நாயகரின் அம்மா, ஆட்டோக்காரர், நண்பர்கள், ஆட்டிச குழந்தையின் அம்மா, அப்பா, குடிகாரர் அவரது இளம்மனைவி உள்ளிட்ட எல்லோரும் இருட்டிலும் பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும், நாயகர் நாகாவின் முகத்தை காட்டிலும் பல காட்சிகளில், அவரது முகத்தை மூடி மறைக்கும் தலைமுடி, நன்றாகவே நடித்திருக்கிறது. நடிப்பை பொறுத்தவரை ஒரே குறை பிசாசு படத்தில் கருப்பு கண்ணாடியுடன் இயக்குனர் மிஷ்கின் ஒரு காட்சியில் கூட தோன்றி நடிக்காதது தான்!. ஆவி அமலா காட்சிகள் பேய் - பிசாசு பேரை சொல்லி பித்தலாட்டம் செய்பவர்களுக்கு சரியான சவுக்கடி!.
ஆனால், அந்த காட்சியில் 500 ரூபா கட்டு என்று டயலாக் வைக்காமல், ஐம்பதாயிரம் கட்டு என்ற வசன உச்சரிப்பும், ஒருகாட்சியில் ஹீரோ நாகா வீட்டு அடுத்த குடியிருப்பு அம்மணி., சரியானபாடில்லை எனும் டயலாக்கை சரியான - பாடு என்றெல்லாம் பேசுவதும், எக்ஸார்ஸிஸ்ட் ஆங்கில பேய் படத்தை அடிக்கடி வசனம் வாயிலாகவும் ஞாபகப்படுத்துவது, ராஜா ராஜா என இளையராஜா மீது தனக்கு இருக்கும் பிடித்தத்தை வசனமாக வெளிப்படுத்தி, இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க மறுத்ததை மறந்ததாக காட்டி கொள்ள மிஷ்கின் முயற்சித்திருப்பது, அடுத்தவர் வீட்டிலிருக்கும் பிசாசு - பேய் கதையை படமாக்கியிருக்கும் இவர்., செய்தித்தாள்களை ஆர்வமாக படிப்பவர்களை பார்த்து, அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பார்ப்பதில் உங்களுக்கு அப்படி என்ன.? ஆர்வம்..? என அதிகபிரசங்கிதனமாக கேட்பது உள்ளிட்ட குறைகளை களைந்திருந்தால் இயக்குனர் மிஷ்கினுக்கு பிடித்த பிசாசு எல்லோருக்கும் பிடித்திருக்கும்!.