தினமலர் விமர்சனம்
விஞ்ஞானம், விண்கல், விஞ்ஞானிகள்...என டிரைலரில் வரும் பில்டப்புகளை பார்த்து ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படமென்று போனால், வழக்கமாக காதில் பூ சுற்றும் காதல், காமெடி கதைதான் அப்புச்சிகிராமமும்!.
சிலரது பங்காளி சண்டை, பண சண்டை, ஜாதிசண்டை உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி காரணங்களால் இரண்டுபட்டு கிடக்கும் ஊர்தான் அப்புச்சி கிராமம். இந்தியாவை நோக்கி வெகுவேகமாக வரும் விண்கல் ஒன்று தமிழ்நாட்டில், அதிலும் அப்புச்சிகிராமத்தில் வழுந்து ஊரையே அழிக்கப்போகிறது...என்னும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு கண்டு ரெண்டுபட்டு கிடக்கும் ஊர்மக்கள் ஒன்று சேர்கிறார்கள்.
இதில் கஞ்சன், வள்ளல் ஆவதும், விரோதிகள் நண்பர்கள் ஆவதும், மொடாக்குடியன் குடியை மறப்பதும்., இதுநாள்வரை குடிக்காதவர்கள் ஒருநாள் குடித்து பார்ப்போம்...என கிளம்புவது உள்ளிட்ட காமெடி, சென்டிமெண்ட், லவ் எபிசோட்டுகள் நான்கைந்தை கலந்து கட்டி, அப்புச்சி கிராமத்தை கலர்ஃபுல்லாக காட்ட முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர்.வி.ஆனந்த். ஆனால், அதில் பாதிக்கு மேல் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக இருப்பது தான் அப்புச்சி கிராமத்தின் பலவீனம்!. ஆனால், அதையும் தாண்டி தன் ஆட்டுக்குட்டியை ஊர் அழியும் நேரத்தில் விட்டு வர மறுத்து போராடும் சிறுமி, காதலனுடன் சேர்ந்து சாக விரும்பும் காதலி,..உள்ளிட்ட சுவாரஸ்ய காட்சிகள் பிளஸாக மேலோங்கி நிற்கின்றன.
பிரவீன் குமார், விஷ்ணு முரளி, அனுஷா, சுவாஷிகா உள்ளிட்ட புதுமுகங்களுடன் கஞ்சா கருப்பு, ஜி.எம்.குமார், ஜோ மல்லூரி, நாசர், சுஜா வாருணி உள்ளிட்ட ஒரு பெரும்நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதில், சுஜா வாருணியின் பாத்திரமும், ஆட்டமும் படத்தில் வித்தியாசத்தையும் விறுவிறுப்பையும் கூட்டுகிறது. அதேநேரம அம்மாம் பெரிய விண்கல் விழப்போகும் மேட்டரை, தமிழக முதல்வர் மட்டுமே கையாள்வது அபத்தமாக இருக்கிறது. இந்தியாவே., ஏன்? உலகமே....இந்த விசயத்தில் மூக்கை நுழைத்திருக்க வேண்டுமே? அதுபற்றி ஒருகாட்சியும் இல்லாதது அப்புச்சி கிராமத்தை போரடிக்க செய்கிறது!.
பிரசாத்தின் ஒளிப்பதிவு, விஷாலின் பின்னணி இசை...உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள்.
புதியவர் வி.ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில் விண்கல் பற்றிய படத்தில் போதிய விஞ்ஞானம் இல்லாதது "அப்புச்சிகிராமத்தை சும்மா பூச்சி காட்டும் கிராமமாக காட்டுகிறது!".
--------------------------------------------------------------
கல்கி சினிவிமர்சனம்
சயின்ஸ் ஃபிக்ஷன் என்று தமிழில் அதிகம் தொடப்படாத சப்ஜக்ட் கையாளப்பட்டிருக்கிறது. அதற்கு முதலில் பாராட்டைத் தெரிவித்துவிடாலாம். மொத்த படத்தின் நீளத்தில் அறிவியல் புனைவுப் பகுதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அளவு மிகவும் குறைவு. கூடவே சோகையாக இரண்டு கிராமத்துக் காதல்களும் வருகின்றன. சயின்ஸ் ஃபிக்ஷன் பற்றிக் கடைசியில் இன்னொரு விஷயமும் சொல்கிறேன்.
சரி உரையாடல்? விஞ்ஞானி கிட்டி, விண் கல்பற்றிச் செந்தமிழில் கொஞ்ச நேரம் பேசுகிறார். சடாரென்று அதே காட்சியில் பேச்சுத் தமிழுக்கு மாறிப் புகுந்து விளையாடுகிறார். அவர்தான் அப்படி என்றால் ஊர் மக்கள் பேசுவதிலும் கொங்கு மண்வாசம் மிஸ்ஸிங். கொங்குத் தமிழ் தெரிந்த யாரையாவது உரையாடல் எழுதச் சொல்லி இருக்கலாம். கூடவே டப்பிங் பேசுபவர்களும் கோயமுத்தூர்க்காரர்களாக இருந்திருக்கலாம்.
ஊரிலேயே பெருந்தனக் காரருரம் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவருமான ஒருவரது வீட்டில் காரோட்ட வந்த புது இளந்தாரி, சலூனுக்குள் நுழைவதைப் போல சர்வசாதாரணமாக நுழைந்து, உறவுக்காரப் பெண்ணின் அறையில், கட்டிலில் பட்டப்பகலில் உட்கார்ந்து அந்தப் பெண்ணோடுபேசுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் அபத்தம் சிரிப்பை வரவழைக்கிறது.
நடிகர், நடிகைகள்? அச்சு அசலான கிராமத்து மக்களே பெரும்பாலும் நடித்திருக்கின்றனர். இல்லை... இல்லை... வாழ்ந்து விட்டு போயிருக்கின்றனர். மிக மிக யதார்த்தமான கதை மாந்தர் தேர்வு. ஒரு சபாஷ் போட்டே தீர வேண்டும். ஆனால் கதாநாயகன் யார் என்பதில்தான் குழப்பம். டிரைவராக ஆக்டிங் செய்பவரா? "ல்லது ஆக்டிங் டிரைவரா? தாடி வைத்திருப்பதில் இருந்து ஆக்டிங் டிரைவர்தான் கதாநாயகன் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. அதேபோல கதாநாயகி யார் என்பதிலும் குழப்பம் தான். உள்ளூர் பெண்ணா? அல்லது உறவுக்காரப் பெண்ணா? தன் காதலனை "வாடா போடா என்று பேசுவதிலிருந்து உள்ளூர்ப் பெண்ணே கதாநாயகி என்று தெளிவடையலாம்.
இயக்குநர் மாத்தி யோசித்திருக்கிறாரா? நிச்சயமாக, பெரும்பாலும் தற்போதைய அனைத்துத் தமிழ் சினிமாக்களிலும், பயத்தில் சிறுநீர் கழிப்பதைப் போல உத்தரவாதமாகக் காட்சி இருக்கும். ஆனால் அ.கி.வில் கோபத்தில் - அதுவும் ஓடுகிற ஒரு ஜீப்பிலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் இன்னொரு ஜீப் கண்ணாடி மீது - உச்சா போவதுபோல ஒரு சீன்! சான்சே இல்லை. இதே போல இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர், உட்கார்ந்த வாக்கில் விண் கல் பற்றிய கருத்துக்களைப் பேசுவதாவும் காட்சி உண்டு!
மரபுகளைப் போற்றுவது மாதிரி ஏதாவது...? என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்! திருவிழா, சம்பந்தம் இல்லாத குத்தாட்டம், அடிக்கடி மது அருந்தும் காட்சிகள், கூட்டமாகப் புகைபிடிப்பது போன்ற தமிழ் சினிமாவின் மரபுகள் இதிலும் உண்டு. மேலும் நாடகக் கலை நசித்து வருவதை உணர்ந்த இயக்குநர், பல காட்சிகளை நாடகம் போலவே படமாக்கி இருக்கிறார். ஆட்டுக்குட்டி, சிறுமி காட்சி நல்ல உதாரணம்.
சரி சரி! சயின்ஸ் ஃபிக்ஷன் பற்றிக் கடைசியில் என்னமோ சொல்வதாகச் சொன்னீர்களே?
எண்டமூரி வீரேந்திரநாத் என்பவர் "யுகாந்தம் என்று தெலுங்கில் நாவல் ஒன்று எழுதி இருக்கிறார். தமிழில் "பிரளயம் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். வானிலிருந்து ஒரு விண் கல் பூமியை நோக்கி வருவது தெரிந்த பிறகு, குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் மனத்தில் நிகழும் மாற்றங்களை விவரித்திருப்பார்.
அப்புச்சி கிராமம் சயின்ஸ்ஃபிக்ஷனைப் பற்றி கேட்டால் "யுகாந்தம் நாவலைப் பற்றிச் சொல்கிறீர்களே?
அப்புச்சி கிராமம் - யதார்த்தம்